சுவாமிமலை தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும். இங்கு அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமைந்த கட்டு மலைக்கோயிலாகும் இத்தலத்தினை தரிசனம் செய்ய வருகை தரும் முருக பக்தர்களுக்கு 60 தமிழ் வருட தேவதைகளும் 60 படிகட்டுகளாக இருந்து சேவை செய்வதாக ஐதீகம் மேலும் இத்தலத்தில் தான் முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை, குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்பதும் வரலாறு. எனவே இத்தலத்தில் முருகப்பெருமான் சுவாமியே நீ என்றும் சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார்.
இத்தகைய பெருமைக்குரிய தலத்தில் ஒவ்வொரு தமிழ் வருட பிறப்பின் போதும் பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத பிரஜோத்பத்தி என தொடங்கி குரோதன, அட்சய என முடிவுறும் 60 தமிழ் வருட படிக்கட்டுகளுக்கும் விசேஷ திருப்படிப்பூஜை செய்வது வழக்கம், அதுபோல நேற்று 60 தமிழ் வருட வரிசையில் 40 வது தமிழ் வருடமான "பராபவ" வருடப்பிறப்பை முன்னிட்டு ஒவ்வொரு படிக்கட்டிலும் மஞ்சள், கும்குமம் இட்டு ஐந்து முக திருவிளக்கு ஏற்றி வெற்றிலை, தேங்காய், பூ, பழம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பஞ்சமுக கற்பூரதீபம் காட்டி மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் திருப்படி பூஜையில் பங்கேற்று, திருப்படிகளில் திருவிளக்கேற்றினர் மேலும் பராபவ தமிழ் வருடப்பிறப்பை யொட்டி மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பெற்று, சண்முகா அர்ச்சனையும் நடைபெற்றது. முருகன் தங்ககவசம், வைரவேலுடன் இராஜஅலங்காரத்தில் அருள்பாலித்தார். தமிழ் வருட பிறப்புயொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறை கோவில் தக்கார் சாமிநாதன், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள், சிறப்பாக செய்திருந்தனர்.