சிவகாமியம்மன் கோயில் தெப்ப உற்ஸவம் இந்தாண்டாவது நடத்தப்படுமா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2018 02:01
சின்னமனுார் : சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் தெப்பத்தில் தண்ணீர் நிரம்பி வழிவதால், தடைபட்டுள்ள தெப்ப உற்ஸவம் இந்த ஆண்டு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறுவது போல ஆறுகால பூஜை உள்ளிட்ட ஐதீகங்கள் இங்கு பின்பற்றப்படுகிறது. சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் திருக்கல்யாணம், தேரோட்டம் விமர்சியைாக நடக்கும். ஆண்டுதோறும் ஜனவரியில் நடைபெற்று வந்த தெப்ப உற்ஸவம் நிர்வாக காரணங்களினால் கடந்த 40 ஆண்டுகளாக நடைபெறவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக ஆர்வலர் மது என்பவர், துார்ந்து இருந்த தெப்பத்தை செப்பனிட்டு, நீர் வரத்து பாதைகளிலிருந்து அடைப்புகளை சீர்படுத்தினார். சமீபத்தில் பெய்த மழையால் தெப்பம் முழுமையாக நிறைந்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு பின் நீர் நிறைந்துள்ள தெப்பத்தில் தெப்ப உற்ஸவம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். வர்த்தக பிரமுகர் வஜ்ரவேல் கூறுகையில், ’தைப்பூசத்தன்று இங்கு நடைபெறும் தெப்ப திருவிழாவில் சுற்றியுள்ள கிராம மக்கள் திரளாக கலந்து கொள்வர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட தெப்ப உற்ஸவத்தை இந்தாண்டு நடத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.