திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், நாளை அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில்‚ நாளை சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது. இதையொட்டி, கடந்த 10 நாட்களாக பகல்பத்து உற்சவம் நடந்து வந்தது. இதன் நிறைவாக இன்று அதிகாலை 4:00 மணிக்கு, பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:00 மணிக்கு‚ திருப்பள்ளி எழுச்சி, 7:00 மணிக்கு‚ திருப்பாவை சாற்றுமறை நடக்கிறது. காலை 10:00 மணிக்கு‚ ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. மாலையில், பெருமாள் மோகன அலங்காரத்தில் எழுந்தருள்கிறார். இரவு திருமங்கை ஆழ்வார் மோட்சம், சாற்றுமறை நடக்கிறது. நாளை அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் ஆஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி‚ உடையவர் சன்னதியில் சிறப்பு பூஜைகளுடன் சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.