Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாஞ்சாலி சபதம் - முதற்பாகம் குயில் பாட்டு குயில் பாட்டு
முதல் பக்கம் » முப்பெரும் பாடல்கள்
பாஞ்சாலி சபதம்- இரண்டாம் பாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2012
03:01

மூன்றாவது அடிமைச் சருக்கம்

39. பராசக்தி வணக்கம்

ஆங்கொரு கல்லை வாயிலிற் படி என்
றமைத்தனம் சிற்பி, மற் றொன்றை
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
றுயர்த்தினான்; உலகினோர் தாய் நீ!
யாங்க ணே, எவரை, எங்ஙனஞ் சமைத்தற்
கெண்ணமோ, அங்ஙனம் சமைப்பாய்.
ஈங்குனைச் சரணென் றெய்தினேன்; என்னை
இருங்கலைப் புலவனாக் குதியே. 205

40. சரஸ்வதி வணக்கம்

இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென
இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்;
இடையின்றிக் கதிர்களெலாஞ் சுழலுமென
வானூலார் இயம்பு கின்றார்.
இடையின்றித் தொழில்புரிதல் உலகி னிடைப்
பொருட்கெல்லாம் இயற்கை யாயின்
இடையின்றிக் கலைமகளே! நினதருளில்
எனதுள்ளம் இயங்கொ ணாதோ!   206

41. விதுரன் சொல்லியதற்குத் துரியோதனன் மறுமொழி சொல்லுதல்

வேறு
அறிவு சான்ற விதுரன்சொற் கேட்டான்
அழலு நெஞ்சின் அரவை உயர்த்தான்,
நெறிஉ ரைத்திடும் மேலவர் வாய்ச்சொல்
நீச ரானவர் கொள்ளுவ துண்டோ?
பொறி பறக்க விழிக ளிரண்டும்
புருவ மாங்குத் துடிக்கச் சினத்தின்
வெறித லைக்க, மதிம ழுங்கிப் போய்
வேந்தன் இஃது விளம்புத லுற்றான்.  207

வேறு

நன்றி கெட்ட விதுரா! -சிறிதும் நாண மற்ற விதுரா!
தின்ற உப்பி னுக்கே-நாசந் தேடுகின்ற விதுரா!
அன்று தொட்டு நீயும்-எங்கள் அழிவு நாடுகின்றாய்;
மன்றி லுன்னை வைத்தான்-எந்தை மதியை என் னுரைப்பேன்!  208

ஐவருக்கு நெஞ்சம்-எங்கள் அரண்மனைக்கு வயிறும்,
தெய்வமன் றுனக்கே-விதுரா! செய்து விட்டதேயோ?
மெய்வகுப் பவன்போல், -பொதுவாம் விதி உணர்ந்தவன்போல்,
ஐவர் பக்கம் நின்றே, -எங்கள் அழிவு தேடுகின்றாய். 209

மன்னர் சூழ்ந்த சபையில்-எங்கள் ம்ற்றலார் களோடு
முன்னர் நாங்கள் பணயம்-வைத்தே முறையில் வெல்லுகின்றோம்,
என்ன குற்றங் கண்டாய்? -தருமம் யார்க் குரைக்க வந்தாய்?
கன்னம் வைக்கி றோமோ? -பல்லைக் காட்டி ஏய்க்கிறோமோ?  210

பொய்யுரைத்து வாழ்வார், -இதழிற் புகழுரைத்து வாழ்வார்.
வைய மீதி லுள்ளார், -அவர்தம் வழியில் வந்ததுண்டோ?
செய்யொணாத செய்வார்- தம்மைச் சீருறுத்த நாடி,
ஐயா!  நீ எழுந்தால்-அறிஞர் அவல மெய்தி டாரோ?  211

அன்பிலாத பெண்ணுக்கு-இதமே ஆயிரங்கள் செய்தும்,
முன்பின் எண்ணு வாளோ? -தருணம் மூண்ட போது கழிவாள்;
வன்பு ரைத்தல் வேண்டா, -எங்கள் வலி பொறுத்தல் வேண்டா,
இன்ப மெங்க ணுண்டோ, -அங்கே ஏகி டென் றுரைத்தான். 212
 
