பதிவு செய்த நாள்
04
மே
2018
12:05
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமிக்கு, அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு, இன்று (4ம் தேதி) முதல், தாராபிஷேகம் நடக்கிறது.
பாகூரில் ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான அக்னி நட்சத்திரம் இன்று (4ம் தேதி) இரவு 8.10 மணிக்கு துவங்குகிறது.
இதனை முன்னிட்டு, காலை 10.30 மணிக்கு, பாலவிநாயகர், மூலநாதர், வேதாம்பிகையம்மன், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து, பகல் 12.00 மணிக்கு 108 லிட்டர் பன்னீர், பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் மூலநாதருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது.
அக்னி நட்சத்திர நாட்கள் முழுவதும் சுவாமியை குளிர்விக்கும் வகையில், தாரா பாத்திரத்தில் நிரப்பப்பட்ட பன்னீர், ஏலக்காய் உள்ளிட்ட வாசனை திரவியங்கள், சிவலிங்கத்தின் மீது துளி துளியாக விழும் படியான தாராபிஷேகத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திர நாட்களில் (வரும் 28ம் தேதி வரை) நடைபெறும் தாராபிஷேகத்திற்கு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் தர விரும்பும் பக்தர்கள், கோவில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.