பதிவு செய்த நாள்
02
ஏப்
2018
12:04
பொன்னேரி: பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவில், பொன்னேரி, அகத்தீஸ்வரர் கோவிலில், திருக்கல்யாணம் மற்றும் தெப்ப உற்சவம் நடந்தது. பொன்னேரி, ஆனந்தவல்லி அம்மை வலம்கொண்ட அகத்தீஸ்வரர் கோவிலில், கடந்த மார்ச் மாதம், 22ம் தேதி முதல், பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சூரிய பிரபை, சிம்ம வாகனம், அதிகாரநந்தி, பூத வாகனம் உள்ளிட்ட உற்சவங்கள் நடைபெற்றன. பிரம்மோற்வசத்தின் பத்தாம் நாளான நேற்று முன்தினம், நடராஜர் புறப்பாடு, திருவூடல், பஞ்ச மூர்த்திகள் தீர்த்தவாரியும், மாலை, 7:00 மணிக்கு, திருக்கல்யாண வைபவமும் சிறப்பாக நடந்தன.இரவு, 9:00 மணிக்கு, ஆனந்தபுஷ்கரணி திருக்குளத்தில், தெப்போற்சவம் நடந்தது.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், உற்சவ பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் ஆனந்தபுஷ்கரணி என, பெயர் கொண்ட திருக்குளத்தில், மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்குளத்தினை சுற்றிலும் பக்தர்கள் கூடிநின்று ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சியவாயா என, கோஷம் எழுப்பினர். பக்தர்கள் வேண்டுதலுக்காக வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி, திருக்குளத்தில் மிதக்கவிட்டு வழிபட்டனர். தெப்போற்சவம் முடிந்து, இரவு, 10:00 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.