42. விதுரன் சொல்லுவது

வேறு

நன்றாகும் நெறியறியா மன்னன், அங்கு
நான்குதிசை அரசர்சபை நடுவே, தன்னைக்
கொன்றாலும் ஒப்பாகா வடுச்சொற் கூறிக்
குமைவதனில் அணுவளவுங் குழப்ப மெய்தான்;
சென்றாலும் இருந்தாலும் இனிஎன் னேடா?
செய்கைநெறி அறியாத சிறியாய், நின்னைப்
பொன்றாத வழிசெய்ய முயன்று பார்த்தேன்;
பொல்லாத விதிஎன்னைப் புறங்கண் டானால்!   213

கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மைக் காதும்
கருங்கல்லில் விடந்தோய்ந்த நெஞ்சுங் கொண்டோர்
படுஞ்செய்தி தோன்றுமுனே படுவர் கண்டாய்.
பால்போலும் தேன்போலும் இனிய சொல்லோர்
இடும்பைக்கு வழிசொல்வார்; நன்மை காண்பார்
இளகுமொழி கூறார்என நினைத்தே தானும்,
நெடும்பச்சை மரம்போலே வளர்ந்து விட்டாய்-
நினக்கெவரும் கூறியவ ரில்லை கொல்லோ?   214

நலங்கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா
நரபதி!  நின் அவைக்களத்தே அமைச்ச ராக
வலங்கொண்ட மன்னரொடு பார்ப்பார் தம்மை
வைத்திருத்தல் சிறிதேனுந் தகாது கண்டாய்.
சிலங்கைப் பொற் கச்சணிந்த வேசை மாதர்
சிறுமைக்குத் தலைகொடுத்த தொண்டர், மற்றுங்
குலங்கெட்ட புலைநீசர், முடவர், பித்தர்
கோமகனே!  நினக்குரிய அச்சர் கண்டாய்!   215

சென்றாலும் நின்றாலும் இனிஎன் னேடா?
செப்புவன நினக்கெனநான் செப்பி னேனோ?
மன்றார நிறைந்திருக்கும் மன்னர், பார்ப்பார்
மதியில்லா மூத்தோனும் அறியச் சொன்னேன்.
இன்றோடு முடிகுவனதோ?  வருவ தெல்லாம்
யானறிவேன், வீட்டுமனும் அறிவான் கண்டாய்.
வென்றான் உள் ஆசையெலாம் யோகி யாகி
வீட்டுமனும் ஒன்றுரையா திருக்கின் றாரேன.  216

விதிவழிநன் குணர்ந்திடினும், பேதை யேன்யான்,
வெள்ளைமன முடைமையினால், மகனே, நின்றன்
சதிவழியைத் தடுத்துரைசள் சொல்லப் போந்தேன்
சரி, சரி இங் கேதுரைத்தும் பயனொன் றில்லை,
மதிவழியே செல்லு கென விதுரன் கூறி
வாய்மூடித் தலைகுனிந்தே இருதக்கைகொண்டான்.
பதிவுறுவோம் புவியிலெனக் கலிம கிழ்ந்தான்,
பாரதப்போர் வருமென்று தேவ ரார்த்தார்.  217

43. சூது மீட்டும் தொடங்குதல்

வேறு

காயு ருட்ட லானார்-சூதுக் களி தொடங்க லானார்.
மாய முள்ள சகுனி-பின்னும் வார்த்தை சொல்லுகின்றான்:
நீ அழித்த தெல்லாம்-பின்னும் நின் னிடத்து மீளும்,
ஓய் வடைந்திடாதே-தருமா! ஊக்க மெய்துகென்றான். 218

