பதிவு செய்த நாள்
02
மார்
2018
01:03
ஓசூர்: ஓசூரில் நடந்த சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் தேர்த்திருவிழாவில், மூன்று மாநிலத்தை சேர்ந்த, லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால், ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது, மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் தேரோட்ட திருவிழா, கடந்த, 22 இரவு, 7:00 மணிக்கு, அங்குரார்பணம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று காலை, 10:45 மணிக்கு நடந்தது. அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், பா.ஜ., மாநில இளைஞர் அணி செயலாளர் நாகராஜ், மாவட்ட கலெக்டர் கதிரவன், ஓசூர் சப்-கலெக்டர் சந்திரகலா மற்றும் பொதுமக்கள் ஆகியோர், நமசிவாய கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விநாயகர் தேர் முன்னே செல்ல, சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பிகை அம்மன் தேர் பின்தொடர்ந்து சென்றன. மூன்று தேர்களின் மீதும், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என, மூன்று மாநிலத்தில் இருந்து வந்த, லட்சக்கணக்கான பக்தர்கள், உப்பு, வாழைப்பழம், மிளகு, ஆமணக்கு விதை ஆகியவற்றை எரிந்து, நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, ஓசூர் நகர் முழுவதும் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், ஆங்காங்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர்கள், மாலையில் நிலையை அடைந்தன. தொடர்ந்து சுவமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஓசூர் நகரமே நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.