பதிவு செய்த நாள்
21
பிப்
2018
01:02
மதுரை: ’மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிலும் உள்ள விதிமீறல் கட்டடங்களுக்கு, ’நோட்டீஸ்’ அனுப்பி, மேல் நடவடிக்கை குறித்து, மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்த மனுவில், ’மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், பாதுகாப்பை பலப்படுத்த, 2009ல் மத்திய அரசு அறிவுறுத்தியது. ஆனால், மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை.கோவிலில், பிப்., 2ல் தீ விபத்து ஏற்பட்டது.
முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள தவறிய அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதிகள், ’மீனாட்சி அம்மன் கோவிலுக்குள், பக்தர்கள் அலைபேசி கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது. அலைபேசிகளை சேகரித்து, பாதுகாத்து வைக்க, தனி ஏற்பாடுகளை செய்ய வேண்டும்’ என, 9ம் தேதி உத்தரவிட்டனர்.நேற்று இந்த வழக்கை, நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி அமர்வு விசாரித்தது. மனுதாரர் வழக்கறிஞர்: நீதிமன்ற உத்தரவுப்படி, அலைபேசிக்கு தடை விதிக்க, கோவில் நிர்வாகம் தவறி விட்டது. தீத்தடுப்பு கருவிகளை நிறுவவில்லை. ஊழியர்களுக்கு தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை பயிற்சி அளிக்கவில்லை.அரசு வழக்கறிஞர்:அலைபேசிகளுக்கு தடை விதிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அலைபேசிகளை பாதுகாத்து, ஒப்படைக்கும் ஏற்பாடுகள், இரண்டு வாரங்களில் முடியும்.மனுதாரர் வழக்கறிஞர்: கோவிலைச் சுற்றிலும், விதிமீறல் கட்டடங்கள் உள்ளதா என ஆய்வு செய்ய, உயர் நீதிமன்றம், 2014ல் வழக்கறிஞர் கமிஷனர் குழுவை அமைத்தது.ஆய்வில், 547 விதிமீறல் கட்டடங்கள் உள்ளதாக அறிக்கை சமர்ப்பித்தது. சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு, இதுவரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பவில்லை. எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
நீதிபதிகள்:அலைபேசிகளை பாதுகாக்கும் அறைகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணியை மேற்கொள்ள, இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதி நவீன தீத்தடுப்பு கருவிகளை நிறுவ வேண்டும்.கோவில் சுற்றுச் சுவரில் இருந்து, 1 கி.மீ., சுற்றளவில், 9 மீ., உயரத்திற்கு மேல், கோபுரங்களை மறைக்கும் வகையில் உள்ள விதிமீறல் கட்டடங்களுக்கு, மாநகராட்சி உடனடியாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இது பற்றி மாநகராட்சி கமிஷனர், இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.