பதிவு செய்த நாள்
03
ஜன
2018
12:01
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள், பத்மாஸனித்தாயார் கோயிலில், நிர்வாக அலட்சியத்தால் 108 திவ்ய தேசங்களின் படங்கள் அழிந்து வருகின்றன. வைணவ திருத்தலங்கள் 108 ல் 44வது தலமாக திருப்புல்லாணி ஆதஜெகநாத பெருமாள், பத்மாஸனித்தாயார் கோயில் உள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. தசரத மன்னன் புத்திர பேறு வேண்டி இங்கு யாகம் செய்ததாக கூறப்படுகிறது. பெருமையும், புராண சிறப்பும் மிக்க இந்த கோயில் கும்பாபிேஷகம் கடந்த ஜூன் 4ல் நடந்தது. அப்போது, பெருமாள் கருவறையை ஒட்டிய பிரகாரத்தை சுற்றிலும், 108 திவ்ய தேசங்களின் படங்கள் உபயதாரர்களிடம் நிதி பெற்று வரையப்பட்டது. ஆனால், ஆறு மாதங்களே ஆன நிலையில், வடக்கு பகுதியில் உள்ள திவ்ய தேசங்களின் படங்கள் முழுமையாக அழிந்துவிட்டன. மேலும், கோயில் பிரகாரங்களில் உள்ள மின் விளக்குகள் மற்றும், கோயில் முன்பு ரூ. 12 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கும் நான்கு மாதங்களாக எரியவில்லை. கோயில் கல் துாண்கள் சிதிலமடைந்து வருகின்றன.
கும்பாபிேஷகத்தின் போது இவற்றை சீரமைக்க தொல்லியல் துறை அனுமதி மறுத்துவிட்டதே இதற்கு காரணம். கோயிலில் உள்பகுதிகளும், முறையாக பராமரிப்பு செய்யப்படவில்லை. ஆண்டிற்கு இரண்டு முறை கோயில் உண்டியல் எண்ணப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் உண்டியல் எண்ணப்பட்ட போது, 12 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்தது. அதன்படி, பார்த்தால் ஆண்டிற்கு 24 லட்சத்திற்கும் மேல் வருவாய் வரும் நிலையில், கோயில் பராமரிப்பில், நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.