பதிவு செய்த நாள்
30
டிச
2017
05:12
நாமகிரிப்பேட்டை: சீராப்பள்ளி, செவ்வந்தீஸ்வரர் கோவிலில், 10ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த, சீராப்பள்ளியில் வரலாற்று சிறப்பு மிக்க
செவ்வந்தீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த, 20 ஆண்டுகளாக சரியாக பராமரிக்காததால்,
கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வந்தது. மதில்சுவர் இடிந்தது மட்டுமின்றி, நாயன் மார்கள் மண்டபம், முருகன் கோவில் ஆகியவை இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதையடுத்து, இப்பகுதி பிரமுகர்கள் உதவியுடன், சிவன் பக்தர்கள் கோவிலை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுச்சுவர் அமைக்க குழிதோண்டும் பணி நடந்து வருகிறது. நேற்று காலை, அந்த பணியின்போது, வித்தியாசமான அளவில், பெரிய கல் ஒன்று இருந்தது. தொழிலாளர்கள், அதை பத்திரமாக மீட்டனர். அதில், தமிழில் பாடல் வரி, வேல், சூரியன், சந்திரன் உருவங்களும் இருந்தன. தகவலறிந்த, வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் துரைசாமி, சுண்ணாம்பு தடவி எழுத்துகளை உரு எடுத்து படித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: இந்த எழுத்து வகை, 10ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக் கலாம். அரசர் ஏதாவது உத்தரவு போடும் முன், இது போன்ற கல்வெட்டு அமைக்கப்படும். எனவே, இதுபோன்ற கல்வெட்டுகள் கோவில் வளாகத்திற்குள் நிச்சயமாக இருக்கும். அரசும், பழைய கோவில்களில் ஆய்வு செய்து, அவற்றை சேகரித்து, பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு என்பதால், சுற்றுவட்டார மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.