பதிவு செய்த நாள்
15
ஏப்
2026
11:04
காஞ்சிபுரம்: கிளார் அகத்தீஸ்வரர் கோவில் இரண்டாவது நாளாக நேற்றும், மூலவர் மீது சூரியஒளி விழுந்ததால், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மஹா சுவாமிகள் வழிபட்ட அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தில் இருந்து மூன்று நாட்கள் கருவறையில் உள்ள மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வு நடந்து வருகிறது.
அதன்பவடி, தமிழ் புத்தாண்டு தினமான நேற்று காலை சூரிய உதயமானதும், காலை 6:10 மணி முதல், 6:15 மணி வரை சூரிய ஒளி கருவறையில் உள்ள மூலவர் மீது விழுந்தது. தமிழ் புத்தாண்டு தினத்தில் மூலவர் சூரிய ஒளியில் பிரகாசத்தில் அருள்பாலித்ததால், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமியை வழிபட்டனர். இரண்டாவது நாளான இன்று காலை 6:10 மணி முதல், 6:15 மணி வரை சூரிய ஒளி கருவறையில் உள்ள மூலவர் மீது விழுந்தது. தொடர்ந்து சிறப்பு மூலவருக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் அபிஷேக அலங்காரம் ஆராதனை நடந்தது.
இதுகுறித்து அகத்தீஸ்வரர் கோவில் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தில் இருந்து மூன்று நாட்களும் கருவறையில் உள்ள மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடந்து வருகிறது. கோவிலில் மூலிகையால் செய்யப்பட்ட நந்தியம்பெருமான் முன், 27 அடி உயர மண்டபம், அதற்கு அடுத்த அர்த்த மண்டபம், அதையும் தாண்டி மூலவர் மீது சூரிய ஒளி விழுவது அரிய நிகழ்வாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.