பதிவு செய்த நாள்
18
ஏப்
2018
11:04
அட்சய திரிதியை நன்னாளான இன்று லட்சுமியை வழிபடும் விதத்தில் இந்த ஸ்தோத்திரம் இடம் பெற்றுள்ளது.
* மகாலட்சுமி தாயே! திருமாலின் மார்பில் உறைபவளே! மூவுலகையும் காத்து அருள்பவளே! ஸ்ரீ பீடத்தில் வீற்றிருப்பவளே! செந்தாமரை மலரில் உறைந்திருப்பவளே! மதுர வல்லித் தாயே! உன்னைப் போற்றுகிறோம்.
* பிருகு முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே! குலமாதர் போற்றும் குலக்கொடியே! ஸ்ரீதரனின் துணைவியே! நல்லோரைக் கரை சேர்க்கும் நாயகியே! குபேரனுக்கு வாழ்வு அளிப்பவளே! உன் பாதமலரைச் சரணடைகிறோம்.
* அமுதம் நிறைந்த பொற்கலசம் தாங்கி நிற்பவளே! அருள் நெஞ்சினர் உள்ளத்தில் வாழ்பவளே! அலங்கார ரூபினியே! உன் கடைக்கண் பார்வையால் எங்கள் இல்லம் செழித்திருக்கட்டும். எங்களுக்கு ராஜயோக வாழ்வைத் தந்தருள்வாயாக.
* பூங்கொடியாகத் திகழ்பவளே! அலமேலு மங்கைத்தாயே! மூவரும், தேவரும் போற்றும் முதல்வியே! ஜகன்மாதாவே! பாற்கடலில் அவதரித்தவளே! அலைமகளே! அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குவாயாக.
* முதலும் முடிவும் இல்லாதவளே! ஆதிலட்சுமியே! தஞ்சமென வந்தவரைத் தாங்கும் தயாபரியே! மகாவிஷ்ணுவின் இதயக்கமலத்தில் வாழ்பவளே! நிலவு போல குளிர்ச்சி மிக்க பார்வையால் எங்கள் மீது அருள்மழை பொழிவாயாக.
* நவரத்தின ஆபரணங்களை விரும்பி அணிபவளே! செவ்வானம் போல சிவந்த மேனி கொண்டவளே! குறையில்லாத வாழ்வு தரும் கோமளவல்லியே! செங்கமலத் தாயாரே! அபயக்கரம் நீட்டி எங்களை ஆதரிக்க வேண்டும் அம்மா!
* மங்கள ரூபினியே! பசுவின் அம்சம் கொண்டவளே! வரம் தரும் கற்பகமே! சிவந்த தாமரை மலரை விரும்பி ஏற்றவளே! லோகமாதாவே! உன் அருளால் இந்த உலகமெலாம் செழித்தோங்கட்டும். உயிர்கள் எல்லாம் இன்புற்று வாழட்டும்.
ப்ளீஸ் இப்படி சொல்லாதீங்க!
உங்களுக்கு சாதாரணமாக தோன்றும் நிகழ்வுகளை, உப்பு பெறாத விஷயம் என்று சொல்வீர்களா... இனி அப்படி சொல்லாதீர்கள். லட்சுமியின் பிறப்பிடமாக கருதப்படும் கடலில் விளையும் உப்பு, லட்சுமியின் அம்சம். உணவுக்கு மட்டுமல்ல, உறவுக்கும் சுவை சேர்ப்பது இதுவே. இதனடிப்படையில், கிரகப்பிரவேசத்தின் போது, உறவினர்கள் மஞ்சளுடன், உப்பும் கொண்டு வருவர். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பதும் இதனால் தான்.
உப்பை கடனாக வாங்க கூடாது என்கிறது சாஸ்திரம். வீட்டில் உப்பு இல்லாமல் இருப்பது கூடாது. உப்பை வீணாக்கினால் வீண் செலவு வரும். கோயில் குளத்தில் உப்பும், மிளகும் இட்டால் உடல்நலம் சிறக்கும்.
அட்சய திரிதியை வழிபாடு: அட்சய என்றால் குறைவில்லாதது என்று பொருள். என்றென்றும் குறைவில்லாத செல்வம் பெற இன்று லட்சுமி, குபேரரை வழிபட வேண்டும். விளக்கிற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூக்களால் அலங்கரித்து ஐந்து முகங்களையும் ஏற்றி வழிபட்டால் அன்பு, மனஉறுதி, நிதானம், சகிப்புத்தன்மை, சமயோசிதம் ஆகிய நற்பண்புகள் உண்டாகும். இன்று அன்னதானம் செய்ய வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
இங்கே இருக்கிறாள் லட்சுமி!
லட்சுமித்தாயே! நீ எங்கெல்லாம் குடியிருக்க விரும்புவாய்? என்று நாரதர் மகாலட்சுமியிடம் கேட்டார். தினமும் விளக்கேற்றும் வீடு, துளசிமாடம், சங்கு, சாளக்கிராமம், தாமரை மலர், தானியக் குவியல், அன்னதானம் செய்யும் இடம், மாட்டுக் கொட்டில், தர்ம சிந்தனை கொண்டவர், இனிமையாக பேசுபவர், சுறுசுறுப்பு மிக்கவர், தற்பெருமை இல்லாதவர், சத்தியவழி நடப்பவர், எண்ணம், சொல், செயல் மூன்றிலும் துாய்மை காப்பவர், உணவின் போது ஈரக்காலுடன் அமர்பவர், ஈரக்காலை துடைத்தபின் துாங்குபவர், உடல் துாய்மை காப்பவர், கூந்தலை பின்னி முடித்த பெண், கற்புக்கரசி ஆகியோர் இருக்கும் இடங்களில் நிரந்தரமாக தங்கியிருப்பேன் என்றாள்.
மனசுக்கு புடிச்சவங்க வேணுமா
வேத வியாசர் உபதேசித்த லட்சுமி ஹ்ருதயம் ஸ்தோத்திரத்தின் மூலமாகவே, கிருஷ்ண சகோதரியான சுபத்ரையை அர்ஜுனன் மணம்புரியும் பேறு பெற்றான். இதை ஜெபித்தால் மனதுக்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும்.
“தாமரைக் கண்களைக் கொண்ட மகாலட்சுமியே!
தைரிய லட்சுமியாக வந்து காப்பவளே!
நெற்றித் திலகத்தில் குடியிருப்பவளே!
குளத்தில் நீர் இல்லாவிட்டால் மீன்கள் வாழ
முடியாதது போல, கருணை மிக்க
உன் அருள் பார்வை இல்லாமல்
என்னாலும் வாழ முடியாது.
நீயே என் தாய் என்பதை
நிரூபிக்க இப்போதே வந்து விடு.
கேட்டதை வழங்கும் கற்பகமே!
தாய், தந்தை, குரு என எல்லாமாக நீ இருந்து
என்னைக் கரை சேர்த்து விடு.”
இதை தினமும் சொன்னால் நல்ல மணவாழ்வு அமையும்.