பிரபஞ்சத்தில் அண்டம் முழுவதும் சிவலிங்க வடிவம் தான். லோகத்தில் உள்ள ஸர்வ பதார்த்தங்களும், நல்லது கெட்டது எல்லாம் சிவ ஸ்வரூபம் என்று ஸ்ரீருத்ரம் சொல்கிறது. சிவலிங்கம் ஏன் வட்ட வடிவமாயிருக்கிறது? வட்டமான ஸ்வரூபத்திற்குத்தான் அடியும் இல்லை; முடியும் இல்லை.
ஆதியில்லை; அந்தமும் இல்லை. மற்றவர்களுக்கு உண்டு. முக்கோணத்துக்கு உண்டு. சதுரத்துக்கு உண்டு. ஆதியந்தம் இல்லாத ஒரே வஸ்து சிவம் என்பதை லிங்காகாரம் காட்டுகிறது. சரியான வட்டமாக இல்லாமல் சிவலிங்கம் நீள்வட்டமாக இருக்கிறது. பிரபஞ்சமே எல்லிப்டிக் காகத்தான் இருக்கிறது. நம் சூரிய மண்டலத்தை எடுத்துக் கொண்டாலும் கிரகங்களின் அயனம் நீள்வட்டமாகத் தான் இருக்கிறது, என்று நவீன விஞ்ஞானத்தில் சொல்வதும், பிரம்மாண்டமும் ஆவிஸ்புரத் என்று சாஸ்திரம் சொல்வதும் சிவலிங்க ரூபத்துக்கு ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறது. அகங்காரம் சிறிதுமில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால் வெகுசுலபத்தில் சிவன் நமக்கு அகப்பட்டு விடுவார். சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற சிவலிங்க ரூபத்தை அப்படி, ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கியிருக்கவேண்டும். இதைவிட ஆனந்தம் வேறில்லை. -சொல்கிறார் காஞ்சிப் பெரியவர்