பதிவு செய்த நாள்
13
ஜன
2018
12:01
ஸ்ரீவில்லிபுத்துார்: மார்கழி என்றாலே பெண்கள் அதிகாலையில் துயில் எழுவது, வாசலில் வண்ணக்கோலங்கள் இடுவது, குளிர்ந்த நீரில் நீராடி, பிரம்மமுகூர்த்தத்தில் கோயிலுக்கு சென்று இறைவனை வணங்குவது போன்ற நியதிகளை பெண்களுக்கு வகுத்து கொடுத்தவள் ஆண்டாள். இந்நாட்களில் திருப்பாவை பாடல்களை பாடி இறைவனை நினைத்து வேண்டுவதே பாவை நோன்பு. இதன்மூலம் உடலிலும், உள்ளத்திலும் ஆன்மிகரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மனதில் நல்ல எண்ணம்,நல்ல சொல், நல்ல செயல்கள் உருவாகி, மங்ககையர்களின் வாழ்க்கையில் நல்ல வாழ்க்கை துணை அமைந்து சிறக்கும். இத்தகைய பலன்களை இன்றைய நாகரிக நங்கையர்களும் பெற்று தங்கள் வாழ்வில் நடந்திட
வழி வகுத்து தருகிறது ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள வி.பி.எம்.எம்.மகளிர் கல்லுாரி . சைவத்தில் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை,வைணவத்தில் ஆண்டாளின் திருப்பாவை பாடல்களை மங்கையர்கள் நினைவு கூறும் வகையில்,சமூகவலைதளம், இணையவழி செயல்பாட்டிலும் மூழ்கி வரும் இன்றைய பெண்களுக்கு தமிழ் கலாசார பண்பாடு, ஆன்மிக அறநெறிகளையும் கற்றுத்தருகிறது இப்பாவை விழா. இவ்விழாவில் மாணவியர்கள், ஆண்டாள்,ரெங்கமன்னார், பெரியாழ்வார், சிவன், பார்வதி, மாணிக்கவாசகர் மற்றும் 12 ஆழ்வார்கள், 63 நாயன்மார்கள் என வேடம்பூண்டு, பார்ப்பவர்கள் பரவசமடைந்து தங்களை அறியாமலே வணங்கசெய்யும் இறைவனாகவே மாறிவிட்டார்கள். அந்தளவிற்கு தத்ரூபமாக காட்சியளித்து ஆண்டாள் ரதவீதிகளில் வலம் வந்தனர். மனம் தடுமாறும் வயதில் இறைநெறி ,தமிழ் கலை, பண்பாடுகளை மனதில் புகுத்தி, இறைவேடமணிந்தபோது தான், எங்களுக்குள் எங்களை உணர்கிறோம்.
சமூகத்தில் மங்கையர்களின் மாண்புகள் எவ்வளவு புனிதமானது என்பதை அறிகிறோம். இது எங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நலன்பயக்கும் விழாவாகும், அடுத்த தலைமுறையில் காக்கபடவேண்டிய மாண்புகளை நாங்கள் எடுத்து சொல்லும் விழாவாகவும் இப்பாவை விழா உள்ளது என்கின்றனர் கல்லுாரி மாணவியர். நான் ரெங்கமன்னார் வேடமிட்டபோது, என்னை நான் ஒரு அவதாரமாக திகழ்ந்ததை உணர்ந்தேன். இது என்னுள் பக்தியையும், பிறர் வணங்கும் அளவிற்கு நற்தகுதியை வளர்த்துகொள்ள உதவும்
ரம்யா, மாணவி.
பெரியாழ்வார் வேடமிட்டது கடவுள் கொடுத்த வரப்பிரசாதமாகவே கருதுகிறேன். பெரும்பாக்கியம். பெருமையையும், சந்தோஷத்தையும் தந்தது.
சுபலட்சுமி, மாணவி.
மீனாட்சி வேடமணிந்தது குறித்து பெருமையடைகிறேன். இந்த வேடமணிந்தபின்பு மனதில் ஒரு வைராக்கியம், லட்சியத்தை உணர்ந்தேன். எனக்குள் என்னை உணர்ந்தேன். - சந்தியா,மாணவி,
நான் சத்தியபாமா வேடமணிந்தது குறித்து பெருமையடைகிறேன். இந்த வேடத்தை நான் அணிந்தபோது, என்னை அனைவரும் கடவுளாக எண்ணினர். இது மனதில் மகிழ்ச்சியை தந்தது. -சுதாலட்சுமி,மாணவி .
நான் ஆண்டாள் வேடமிட்டது ரொம்ப சந்தோஷத்தை தந்தது. எந்த கடவுள் வேடமிட்டேனோ அந்த கடவுளின் மதிப்பு எனக்கும் கிடைத்தது. இதற்கு பெரும்பாக்கியம் நான் பண்ணியிருக்கணும். -சிவகிருபா,மாணவி.