பதிவு செய்த நாள்
01
ஜன
2018
12:01
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில், மங்களநாதசுவாமி கோவிலில், நாளை ஆருத்ரா தரிசனம்நடக்கிறது. உத்தரகோசமங்கையில், மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி தாயார் கோவில் உள்ளது. இங்கு மரகதக் கல்லால் ஆன, நடராஜர் சிலை உள்ளது. இந்த சிலை, ஒலி, ஒளிகளால் சேதமடையாமல் இருக்க, சந்தனம் பூசப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆண்டிற்கு ஒரு நாள், மரகத நடராஜர் சிலையில் உள்ள சந்தனம் களையப்படும். சிவனுக்கு உகந்த, ஆருத்ரா தரிசனத்திற்கு முந்தைய நாள் களையப்பட்டு, மரகத நடராஜர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
இந்தாண்டு, ஜன., 2 நாளை, ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இதையொட்டி, ஜன.,1 ம் தேதியான இன்று, காலை 9:30 மணிக்கு, சந்தன காப்பு களையப்படுகிறது. பின், மரகத நடராஜருக்கு, 18 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சந்தானாதி தைலம் பூசப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இரவு 10:30 மணிக்கு, ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெறும். பின், கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜன., 2 ல், அதிகாலை 4:00 மணிக்கு, அருணோதய காலத்தில் சுவாமியின் திருமேனியில் சந்தன காப்பிடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.