கோயிற் பூசை செய்வோர்-சிலையைக் கொண்டு விற்றல் போலும்,
வாயில் காத்து நிற்போன்-வீட்டை வைத் திழத்தல் போலும்
ஆயிரங்க ளான-நீதி யவை உணர்ந்த தருமன்
தேயம் வைத் திழந்தான்; -சிச்சீ!  சிறியர் செய்கை செய்தான். 219

நாட்டு மாந்த ரெல்லாம்-தம்போல் நரர்க ளென்று கருதார்;
ஆட்டு மந்தை யா மென்-றுலகை அரச ரண்ணி விட்டார்.
காட்டு முண்மை நூல்கள்-பல தாங் காட்டினார்களேனும்.
நாட்டு ராஜ நீதி மனிதர் நன்கு செய்யவில்லை  220

ஓரஞ் செய்திடாமே தருமத் துறுதி கொன் றிடாமே,
சோரஞ் செய்திடாமே-பிறரைத் துயரில் வீழ்த் திடாமே
ஊரை யாளு முறைமை-உலகில் ஓர் புறத்து மில்லை
சார மற்ற வார்ததை! -மேலே சரிதை சொல்லுகின்றோம். 221

44. சகுனி சொல்வது்

வேறு

செல்வம்முற் றிழந்த விட்டாய்! -தருமா
தேசமுங் குடிகளுஞ் சேர்த்திழந் தாய்.
பல்வளம் நிறை புவிக்கே-தருமன்
பார்த்திவன் என்ப தினிப்பழங் கதைகாண்!
சொல்வதோர் பொருள் கேளாய்; -இன்னுஞ்
சூழ்ந்தொரு பணயம்வைத் தாடுதி யேல்,
வெல்வதற் கிடமுண் டாம்; ஆங்கவ்
வெற்றியி லனைத்தையும் மீட்டலாம். 222

எல்லா மிழந்த பின்னர்-நின்றன்
இளைஞரும் நீரும் மற்றெதிற் பிழைப்பீர்?
பொல்லா விளையாட்டில்-பிச்சை
புகநினை விடுவதை விரும்புகிலோம்.
வல்லார் நினதிளை ஞர்-சூதில்
வைத்திடத் தகுந்தவர் பணய மென்றே;
சொல்லால் உளம்வருந் தேல்; -வைத்துத்
தோற்றதை மீட்டென்று சகுனி சொன்னான். 223
 
வேறு
கருணனும் சிரித்தான்:-சபையோர்
கண்ணின் நீருதிர்த் தார்.
இருள்நிறைந்த நெஞ்சன், -களவே
இன்ப மென்று கொண்டான்
அரவு யர்த்த வேந்தன்-உவகை
ஆர்த்தெழுந்து சொல்வான்;
பரவு நாட்டை யெல்லாம்-எதிரே
பணய மாக வைப்போம்.  224

தம்பிமாரை வைத்தே-ஆடித்
தருமன் வென்று விட்டால்,
முன்பு மாமன் வென்ற-பொருளை
முழுதும் மூண் டளிப்போம்.
நம்பி வேலை செய்வோம்; -தருமா!
நாடிழந்த பின்னர்
அம்பி னொத்த விழியாள்-உங்கள்
ஐவருக்கு முரியாள்  225

அவள் இகழ்ந்திடாளோ? -அந்த
ஆயன் பேசுவானோ?
கவலை தீர்த்து வைப்போம்; -மேலே
களி நடக்குகென்றான்.
இவள வான பின்னும்-இளைஞர்
ஏதும் வார்த்தை சொல்லார்.
துவளும் நெஞ்சினா ராய்-வதனம்
தொங்க வீற் றிருந்தார்.  226

வீமன் மூச்சு விட்டான்-முழையில்
வெய்ய நாகம் போலே;
காம னொத்த பார்த்தான்-வதனக்
களை இழந்து விட்டான்;
நேம மிக்க நகுலன்-ஐயோ!
நினை வயர்ந்து விட்டான்
ஊமை போலிருந் தான்-பின்னோன்
உண்மை முற்றுணர்ந் தான்.  227

