பதிவு செய்த நாள்
14
பிப்
2018
01:02
சென்னை: கோவில்களில், தீ விபத்துகளை தடுக்க, தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைக்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், கோவில் மதில் சுவரை ஒட்டியுள்ள கடைகளை அகற்றவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், விபத்துகளை தடுக்க, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம், சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. அதில், முதல்வர் வழங்கிய அறிவுரைகள் குறித்து, அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில், முதுநிலை அந்தஸ்து உடைய பெரிய கோவில்களில், தீ தடுப்பு நடைமுறைகளை, உடனடியாக தணிக்கை செய்ய வேண்டும்.அதற்கு தேவையான வல்லுனர்கள் மற்றும் நிதி தேவை குறித்து, அறிக்கை தயார் செய்ய வேண்டும். அதை, தலைமைச் செயலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை செயலர்கள் அடங்கிய குழுவிடம், இரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும். அதை, அவர்கள் பரிசீலித்து, முதல்வரிடம் வழங்க வேண்டும்.கோவில் வளாகத்திற்கு உள்ளும், கோவில் மதில் சுவரை ஒட்டியும் அமைந்துள்ள கடைகளை, உரிய வழிமுறைகளை பின்பற்றி, அகற்ற வேண்டும்.மேலும், அவ்வாறு அகற்றப்பட்ட கடைகளை, வேறு இடங்களில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆராய வேண்டும்.முதுநிலை கோவில்களில், புராதன அடையாளம் பாதிக்காமல், தரமான மின் இணைப்பு தர வேண்டும்.பக்தர்கள், விளக்கு ஏற்ற எடுத்து வரும் நெய் மற்றும் எண்ணெய் ஆகியவற்றை சேகரித்து, பயன்படுத்த வேண்டும். தீ அணைப்பு கருவிகள் சரியாக உள்ளதா என, சோதனை செய்ய வேண்டும்.ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும். தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.