பதிவு செய்த நாள்
05
மார்
2018
01:03
திருத்தணி: கோடை வெயில் கொளுத்துவதால் பக்தர்களின் வசதிக்காக, திருத்தணி முருகன் மலைக்கோவிலில், வெள்ளை வண்ணம் தீட்டிய இடத்தில், தரைவிரிப்பு (மேட்) போடப்பட்டுள்ளது.திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர். தற்போது, வெயில் கொளுத்துவதால், பக்தர்கள் மலைக்கோவில் மாடவீதியில் நடப்பதற்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக, காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, மாட
வீதியில் பக்தர்களின் கால்கள் சுடுவதால், குளிர்ச்சியாக இருக்க, கோவில் நிர்வாகம், மாடவீதியை சுற்றிலும், கடந்தாண்டு வெள்ளை வண்ணம்தீட்டினர். தற்போது வெயில் அதிகரித்து, பக்தர்களுக்கு கால்கள் சுடுவதால், கோவில் நிர்வாகம் தேங்காய் நாரிலான கால்விரிப்பு (மேட்) அமைத்துள்ளனர்.கோடை காலத்தில், தமிழகத்திலேயே திருத்தணியில் தான் அதிகம் வெயில் கொளுத்துவதாலும், மலைக்கோவிலில் கடுமையான வெப்பம் உள்ளதாலும், கோவிலை சுற்றி மாடவீதியை சுற்றியும், கடந்தாண்டு, 1.27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், குளிர்ச்சி தரும் வெள்ளை வண்ணம் அடிக்கப்பட்டது.தற்போது, இதையடுத்து, கோவில் பொதுநிதியில் இருந்து, 2.05 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தேங்காய் நாரால் தயாரிக்கப்பட்ட கால் தரைவிரிப்பு (மேட்) மாடவீதி சுற்றியும் போடப்பட்டு உள்ளது.மொத்தம், 6 அடி அகலமும், 400 மீட்டர் நீளமுள்ள தரைவிரிப்பான் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைவிரிப்பின் மேல், பக்தர்கள் நடந்து செல்வதால், வெயில் தாக்கம் குறையும். இதுதவிர அடுத்த மாதம் முதல், வெயிலில் இருந்து பக்தர்களை தப்பிக்க கோவில் சார்பில் நீர்மோர் வழங்கப்பட உள்ளது.