கொர்ரி டென் பூம் அம்மையார் ஜெர்மனி நாட்டில் குடியேறிய வெளிநாட்டவர். இவரது தந்தை வில்லியம். இயேசுவின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். இரண்டாம் உலகப்போர் நடந்த போது, ஜெர்மனியை ஹிட்லர் ஆட்சி செய்துகொண்டிருந்தார். யூத இனத்தவர்களை ஜெர்மனியிலிருந்து மட்டுமின்றி உலகத்தில் இருந்தும் அழித்துவிட வேண்டும் என ஹிட்லர் கங்கணம் கட்டியிருந்தார். யூதமக்கள் உயிருக்கு பயந்து ஜெர்மனியை விட்டு வெளியேறினர். ஆனால், வில்லியம் குடும்பத்தினர் யூதர்களை காப்பாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணியை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து வில்லியம், அவரது மகள்கள் கொர்ரி, பெட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வில்லியம் சிறையிலேயே இறந்து விட்டார். சிறையில் இருந்த கொர்ரியும், பெட்சியும் கைதிகளை ஒன்று கூட்டி பைபிளை வாசித்தனர். ஒவ்வொருவருக்காகவும் ஜெபித்தனர். இதனால் கைதிகள் ஆறுதலடைந்தனர். இதையறிந்த காவலர்கள் பெட்சி, கொர்ரியை சித்ரவதை செய்யத் தொடங்கினர். ஒரு கிறிஸ்துமஸ் நாளில் இயேசு மண்ணுலகில் பிறந்த நிகழ்வை விளக்கிக் கொண்டிருந்த பெட்சியை, காவலர்கள் கொலை செய்துவிட்டனர். பெட்சியின் மரணம் கொர்ரியை பாதித்தது. என்றாலும் ‘விசுவாசிக்கிறவன் பதறான்’ என்ற தேவ வசனத்திற்கு ஏற்ப, தைரியத்தை வரவழைத்துக் கொண்டார். இதற்கிடையில், ஒருமுறை வேறு ஒரு பெண்ணுக்கு பதிலாக, தவறுதலாக கொர்ரியை விடுதலை செய்து விட்டனர். இது தான் சமயம் என, கொர்ரி வெளிநாடு சென்றார். அதன் பிறகு 64 நாடுகளில் பயணம் செய்து இயேசுவைப் பற்றி பேசினார்.
‘தேவனுக்காக நாடோடியான கதை’, ‘மறைவிடம்’ ஆகிய புத்தகங்களை எழுதினார். அவை உலகப் பிரசித்தி பெற்றன. 1947ல் அவர், தன்னை கொடுமைக்கு உள்ளாக்கிய சிறை இருந்த ரேவன்ஸ்பர்க் நகரத்திற்கு உரை நிகழ்த்த வந்தார். அவரிடம் ஆசி பெற மக்கள் வரிசையில் வந்தனர். அதில், கொர்ரியை கொடுமைப் படுத்திய காவலர் ஒருவரும் வந்தார். ‘என்னை கொடுமைக்குள்ளாக்கியவனும் வரிசையில் வருகிறான். அவனை மன்னிப்பதா, கூடாதா?’ என ஒரு போராட்டம்... அவரின் மனதிற்குள் ஓடியது. வரிசை நகர்ந்தது. காவலனும் அருகில் வந்தான். அப்போது, இயேசுவின் நினைவு எழுந்தது. “என்னை சிலுவையில் அறைந்தவர்களையும், கொடுமைப் படுத்தியவர் களையும் நான் மன்னித்தேன். என்னைப் போல நீயும் அவனை மன்னிக்கக் கூடாதா?”என்று அவர் சொல்வது காதில் கேட்டது. இதையடுத்து அந்த காவலரின் கரங்களைப் பற்றியபடி கொர்ரி அவருக்காக ஜெபித்தார். “நான் உங்களுக்கு சொல்லுகிறேன். உங்கள் சத்ருக்களை சிநேகியுங்கள். உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். இப்படி செய்வதனால் நீங்கள் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராய் இருப்பீர்கள்”என்ற பைபிள் வசனம் அம்மையாரின் வாழ்வை பொறுத்தவரை நிஜமானது. அன்புமனதால் தான் இந்த அகிலமே வாழ்கிறது.