சிவகங்கையில் கி.மு.3ம் நூற்றாண்டு பெருங்கற்கால கல்வட்டங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2018 11:01
சிவகங்கை: சிவகங்கை அருகே கி.மு. 3 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பெருங்கற்கால கல்வட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன. சிவகங்கை மாவட்டம் திருமலை அருகே நாமனுார் நாமனிக்கண்மாயின் வடக்குகரைச் சரிவில் 100 க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன. திருமலை அய்யனார் கூறியதாவது: கண்மாய்க்குள் மூன்று ஏக்கரில் இக்கற்கள் பரவி காணப்படுகின்றன. கி.மு. 1000 முதல் கி.பி. 500 வரை பெருங்கற்காலமாக இருந்தாலும், நாமனுார் பகுதியில் காணப்படும் கல்வட்டங்கள் கி.மு. 3ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை.
இதனை கர்நாடகா பிரம்மகிரியில் நடந்த அகழாய்வு மூலம் அறிய முடிகிறது. கல்வட்டங்கள் காணப்படும் பகுதியை கிராமமக்கள் மதமதக்கச்சாலை (அ) வெள்ளக்கல் பொட்டல் என்று அழைக்கின்றனர். முதுமக்கள் தாழி என்பதே திரிந்து மதமதக்கத்தாழி என்று பேச்சுவழக்கில் வந்துஇருக்கலாம். திருமலை குன்றில் வாழ்ந்தோரை தான் நாமனிக் கண்மாயில் புதைத்துள்ளனர். இக்கண்மாயில் 30 ஆண்டுகளுக்கு முன் முதுமக்கள் தாழி தோண்டியெடுக்கப்பட்டது. அவை தற்போது சிவகங்கை அருங்காட்சியகத்தில் உள்ளன. கல்வட்டங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். நாமனிக் கண்மாயை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும், என்றார்.