பதிவு செய்த நாள்
22
ஜன
2018
12:01
நாமக்கல்: நாமக்கல், நரசிம்மர் சுவாமி கோவில், புதிய திருத்தேர் வெள்ளோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. நாமக்கல் நகரின் மத்தியில், சாளக்கிராம மலையின் மேற்குப்புறம், குடவரை கோவிலில் உக்ர நரசிம்மர் காட்சி அளிக்கிறார். மகாலட்சுமி தாயார் தவத்தால் மகிழ்ந்த நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் என்ற பெயரில், இங்கு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலின் தேர், மூன்று ஆண்டுகளுக்கும் முன் பழுது ஏற்பட்டது. அதனால், ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடக்கும் தேர்த்திருவிழாவில், ரங்கநாதர், ஆஞ்சநேயர் தேர்கள் மட்டும் இழுக்கப்பட்டன. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தேரை புதுப்பிக்க முடிவு செய்தனர். முதல் கட்டமாக தேர் பிரிக்கப்பட்டு, புதிய தேர் செய்வதற்காக கடந்த, ஏழு மாதங்களுக்கு முன் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் புதுப்பிக்கும் பணிகள் துவங்கின. அதற்கு தேவையான நிதி, உபயதாரர் மூலம் பெறப்பட்டு, திருவண்ணாமலையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், 10 பேர் கொண்ட குழுவால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்பார்வையிலேயே, சிற்பங்கள் மற்றும் தேர்கட்டும் பணி நடந்தது. கடந்த மாதம், புதிய தேர் கட்டி முடிக்கப்பட்டது. நேற்று காலை, 11:00 மணிக்கு தேர் வெள்ளோட்டம் நடந்தது. தமிழக சத்துணவு துறை அமைச்சர் சரோஜா, நாமக்கல் எம்.பி., சுந்தரம், எம்.எல்.ஏ., பாஸ்கர், சேலம் மண்டல இணை ஆணையர் வரதராஜன், உதவி ஆணையர் ரமேஷ், எஸ்.பி., அருளரசு, சப்-கலெக்டர் கிராந்தி குமார் பதி ஆகியோருடன், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. வரும் பங்குனி தேர்த்திருவிழாவில், நரசிம்மர் தேர் இழுக்கப்படும் என, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.