கங்கை மைந்த னங்கே-நெஞ்சம்
கன லுறத் துடித்தான்;
பொங்கு வெஞ் சினத்தால்-அரசர்
புகை யுயிர்த் திருந்தார்;
அங்கம் நொந்து விட்டான், -விதுரன்
அவல மெய்தி விட்டான்,
சிங்க மைந்தை நாய்கள் கொல்லுஞ்
செய்தி காண லுற்றே.  228

45. சஹாதேவனைப் பந்தயம் கூறுதல்
 
வேறு

எப்பொழு தும்பிர மத்திலே சிந்தை
ஏற்றி உலகமொ ராடல் போல்.எண்த்
தப்பின்றி இன்பங்கள் துய்த்திடும்-வகை
தானுணர்ந் தான்சஹ தேவானம்-எங்கம்
ஒப்பில் புலவனை ஆட்டத்தில்-வைத்தல்
உன்னித் தருமன் பணயமென்று -அங்குச்
செப்பினன் காயை உருட்டினார்-அங்குத்
தீய சகுனி கெலித்திட்டான்.  229

46. நகுலனை இழத்தல்

நகுலனை வைத்தும் இழந்திட்டான்; -அங்கு
நள்ளிருட் கண்ணொரு சிற்றொளி-வந்து
புகுவது போலவன் புந்தியில்என்ன
புன்மை செய்தோம்? என எண்ணினான்-அவ்வெண்ணம்
மிகுவதன் முன்பு சகுனியும்-ஐய!
வேறோரு தாயிற் பிறந்தவர்-வைக்கத்
தகுவ ரென்றிந்தச் சிறுவரை-வைத்துத்
தாயத்தி லேஇழந் திட்டனை.  230

திண்ணிய வீமனும் பார்த்தனும்-குந்தி
தேவியின் மக்களுனை யொத்தே-நின்னிற்
கண்ணியம் மிக்கவர் என்றவர்-தமைக்
காட்டுதற் கஞ்சினை போலும் நீ? -என்று
புண்ணியமை மிக்க தருமனை-அந்தப்
புல்லன் வினவிய போதினில், -தர்மன்
துண்ணென வெஞ்சின மெய்தியே, -அட!
சூதில் அரசிழந் தேகினும்.  231
 
47. பார்த்தனை இழத்தல்

எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம்; ஐவர்
எண்ணத்தில், ஆவியில் ஒன்றுகாண், -இவர்
பங்கமுற் றேபிரி வெய்துவார்-என்று
பாதகச் சிந்தனை கொள்கிறாய்; -அட!
சிங்க மறவர் தமக்குள்ளே-வில்லுத்
தேர்ச்சியி லேநிக ரற்றவன், -எண்ணில்
இங்குப் புவித்தலம் ஏழையும்-விலை
யீடெனக் கொள்ளத் தகாதவன்.  232

கண்ணனுக் காருயிர்த் தோழனாம்-எங்கள்
கண்ணிலுஞ் சால இனியவன்,
வண்ணமும் திண்மையும் சோதியும்-பெற்று
வானத் தமரரைப் போன்றவன்-அவன்
எண்ணரு நற்குணஞ் சான்றவன், -புக
ழேறும் விஜயன் பணயங் காண்! -பொய்யில்
பண்ணிய காயை உருட்டுவாய்-என்று
பார்த்திவன் விம்மி உரைத்திட்டான். 233

மாயத்தை யேஉரு வாக்கிய-அந்த
மாமனும் நெஞ்சில் மகிழ்வுற்றே கெட்ட
தாயத்தைக் கையினில் பற்றினான்; -கையில்
தாய முரடடி விழுத்தினான்; -அவன்
சாற்றிய தேவந்து வீழ்ந்ததால், -வெறும்
ஈயத்தைப் பொன்னென்று காட்டுவார்-மன்னர்
இப்புவி மீதுள ராமன்றோ?   234

