பதிவு செய்த நாள்
10
பிப்
2018
01:02
சென்னை: கோவில்கள் பாதுகாப்புக்கு என, அறநிலையத்துறை சார்பில், ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது, என, அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.கோவில்களில், தீ தடுப்பு நடவடிக்கை, கட்டட உறுதித்தன்மை உள்ளிட்ட விஷயங்கள் பற்றி விவாதிக்க, அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், அறநிலையத்துறை அமைச்சர், ராமச்சந்திரன் பேசுகையில், கோவில்களை பழமை மாறாமல் பாதுகாக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். கட்டட உறுதித்தன்மை, மின் இணைப்புகளின் தரம் போன்றவற்றை ஆய்வு செய்ய, குழு ஏற்படுத்தப்படும். கோவில் வளாகத்திலும், சுற்றுப்புறத்திலும், பாதுகாப்பிற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை, மூன்று மாதத்திற்குள் அகற்ற வேண்டும், என்றார்.பின், அமைச்சர் அளித்த பேட்டி:கோவில்களில், ஆகம விதிகளின் படியும், அந்தந்த கோவில் பஞ்சாங்க வழிகாட்டுதல் படியும், திருவிழாக்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு பின், கோவில்களின் பாதுகாப்புக்காக, ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இனி, இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கோவில் சொத்துகள், சிலைகள் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏழு ஆண்டுகளில், தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட, 2,653 ஏக்கர் நிலம், மனைகள், கட்டடங்கள் என, 3,354 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.சிலைகள் பாதுகாப்பு குறித்து, சில வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. சிலை பாதுகாப்பு மையங்களில், எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.அறநிலையத்துறை ஆணையர், ஜெயா, கூடுதல் ஆணையர்கள், கவிதா, திருமகள், சுதர்சன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.