மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.,30ல் வைகையாற்றில் கள்ளழகர் இறங்குகிறார். இதற்காக ஏப்.,28 ல் அழகர்கோவிலில் இருந்து சுவாமி புறப்படுகிறார். ஏப்.,29ல் மூன்று மாவடி எதிர்சேவை நடக்கிறது. ஏப்.,30ல் வைகையாற்றில் எழுந்தருளி இரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோயிலில் எழுந்தருளுகிறார். மே 1ல் தேனுார் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுக்கிறார். இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கிறது. மே 2ல் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் எழுந்தருளி, மே 4ல் கோயில் சென்றடைகிறார். கள்ளழகர் எந்த இடத்தில் உள்ளார் என்பதை பக்தர்கள் எளிதாக அறிய மாவட்ட போலீசாரின் ‘மதுரை காவலன்’ என்ற ‘செயலி’யில் ‘டிராக் அழகர்’ என்ற வசதியை ‘கிளிக்’ செய்தால் சுவாமி இருக்கும் இடத்தை அறிந்துக் கொள்ளலாம். இதனால் தேவையற்ற காலவிரயத்தை தவிர்க்க முடியும். கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம். ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்கள் ‘அப்டேட்’ செய்து இவ்வசதியை பெறலாம்.