பதிவு செய்த நாள்
02
மார்
2018
03:03
நாகர்கோவில்: கேரளா, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடந்த மாசிப் பொங்கல் விழாவில், ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
திருவனந்தபுரம், பத்மனாப சுவாமி கோவிலில் இருந்து, 2 கி.மீ., தூரத்தில் உள்ளது, ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில். மதுரையை எரித்த கண்ணகி, கொடுங்கல்லூர் செல்லும் வழியில், திருவனந்தபுரம் கிள்ளியாற்றின் கரையில் தங்கியதாகவும்; அங்கு முதியவர் கனவில் வந்து, தனக்கு இங்கு ஒரு கோயில் கட்டும்படி கூறியதாகவும், வரலாறு கூறுகிறது. இங்கு விழா நடக்கும், 10 நாட்களும், கண்ணகியின் வாழ்க்கை வரலாறு, பாடலாக பாடப்படும்.
பெண்களின் வழிபாட்டுக்கு பெயர் பெற்ற இங்கு, மாசி மாதம், 10 நாள் விழாவில், பூரம் நட்சத்திரத்தில் பொங்கல் வைபவம் நடக்கும். அதன்படி இன்று ஏராளமான பெண்கள், ஒரே நேரத்தில் பொங்கலிட்டனர். காலை கோவில் முன்புறம் உள்ள அடுப்பில், மேல்சாந்தி தீ வளர்த்ததும், பெண்கள் பொங்கலிட்டனர். கோவிலை சுற்றி பல இடங்களிலும் பொங்கல் வழிபாடு நடந்தது. மாலையில், பூசாரிகள் சென்று, பொங்கலை அம்மனுக்கு நைவேத்யம் செய்தனர். விழாவுக்காக, சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.