பதிவு செய்த நாள்
23
மார்
2018
11:03
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த கிருத்திகை விழாவில், பக்தர்கள் பொது வழியில், இரண்டு மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, பங்குனி மாத கிருத்திகை விழா நடந்தது. விழாவையொட்டி, அதிகாலை, 4:45 மணிக்கு, மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க வேல், தங்க கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின், காலை, 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. மாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சாய்ரட்சை பூஜையும், இரவு, 7:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்திருந்ததால், பொதுவழியில், இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்தும், காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் முருகப் பெருமானை வழிபட்டனர். இதே போல், திருத்தணி, நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள கோட்ட ஆறுமுக சுவாமி கோவில் மற்றும் அருங்குளம் கூட்டுச்சாலையில் உள்ள சத்திய சாட்சி கந்தன் ஆகிய கோவில்களில் கிருத்திகை விழாவையொட்டி, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில் வண்ண மலர்களால் அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் வழிபட்டனர்.