பதிவு செய்த நாள்
29
டிச
2017
03:12
ஆத்தூர்: கோவில்களில், சிலை கடத்தலை தடுக்க, அரசு மற்றும் தனியார் கோவில்களில், ’சிசிடிவி’ கேமரா மற்றும் அலாரம் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 529 கோவில்கள் உள்ளன. இவற்றில் உள்ள பழங்கால சிலைகளை, மர்ம நபர்கள் திருடி, வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்று, கோடிக்கணக்கில் விற்கின்றனர். இதை தடுக்க, ’அனைத்து பழமையான கோவில்களில், ’சிசிடிவி’ கேமரா மற்றும் அலாரம் பொருத்தப்படும்’ என, இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. அதன்படி, சேலம் மாவட்டத்தில், 1,300 கோவில்கள் உள்ளன. அதில், அதிக வருவாய் மற்றும் பழங்கால சிலைகள் உள்ள கோவில்களில், கேமரா மற்றும் அலாரம் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 10 ஆயிரம் முதல், இரண்டு லட்சம் ரூபாய் வரை, 3,400 கோவில்களில் வருமானம் கிடைக்கிறது; 557 கோவில்களில், இரண்டு லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை; 234 கோவில்களில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளது. அதிக வருவாய் ஈட்டும் கோவில்களில் மட்டும், கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சிலை கடத்தலை தடுக்க, அனைத்து கோவில்களிலும், கண்காணிப்பு கேமராக்களுடன், அலாரம் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம், உண்டியல் திருட்டும் தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.