ஒரு முறை பெருமாளும் சிவனும் சொக்கட்டான் விளையாடினர். நடுவராக இருந்த பார்வதி, தன் சகோதரர் பெருமாளுக்கு சாதகமாக செயல்பட்டாள். கோபம் கொண்ட சிவன், பார்வதியை பூலோகத்தில் பசுவாக பிறக்கும்படி சபித்தார். பார்வதிக்கு துணையாக சரஸ்வதியும், லட்சுமியும் பசு வடிவில் உடன் வந்தனர். பசுக்களை மேய்ப்பவராக வந்த பெருமாள், “ஆமருவியப்பன்” என்ற திருநாமத்துடன் தேரெழுந்தூர் என்னும் இத்தலத்தில் வீற்றிருக்கிறார். திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலத்தில், 13 அடி உயரம்கொண்ட சாளக்கிராம கல்லால் ஆன பெருமாளுக்கு அருகில் பார்வதி பசு வடிவில் இருக்கிறாள். மார்க்கண்டேயர், பக்த பிரகலாதன் ஆகியோரும் உடனிருக்கின்றனர். திருமணத்தடை நீங்க இவரை வழிபடுவது சிறப்பு.