சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. வழக்கமாக சித்திரை ஒன்றாம் தேதி விஷு கனி தரிசனம் நடைபெறும். ஆனால், இந்தாண்டு சில சாஸ்திர கணக்குகளின் படி, இன்று சித்திரை 2ம் தேதி அதிகாலை விஷு கனி தரிசனம் நடைபெற்றது. இன்று 15-ம் தேதி அதிகாலையில், சூரியன் பங்குனி மாதத்தில் இருந்து சித்திரை மாதத்துக்கு கடப்பதால் விஷு இன்றைய தேதிக்கு மாற்றப்பட்டதாக கோவில் நிர்வாக தெரிவித்துள்ளது. அதன்படி இன்று அதிகாலை விஷு கனி தரிசனம் நடைபெற்றது. அதிகாலை 3 மணி முதல் 7 மணி வரை, கணிக்கொன்றை மலர்கள், நவதானியங்கள், பலாப்பழம், காய்கறிகள் மற்றும் தங்க நாணயங்கள் நிரப்பப்பட்ட உருளியில், ஐயப்பனுக்குப் பிடித்தமான விஷூக்கனி தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏப்.,18ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும்.