பதிவு செய்த நாள்
27
டிச
2017
12:12
திருத்தணி : திருத்தணி தாலுகாவில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில், வரும் ஜன.,1ம் தேதி இரவு, ஆருத்ரா அபிஷேகமும், 2ம் தேதி, ஆருத்ராதரிசனமும் நடைபெறுகிறது.
திருத்தணி அடுத்த, நாபளூர் மற்றும் அருங்குளம் காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் ஆண்டுதோறும் ஆருத்ரா அபிஷேகம் மற்றும் தரிசனம் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டிற்கான ஆருத்ரா அபிஷேகம், வரும், ஜன.1ம் தேதி, நள்ளிரவு, 12:00 மணி முதல், மூலவருக்கு விபூதி, மஞ்சள், பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு வகையான பழங்களால், அதிகாலை, 5:00 மணி வரை நடைபெறும்.
தொடர்ந்து, ஜன.,2ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, கோபுர தரிசனம் நடக்கிறது. அப்போது, கருட பகவான் வானத்தில் வந்து வட்டமிடும் என்பது குறிப்பிடத்தக்கது. காலை, 7:00 மணிக்கு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதே போல், திருத்தணி ம.பொ.சி.சாலையில் உள்ள சுந்தரவிநாயகர் கோவிலில், ஆருத்ரா வையொட்டி, ஜன.,2ம் தேதி காலை, உற்சவர் ஈஸ்வரர் மாட்டு வண்டியில் சிறப்பு அலங்கா ரத்தில் எழுந்தருளி, நகரம் முழுவதும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதே போல், திருத்தணி தாலுகாவில் உள்ள அனைத்து ஈஸ்வரன் கோவில்களிலும் ஆருத்ரா வையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் தரிசனம் நடைபெறும்.