பதிவு செய்த நாள்
10
பிப்
2018
01:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டபத்தில், தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, விரிசல் ஏற்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு கருதி, 30 லட்சம் ரூபாய் செலவில் இரும்பு கர்டர்களால் முட்டுக்கொடுக்கப்பட்டு வருகின்றன.இம்மண்டபத்தில், 2ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. மேற்கூரையின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்தது.
மண்டபத்தையொட்டி உள்ள ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்டவை, ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இதனால் சுற்றியுள்ள மண்டபங்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதால், இரும்பு கர்டர்களை வைத்து முட்டுக்கொடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, கோவில் நிர்வாகம், 30 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளது.கோவில் பாதுகாப்பு குறித்து, சென்னையில் நேற்று அறநிலையத் துறை அமைச்சர், ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.இதற்கிடையே, 3ம் தேதி முதல் நேற்று வரை, அம்மனுக்கும், சுவாமிக்கும் தினமும் பரிகார பூஜை செய்யப்பட்டு வந்தது. ஆனாலும், 6ல் வீரவசந்தராயர் மண்டப பகுதியில், மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்தது. நேற்று முன்தினம் இரவு கோவில் கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்கும் அறையில், சிறிய தீ விபத்து ஏற்பட்டது.தொடர்ந்து அடுத்தடுத்து அசம்பாவிதம் நடந்து வருவது பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை பரிகார பூர்த்தி பூஜை செய்யப்பட்டு, அம்மன், சுவாமிக்கு அபிேஷகம் செய்யப்பட்டது.