மனிதர்கள் தாங்கள் தண்டிக்கப்படுகிற போது கடவுளைக் கடிந்து கொள்கிறார்கள். காரணம் இல்லாமல் கடவுள் தண்டனை கொடுப்பதில்லை. பின்னால் வருவதை அறிந்தே அவ்வாறு செய்கிறார். ஒரு வாலிபர் வண்டி ஓட்டிச் செல்லும் போது விபத்துக்குள்ளாகி இரண்டு கால்களையும் இழந்தார். அதற்கு பதிலாக மரக்கால்களைப் பொருத்திக் கொண்டார். அவர் ஒரு முறை ஆப்ரிக்காவுக்கு சென்றார். அங்குள்ள சில காட்டுவாசிகள் அவரைக் கடத்திச் சென்றனர். அவர்களின் தலைவன்,“இன்று நமக்கு நல்ல வேட்டை.
இவனது மாமிசத்தை உண்டு மகிழ்ச்சியாக இருப்போம். அதற்கு முன்னதாக கை, கால்களை வெட்டி சூப் போடுங்கள்,” என உத்தரவிட்டான். தலைவனின் உத்தரவைக் கேட்ட காட்டு மிராண்டிகள் வாலிபனை நெருங்கினர். அவனது கால்களை வெட்ட முயன்ற போது, கடினமானதாக இருப்பதை பார்த்தனர். காலுக்கு பதிலாக கட்டை இருப்பது கண்டு பயந்தனர். அதிர்ச்சியுடன் வாலிபனின் காலிற்குள் கட்டை இருப்பதை தலைவனிடம் தெரிவித்தனர். ஏதும் புரியாத தலைவன், வாலிபன் அருகில் வந்து பார்த்தான். அவனுக்கும் பயம் உண்டானது. கடத்தி வந்திருக்கும் வாலிபன் சாதாரண மனிதப்பிறவி அல்ல என்றும், ஏதோ தெய்வப்பிறவி என கருதினான். தலைவன், “இவரது கால்கள் நம்மைப் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது. இவர் ஏதோ கடவுள் போல இருக்கிறார். ஆகவே, இவரை வெட்டி விடாதீர்கள்,” என்றதோடு, வாலிபரை குருவாகவும் ஏற்றுக் கொண்டான். அதன் பின் அந்த வாலிபர் அவர்களிடமிருந்து தப்பி வந்தார். நாம் பலவீனமாக நினைப்பவை கூட, நமக்கு பலமாக மாறும். கடவுள் எப்போதும் மனிதனுக்கு தீமை செய்வதே இல்லை.