பதிவு செய்த நாள்
18
ஜூன்
2018
12:06
கோவில்பாளையம்;குரும்பபாளையம், ஆதி சக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது.கோவில்பாளையம் அடுத்த குரும்பபாளையத்தில், பிரசித்தி பெற்ற ஆதிசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூன்று நிலை கோபுரம் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா, 15ம் தேதி பிள்ளையார் வழிபாடுடன் துவங்கியது.நேற்று அதிகாலையில், நான்காம் கால வேள்வி நடந்தது. திருக்குடங்கள் கோவிலை வலம் வந்தன. காலை 6:30 மணிக்கு கோபுரம், மூல மூர்த்திகளுக்கு சிரவை ஆதினம் குமரகுருபர அடிகள் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்து வைத்தார். ஆதிசிவம், செல்வ விநாயகர், முருகர் வள்ளி தெய்வானை, ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஆஞ்சநேயர், நாகாத்தம்மன், நவக்கிரக நாயகர்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள், விழா குழு தலைவர் பொன்ஸ் உட்பட, 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஆதினங்கள், அம்மன் வழிபாடு குறித்து பேசினர். மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.