பதிவு செய்த நாள்
20
ஏப்
2018
02:04
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில், ஸ்ரீராமானுஜரின், 1,001ம் ஆண்டு திருஅவதார விழாவை முன்னிட்டு, இன்று, திருத்தேர் விழா நடைபெற உள்ளது. ஸ்ரீராமானுஜரின், 1,001ம் ஆண்டு திருஅவதார உற்சவ விழா, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், ஏப்., 12ல் துவங்கியது.தினமும் பல்வேறு வாகனத்தில் ராமானுஜர் திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான, திருத்தேர் விழா இன்று நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு துவங்கும் தேர், தேரடி சாலை, காந்தி சாலை, திருவள்ளூர் மெயின் ரோடு, திருமங்கைஆழ்வார் சாலை வழியாக, நிலையத்தை சென்றடையும். இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுக்க உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்கின்றனர். இதை தொடர்ந்து, இரவு புஷ்ப பல்லக்கு திருவீதி உலா நடைபெற உள்ளது.