பதிவு செய்த நாள்
15
பிப்
2018
01:02
திருப்பூர்:பழங்கால கோவில் சிற்ப கலை அம்சத்துடன் பிரமாண்டமாக திருப்பணி செய்யப்பட்டுள்ள, கீரனூர் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்வரும், 25ல் கோலாலகமாக டக்கிறது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகேயுள்ள கீரனூரில், ஆயிரம் ஆண்டு பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான, ஸ்ரீ செல்வநாயகி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் எழுந்தருளியுள்ள செல்வநாயகி அம்மன், கீரனூர் காணியாளர்கள், ஆதி, அந்துவான், காடை, விளையன், தேவேந்திரன், கீரை ஆகிய ஆறு குலத்தை சேர்ந்த மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.
கீரனூர் நந்தி விநாயகர் கோவிலுக்கு எதிரே உள்ள குத்துக்கல் ஒன்றில், விஜயநகர மன்னர் அச்சுத தேவராயர் காலத்தில், கீரனூர் காணியாளர்கள் ஆறு பேரும்சேர்ந்து அளித்தனர் என்ற தகவல் உள்ளது. அதே போல், 1529ல், ஆறு குலத்தாரும் கோவிலுக்கு அளித்த கொடை குறித்து, விநாய கர் கோவில் எதிரில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெருமை வாய்ந்த, செல்வநாயகி அம்மன் கோவில், ஆகம விதிப்படி, அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுடன், பழமையான கல் கோவில் உள்ளது போல், தற்காலத்தில், பல சிறப்பான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை, எழிலுற உருவாக்கப்பட்டுள்ளது. முழுவதும் கற்கோவில், அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள், நேர்த்தியான கலை அம்சம் என, கோவிலின் ஒவ்வொரு பகுதியும், பழங்கால கோவிலை நினைவு படுத்தி, புதிய கோவிலா என வியக்கும் வண்ணம் அமைந்துள்ளது. ஐந்து நிலையுடன், 71 அடி ராஜகோபுரம், ஆறு குல காணி மக்களுக்கு, ஆறு குதிரைகள், தங்க முலாம் பூசிய கொடிமரம், கிழக்கு கோபுரம், திருமதில், சுற்றுப்பிரகார மண்டபம் என, காண்போர் பிரமிக்கும் வகையில், செல்வநாயகி அம்மன் கோவில் ஆறு குல காணி மக்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் வரும், 19ல் துவங்குகிறது. சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஆறு கால பூஜைகள் நடக்கிறது. வரும் 25ம் தேதி, காலை, 6:30க்கு மேல், 7:30க்குள், மகா கும்பாபிஷகம் நடக்கிறது. இதற்காக, பிரமாண்ட யாக சாலை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. அருகிலுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஆதீஸ்வரசுவாமி கோவில், கும்பாபிஷேகம், காலை, 5:30 முதல், 6:30 வரை நடக்கிறது.