நாமெல்லாம் சோறு சாப்பிடும் போது தான், எப்போதாவது கல் வரும். ஆனால், கல்லை மட்டுமே சாப்பிட்ட முனிவர் ஒருவர் இருந்தார். இவரை ‘சிலாதர்’ என அழைத்தனர். ‘சிலாதர்’ என்றால் ‘கல் சாப்பிடுபவர்’. குழந்தை இல்லாததால், புத்திரவரம் வேண்டி சிவனை நோக்கி தவம் செய்தார். இவருக்கு காட்சியளித்த சிவன், யாகம் செய்தால் விருப்பம் நிறைவேறும் என்றார். யாகத்திற்காக நிலத்தை உழுதபோது, பூமிக்குள் இருந்த பேழையில் ஒரு ஆண்குழந்தை இருந்ததைக் கண்டார். சிவனின் அம்சமான அந்தக்குழந்தைக்கு ‘செப்பேசன்’ என்று பெயரிட்டு வளர்த்தனர். சிலாதரின் மகன் என்பதால் ‘சைலாதி’ என்று முனிவர்கள் அழைத்தனர். இக்குழந்தை சிவனை வழிபட்டு சிவகணங்களின் தலைமைப்பதவியான நந்திகேஸ்வரர் பட்டம்பெற்றார். சிவனைப் போலவே மான், மழு ஏந்தியிருக்கும் இவர், கைலாயத்தின் தலைமைக் காவலராகத் திகழ்கிறார். ‘சிவ ரகசியம்’ என்னும் நுõலில் நந்திகேஸ்வரரின் வரலாறு இடம் பெற்றுள்ளது.