பதிவு செய்த நாள்
13
டிச
2017
12:12
சோளிங்கர்: சோளிங்கர் பெரிய மலைக்கு, ரோப்காரில் செல்லும் வசதி, 2018 மார்ச்சுக்குள் ஏற்படுத்தப்படும் என, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறினர்.
வேலுார் மாவட்டம், சோளிங்கர் பெரிய மலையில், பிரசித்தி பெற்ற, லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு, 1,336 படிகள் ஏறிச் சென்று, பெரிய மலையில் உள்ள சுவாமியை தரிசனம் செய்ய முடியும். நடக்க முடியாத பக்தர்களுக்கு, மலையடிவாரத்தில், டோலி வசதியும் செய்யப்பட்டு உள்ளது. சாலை அமைப்பதற்கான திட்டம், கடினமானது என்பதால் கைவிடப்பட்டது. முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள், அருள் அன்பரசு, பார்த்திபன் ஆகியோர், ரோப்கார் அமைக்க, தொடர்ந்து சட்டசபையில் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தமிழக அரசு சார்பில், ரோப்கார் அமைக்க, 9.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடக்கிறது.
இது குறித்து, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் பெரிய மலைக்கு சென்று வர, 750 மீ., உயரத்திற்கு, 9.50 கோடி ரூபாய் செலவில், ரோப்கார் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணி, மார்ச்சுக்குள் முடிந்து செயல்பாட்டுக்கு வரும். அதன்பின், பக்தர்கள், 1,336 படிகள் உள்ள இந்த மலைக்கு, ரோப்காரில் சென்று வரலாம். இதில், நான்கு பெட்டிகள் கொண்ட, நான்கு ரோப்கார்கள் இயக்கப்படும். இரண்டு வண்டிகள் மேலே செல்லும் போது, இரண்டு வண்டிகள் கீழே வரும்படி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.