கா.புதுப்பட்டியில் சமபந்தி போஜனம்: 77 ஆண்டுகளாக பாரம்பரிய வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2018 11:02
வடமதுரை: வடமதுரை அருகே கா.புதுப்பட்டியில் 77-வது ஆண்டாக கிராம மக்கள் திருவிழா போல சமபந்தி போஜனம் நடத்தினர்.மதுரை மாவட்டம் அழகர்கோவிலை அடுத்த பில்லிச்சேரியில் 1874ல் பிறந்தவர் சபாபதி. தனது 16வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி வடமாநிலத்திற்கு சென்றார். அங்குள்ள திருத்தலங்களை தரிசித்துவிட்டு வடமதுரை வந்தார்.பின்னர் காணப்பாடி கிராமம் புதுப்பட்டியில் கள்ளிமரத்தடியில் தங்கிய அவர் மீது மட்டும் மழை நீர் பெய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
மகாசமாதி அடைந்தவர்: அவரிடம் ஏதோ மகத்துவம் இருப்பதாக எண்ணி பக்தி கொண்ட மக்கள், கள்ளியடி சுவாமிகள் அழைத்தனர். அங்கேயே தங்கி கிராம நலனுக்காக பல நல்ல காரியங்களை செய்து வந்த அவர் 21-1- 1941ல் சமாதி அடைந்தார்.அவரது நினைவாக இங்கு கோயில் கட்டிய கிராம மக்கள், ஆண்டுதோறும் சமபந்தி போஜனம் நடத்துகின்றனர். 77-வது ஆண்டாக நடந்த சமபந்தியில் 2,800 கிலோ அரிசி, 330 கிலோ புளி,, 270 கிலோ நிலக்கடலை பருப்பு பயன்படுத்தி புளியோரை தயார் செய்தனர். சுற்றுப்பகுதி மக்கள், வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கில் கிராமம் முழுவதும் பரவலாக தரையில் அமர்ந்தனர். வழிபாடு முடிந்ததும், கிராம இளைஞர்கள் ஒருசேர அனைவருக்கும் புளியோதரை வழங்கினர். இப்பணி முடிந்ததும் ஒருசேர அனைவரும் அரோகரா கோஷம் எழுப்பி கலைந்து சென்றனர்.இரவு மின்அலங்கார ரதத்தில் ஊர்வலம், கலை நிகழ்ச்சியும் நடந்தது.