பதிவு செய்த நாள்
04
ஜன
2018
12:01
ஈரோடு: சைவ மாரியம்மன் கோவில் திருவிழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாநகரின் காருண்ய தேவதையாய் விளங்கும், வெட்டுக்காட்டு வலசு, சைவ மாரியம்மன் கோவில் திருவிழா டிச., 26ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கம்பம் நடப்பட்டது. திருக்குண்டம் இறங்குவற்காக வேண்டிக் கொண்ட, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்புக் கயிறு கட்டி விரதத்தை தொடங்கினர். கோவில் பூசாரி தலைமையில், அக்னி கபால ஊர்வலம், தீர்த்த புறப்பாடும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நாராயண வலசு, மாணிக்கம்பாளையம், கைகாட்டி வலசு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என, கோஷமிட்டு வணங்கினர். இதையடுத்து, பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம், அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தன. குண்டம் இறங்கும் விழாவை முன்னிட்டு, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று, கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், உற்சவர் திருவீதியுலா நடக்கிறது. நாளை, மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.