பதிவு செய்த நாள்
09
பிப்
2018
02:02
மீனாட்சி அன்னையுடன் சுந்தரேஸ்வரர் நேரடியாக ஆட்சி செய்யும் இடம் மீனாட்சி கோயில். இத்தனை பெருமை உள்ள கோயிலை நாம் பயபக்தியுடன் பாதுகாக்க வேண்டும். சிவனடியார்கள் பாதம் பட்ட கோயில் இன்று வியாபாரத்தலமாகி விட்டது. கோயிலுக்குள் பக்தர்களை அலைபேசியுடன் அனுமதிக்கக் கூடாது. கோயிலில் பக்தி இசை நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தினால் இறைவனின் மனம் குளிரும். அவர் மனம் குளிர்ந்தால் எந்த அசம்பாவிதமும் நடக்காது.
- ஆர்.பூமிஜா, இசை சொற்பொழிவாளர், மதுரை.
கோயிலில் வாஸ்து தோஷம்: மீனாட்சி கோயிலின் தெற்கில் பொற்றாமரை குளம் அருகில் அக்னி மூலை திறந்து கிடக்கிறது. அது திறக்கப்பட்ட நாள் முதல் இடி, தீ என தொடர்ந்து விபத்து நடந்து வருகிறது. கோயிலில் அக்னி வளர்ச்சி இருக்கக் கூடாது. தரிசனத்திற்கு செல்லும் போது ஈசான நடைபாதையில் சுவாமி தரிசனம் செய்தால் தான் நல்லது. கோயிலில் இருக்கும் வாஸ்து தோஷங்களை வாஸ்து நிபுணர்களை கொண்டு உடனே சரி செய்ய வேண்டும்.
- டி.லோகேஷ், பொறியாளர், மதுரை.
விளக்கேற்ற பொது இடம்: மீனாட்சி கோயிலில் சூடம் ஏற்ற தடை விதித்தது போல விளக்கு ஏற்றுவதையும் முறைப்படுத்த வேண்டும். பிரதோஷம், ராகு காலம் போன்ற நாட்களில் தீபத்தை பற்ற வைத்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமிகளுக்கு காட்டும் போதும், சுற்றும் போதும் யார் மீதும் நெருப்பு பற்றிவிடுமோ என திகிலாக இருக்கும். தனித்தனியாக சன்னதிகளுக்கு விளக்கேற்றும் முறைக்கு தடை விதித்து ஆடிவீதியில் ஒரு பொது இடத்தில் விளக்கேற்றும் இடம் அமைக்கலாம். இதுவும் தீ தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்று என்பதை கோயில் நிர்வாகம் உணர வேண்டும்.
- என்.சாந்தினி, மதுரை.
குப்பை லாரியை அனுமதிக்க கூடாது: கோயில்களை புனித இடங்களாக கருதுவதால் பக்தர்கள் சுத்தமாக வருகின்றனர். ஆனால் கோயிலுக்குள் செயல்படும் கடைகளால் அசுத்தம் ஏற்படுகிறது. கோயில் பிரசாதங்களை வாங்கி சாப்பிடும் சிலர் மட்டுமே இலைகள், பேப்பர்களை குப்பைத் தொட்டியில் போடுகின்றனர். மற்றவர்கள் அப்படியே விட்டு செல்வதுடன், பிரசாதங்களை ஆங்காங்கே சிதறி விடுகின்றனர். மேலும் கோயிலுக்குள் சேரும் குப்பையை கிழக்கு ஆடி வீதியில் வன்னிமரத்தடி விநாயகர் கோயிலுக்கு எதிரில் குவித்து வைத்துள்ளனர். இதனால் கோயிலுக்குள் துர்நாற்றம் வீசுகிறது. இதை அப்புறப்படுத்த மாநகராட்சி குப்பை லாரிகளை கோயிலுக்குள் அனுமதிக்கின்றனர். குப்பை லாரி நகரில் எங்கெல்லாம் சென்று வருகிறது என தெரிந்தது தான். குப்பையை எடுத்து செல்லும் போது அதிலிருந்து சிதறுவதால் ஊழியர்கள் இரு முறை அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. குப்பையை கோயிலுக்கு வெளியில் ஊழியர்கள் குவிக்கவும், அங்கிருந்து லாரிகள் மூலம்அகற்றவும் இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.ஐஸ்வர்யா, குடும்பத்தலைவி, மதுரை
மதுரை மீனாட்சி கோயில் நமது பொக்கிஷம். இக்கோயிலை இயற்கை சீற்றம், விபத்துக்கள், சுற்றுச்சுழல் மற்றும் சுகாதார சீர்கேட்டில் இருந்து காப்பது நம் கடமை. மீனாட்சி கோயிலின் பழம்பெருமை, புராதனம் காக்க விரும்பும் வாசகர்கள், பல்துறை வல்லுனர்கள் அதற்கான ஆலோசனைகளை மீனாட்சி கோயிலை காப்போம், தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், தினமலர் அவென்யூ, மதுரை 625 016 என்ற முகவரிக்கு தங்கள் புகைப்படத்துடன் அனுப்பலாம். mdureporting@dinamalar.in