பதிவு செய்த நாள்
30
மார்
2018
11:03
பழநி: பழநி முருகன் கோயிலில் ஐம்பொன்சிலை மோசடி தொடர்பாக, கோயில் அதிகாரி ளி டம் காலை முதல் இரவு வரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் விசாரணை செய்தார்.கடந்த 2004ம் ஆண்டு பழநி முருகன் கோயிலுக்கு 200 கிலோ எடையில் ஐம்பொன்சிலை செய்ததில் மோசடி நடந்ததாகக்கூறி, நிர்வாக அதிகாரி கே.கே.ராஜா, சிலை செய்த ஸ்தபதி முத்தையாவை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடி குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் (மார்ச் 28) இரவு பழநிக்கு வந்தார். (மார்ச் 29) காலை 8:00 மணிக்கு மலை க்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபின், பொதுப் பணித்துறைவிருந்தினர் இல்லம் வந்தார். அங்கு, இணைஆணையர் செல்வராஜ், மேலாளர் உமாவிடம் விசாரணை நடத்தினார்.2004ம் ஆண்டு ஐம்பொன்சிலை எவ்வாறு பழநிக்கு கொண்டு வரப்பட்டது. கோயில் ஆவணங்களில் சிலையின் மதிப்பு, அதன் எடைஅளவு குறிப்புகள், வடிவமைப்பு குழுவில் இடம் பெற்றிருந்த நபர்கள், அகற்றப்பட்ட சிலை பாதுகாக்கப்படும் முறை குறித்து விசாரித்தார்.பீதியில் அலுவ லர்கள் காலை 9:00 மணிக்கு துவங்கி இரவு 7:00 மணிக்கு மேலும் விசாரணை நீடித்தது. மதிய உணவுக்கு மட்டுமே ஐ.ஜி., வெளியில் வந்தார்.திருத்தணியில் இருந்து தங்கம் வாங்கி யதற்கான காரணம் குறித்து கேட்டபோது, பழநி கோயிலுக்கு கிடைக்கும் தங்கத்தை உருக்கி, வங்கியில் டெபாசிட் செய்துவிடுவதால் திருத்தணியில் தங்கம் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விசாரணையின் போக்கு, 2004ம் ஆண்டில் பணியில் இருந்த அலுவலர்கள், அதிகாரிகள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்த அப் போதைய இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.சி., ராமசாமியிடமும், விசாரணை நடத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.முடங்கிய நாதமணி 2004 ஜனவரியில் மூலவர் சிலையை மறைத்து ஐம்பொன் சிலை வைத்தனர். ஏப்ரலில் வின்ச் 250அடி உயரத்தில் பழுது ஏற்பட்டு விபத்து நடந்து 25பேர் காயமடைந்தனர். அடுத்த சிலநாட்களில் வெளிப் பிரகாரத்தில் 300 கிலோ எடையுள்ள காலபூஜை நாதமணியின், 25 கிலோ எடையுள்ள நாக்கு கழன்று விழுந்தது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களும் ஐம்பொன்சிலையை அகற்ற காரணமாக கூறுகின்றனர்.அதன்பின் நாதமணியை சரிசெய்ய பலமுறை முயற்சி செய்தும் தோல்வியே ஏற்பட்டது. அதன் அருகே புதிய மணிக்கூண்டு அமைத்து காலபூஜையின் போது மணியடிக்கப் படுகிறது.( மார்ச் 29) விசாரணையின் போது, மூலவர் சிலையை மறைத்து ஐம்பொன் சிலையை அதேஉயரத்தில் நிறுவியது ஏன், மூலவர் சிலைக்கு பூஜை, அபிஷேகம் நடந்ததா, நாளடைவில் நவபாஷாண மூலவரை பக்தர்கள் மறந்துவிடுவர், அதன்பின் அதை அகற்றிவிடலாம் என்று நினைத்தார்களா என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
தண்டனை தராமல் ஓய மாட்டேன் ஐம்பொன் சிலையை நிறுவுவது தொடர்பான ஆவணத்தில், "பல ஆயிரம் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஐம்பொன் சிலை செய்யப்பட்டது என குறிப்பெழுதி உள்ளனர். ஆனால் பல்வேறு அமைப்புகளும், பக்தர்களும் ஐம்பொன் சிலையை அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தொடர் விசாரணையில் மேலும் பூதங் கள் கிளம்பலாம் என எதிர்பார்க்கின்றனர்.இரவு 7:00 மணி வரை நடந்த விசாரணைக்குப் பின் பொன்.மாணிக்கவேல் கூறியது:ஸ்தபதி முத்தையா வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. 2004 முதல் இப்போது வரை அனைத்து அதிகாரிகளிடமும் விசாரிக்க வேண்டியுள்ளது. தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தராமல் ஓயமாட்டேன். பெரிய நாயகி அம்மன் கோயிலில் 1982ல் பக்தர் ஒருவர் வழங்கிய உற்ஸவர் சிலை மாயமானதாக சிலர் தெரிவித்தனர். ஆனால் சிலை பத்திரமாக உள்ளது, என்றார்.