பதிவு செய்த நாள்
22
ஜன
2018
12:01
ஆர்.கே.பேட்டை: பொங்கலுக்கு அடுத்த, எட்டாம் நாள், முதல் பூஜையாக, மயில் வாகனன் பாலமுருகனுக்கு விழா எடுத்து கொண்டாடுவது பெண்களின் வழக்கம். அதன் படி, நேற்று காலை, உப்பு, மணலில் கலக்கப்பட்ட வண்ணக்கோலத்திலும், மாலையில், சுத்தமான அரிசி மாவிலும் வீட்டு வாசலில் கோலமிட்டு, பாலமுருகனை பெண்கள் வரவேற்றனர். ஆண்டின் துவக்கம் மட்டும் இன்றி, தொழிலுக்கு பூஜை போட்டு ஆரம்பிப்பதற்கு முன்பாக, மயில் வாகனத்தில் வரும் பாலமுருகனை வரவேற்கும் விதமாக, நேற்று, மயிலேரி என, அழைக்கப்படும் பூஜை நடத்தப்பட்டது.
மாலையில், வானில் நட்சத்திரம் தோன்றியதும், மயில் வாகனத்தில், பாலமுருகன் வருவதாகவும், அவரை வீட்டிற்குள் வரவேற்கும் விதமாக, வீட்டு வாசல் மற்றும் முற்றத்தில், அரிசி மாவில் கோலம் இட்டு, அலங்கரித்திருந்தனர். வீட்டிற்குள் பாலமுருகன் அடியெடுத்து நடந்து வந்ததற்கான தடயமாக, குழந்தைகளின் பாத சுவடை, அரிசி மாவில் பதித்தனர். வாசல் முதல், பூஜை அறை வரை, இந்த சுவடு, உள்நோக்கி மட்டுமே பதிக்கப்படும். வீட்டிற்குள் வந்த பாலமுருகன், அங்கேயே நிரந்தரமாக தங்கியிருப்பதாக கருதுவதால், திரும்பி செல்லும் பாத சுவடு இருக்காது. பாலமுருகனுக்கு ஒன்பது வகை காய்கறிகளுடன் படையல் வைக்கப்பட்டது. மயில் வாகனத்தில் வரும் பாலமுருகனை நினைத்து, ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், நேற்று காலை, வீட்டு வாசல்களில், வண்ண வண்ண பொடிகளால், மயில் கோலத்தால், பெண்கள் அலங்கரித்து இருந்தனர். பெருமாளை இஷ்ட தெய்வமாக வணங்குபவர்கள், பாலகிருஷ்ணனை எண்ணி, நேற்றைய பூஜையை நடத்தினர்.