பதிவு செய்த நாள்
02
ஜன
2018
12:01
சூரமங்கலம்: உலக அமைதி வேண்டி, சேலத்தில், 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. சேலம், ரெட்டியூர், ஆர்.டி.நகரில் உள்ள சின்மய கைவல்யாவில், சின்மய மிஷன் சார்பாக, 16ம் ஆண்டு திருவிளக்கு பூஜை, விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனையுடன் நடந்தது. ஷாஷ்வதானந்தா சாஸ்திரிகள் முன்னிலையில் பூஜை நடந்தது. சின்மய மிஷன் தலைவர் உமாபழனியப்பன் ஒருங்கிணைத்தார்.
பூஜை குறித்து, சின்மய மிஷன் செயலாளர் காசிவிஸ்வநாதன் கூறியதாவது: உலக அமைதி, பண்பு, சமுதாய நலம், இயற்கை, கல்வி, தொழில்வளம் பெருகி அனைவரும் நலம் பெறவும், புத்தாண்டில் மக்கள் தன்னை திரும்ப உற்சாகப்படுத்தி கொள்ளவும், குடும்ப ஒற்றுமை மேலோங்கவும் பூஜை நடத்தப்பட்டது. ஆன்மஞானம் என்பது, தீபத்தை குறிக்கிறது. இந்த தீபத்தை வழிபடும்போது, நம் மனதில் உள்ள அஞ்ஞானம் என்ற இருள் நீங்கி, நம் புத்தியில் தெளிவும், ஒளியும் ஏற்படும். மேலும், உலகில் ஒரு சிறந்த மனிதனாக, ஆரோக்கியமாக, சந்தோஷமாக வாழ, தியாக மனப்பான்மை ஓங்கவும் இந்த பூஜை நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.