பதிவு செய்த நாள்
14
பிப்
2018
01:02
மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த தீ விபத்திற்கு அலட்சிய போக்கு தான் காரணம். இனியாவது கோயில் அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும். தீ விபத்தில் சேதமடைந்த மண்டபத்தை பழமை மாறாமல் ஆகம விதி களுக்குட்பட்டு புனரமைக்க வேண்டும். கோயிலிலுள்ள பிரசாத கடைகளையும் வெளிப்புறத்தில் அமைத்தால் நல்லது. ஏற்கனவே 12 நட்சத்திரங்களுக்கு ஏற்ற செடிகள், கடம்பமரம் போன்றவை வளர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கோயிலை சுற்றி நந்தவனம் அமைத்து வில்வம், கடம்பம், பூ, மூலிகைச் செடிகளை வளர்க்க வேண்டும். மேலும் கோயிலுக்கு சொந்தமான பல இடங்கள் வெளியிடங்களில் உள்ளன. அங்கு நந்தவனம் அமைத்து அதில் கிடைக்கும் பூக்களை கோயில் வளாகத்தில் அர்ச்சனைக்கு விற்பனை செய்யலாம். இதனால் பக்தர்கள் குறைந்த கட்டணத்தில் தரமான பூக்களை பெற முடியும். -சீனிவாசன், மருந்து வணிகர் சங்க நிர்வாகி, மதுரை
கூட்டத்தை சரி செய்யலாம்: மீனாட்சி அம்மன் கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் பெரியளவில் விபத்து நடக்காமல் இருக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோயிலை எப்போதும் சுத்தமா வைச்சுக்கனும். இங்கே இருக்குற மாதிரி ராஜஸ்தான் கோயிலில் ஓவர் கூட்டம் இருக்காது, அப்படியே இருந்தாலும் அதை உடனே சரி பண்ணிடுவாங்க. கோயிலுக்குள் கடைகள் எல்லாம் இருக்கவே இருக்காது. இந்த மாதிரி கோயிலை பத்திரமா பார்த்துக்க வேண்டியது நம் கடமை என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். - சி.ரேணு, ராஜஸ்தான்.
அழகான மீனாட்சி அம்மன்: நாங்கள் மீனாட்சி அம்மன் கோயிலை பார்க்க மகாராஷ்டிராவில் இருந்து விஷ்ணு மகாராஜ் கேந்திரே சுவாமி தலைமையில் ஒரு குழுவா வந்திருக்கோம். எங்க குழுவில் மொத்தம் 550 பேர் இருக்காங்க, இது தான் எங்களுக்கு முதல் விசிட். அம்மனை பார்க்க, பார்க்க அப்படியே பரவசமா இருக்கு, அவங்க அத்தனை அழகு. இங்கே தீ விபத்து ஏற்பட்டது குறித்தும் கேள்விபட்டோம், ரொம்ப கஷ்டமா இருந்தது. இவ்வளவு அருமையான கோயிலை நம்ம கண் மாதிரி பார்த்துக்கனும். அதுக்காக என்னவெல்லாம் செய்யணுமோ அதை எல்லாம் செய்யணும். எங்க ஊர் கோயில்களில் பாதுகாப்பு அம்சங்களை முறையாக செஞ்சு இருக்காங்க, சுத்தமாகவும் வைச்சிருக்காங்க. ஆனால் இங்க அப்படி இல்லையே!
-எம்.சோனாலி படுவாலா, மகாராஷ்டிரா
பராமரிக்க குழு அமைக்க வேண்டும்: மீனாட்சி கோயில் ஆயிரங்கால் மண்டபம் மற்றும் புராதன சிலைகளை பராமரிக்க சமூக அக்கறை கொண்டு மாணவர்கள் குழு ஒன்றை உருவாக்கலாம்.நான்கு கோபுர வீதிகளில் கனரக வாகனங்கள் செல்ல எப்படி தடை விதிக்கப்பட்டதோ அதே போல் வெடிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும். சிறு வியாபாரிகள் கோயிலுக்கு வெளியே பூஜை பொருட்களை விற்க அனுமதி வழங்கலாம்.பிரசாதம் தயாரிப்பு கூடத்தையும் கோயிலுக்கு வெளியே மாற்றி வைக்கலாம். இப்படி செய்தால் அவனி உள்ளவரை அம்மன் ஆலயத்தில் விபத்து ஏற்படாது. - அ.ஜான் பெலிக்ஸ் கென்னடி, ஆசிரியர், மதுரை.
மதுரை மீனாட்சி கோயில் நமது பொக்கிஷம். இக்கோயிலை இயற்கை சீற்றம், விபத்துக்கள், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேட்டில் இருந்து காப்பது நம் கடமை. மீனாட்சி கோயிலின் பழம்பெருமை, புராதனம் காக்க விரும்பும் வாசகர்கள், பல்துறை வல்லுனர்கள் அதற்கான ஆலோசனைகளை மீனாட்சி கோயிலை காப்போம், தினமலர்,டி.வி.ஆர்., ஹவுஸ், தினமலர் அவென்யூ, மதுரை - 625 016என்ற முகவரிக்கு தங்கள் புகைப்படத்துடன் அனுப்பலாம்.
mdureporting@dinamalar.in