48. வீமனை இழத்தல்
 
கொக்கரித் தார்த்து முழுங்கியே-களி
கூடிச் சகுனியுஞ் சொல்லுவான், -எட்டுத்
திக்கனைத்தும் வென்ற பார்த்தனை-வென்று
தீர்த்தனம் வீமனைக் கூறென்றான்.தர்மன்
தக்கது செய்தல் மறந்தனன், -உளஞ்
சார்ந்திடு வெஞ்சின வெள்ளத்தில்-எங்கும்
அக்கரை இக்கரை காண்கிலன், -அறத்
தண்ணல் இதனை உரைக்கின்றான்;  235

ஐவர் தமக்கொர் தலைவனை-எங்கள்
ஆட்சிக்கு வேர்வலி அஃதினை, -ஒரு
தெய்வம்முன் னேநின் றெதிர்ப்பினும்-நின்று
சீறி அடிக்குந் திறலனை-நெடுங்
கைவளர் யானை பலவற்றின் வலி
காட்டும் பெரும்புகழ் வீமனை-உங்கள்
பொய்வளர் சூதினில் வைத்திட்டேன்-வென்று
போஎன் றுரைத்தனன் பொங்கியே. 236

போரினில் யானை விழக்கண்ட பல
பூதங்கள் நாய்நரி காகங்கள்-புலை
ஓரி கழுகென் றிவையெலாம்-தம
துள்ளங் களிகொண்டு விம்மல்போல், -மிகச்
சீரிய வீமனைச் சூதினில் அந்தத்
தீயர் விழுந்திடக் காணலும்-நின்று
மார்பிலுந் தோளிலுங் கொட்டினார்-களி
மண்டிக் குதித்தெழுந் தாடுவார்.  237

49. தருமன் தன்னைத்தானே பணயம் வைத்திழத்தல்

மன்னவர், தம்மை மறந்துபோய், -வெறி
வாய்ந்த திருடரை யொத்தனர், -அங்குச்
சின்னச் சனுனி சிரிப்புடன்-இன்னும்
செப்புக பந்தயம் வே றென்றான்-இவன்
தன்னை மறந்தவ னாதலால்-தன்னைத்
தான்பண யமென வைத்தனன், -பின்பு
முன்னைக் கதையன்றி வேறுண்டோ? -அந்த
மோசக் சகுனி கெவிலத்தனன்.  238

50. துரியோதனன் சொல்வது
 
பொங்கி யெழுந்து சுயோதனன்-அங்கு
பூதல மன்னர்க்குச் சொல்லுவான்; -ஒளி
மங்கி யழிந்தனர் பாண்டவர்; -புவி
மண்டலம் நம்ம தினிக்கண்டீர், -இவ்
சங்கை யிலாத நிதியெல்லாம்-நம்மைச்
சார்ந்தது வாழ்த்துதிர் மன்னர்காள்! -இதை
எங்கும் பறையறை வாயடா-தம்பி!
என்றது கேட்டுச் சகுனி தான்.  239

51. சகுனி சொல்வது

புண்ணிடைக் கோல்கொண்டு குத்துதல்-நின்னைப்
போன் றவர் செய்யத் தகுவதோ? -இரு
கண்ணி லினியவ ராமென்ற-இந்தக்
காளையர் தம்மைஇங் குந்தைதான்-நெஞ்சில்
எண்ணி யிருப்ப தறிகுவாய்; -இவர்
யார்?  நின்றன்சோதர ரல்லரோ?  களி
நண்ணித் தொடங்கிய சூதன்றோ? -இவர்
நாணுறச் செய்வது நேர்மையோ?  240

இன்னும் பணய்ம்வைத் தாடுவோம்? -வெற்றி
இன்னும் இவர் பெற லாகுங்காண்,
பொன்னுங் குடிகளுந் தேசமும்-பெற்றுப்
பொறபொடு போதற் கிடமுண்டாம்; -ஒளி
மின்னும் அமுதமும் போன்றவள்-இவர்
மேவிடு தேவியை வைத்திட்டால், -(அவள்)
துன்னும் அதிட்ட முடையவள் இவர்
தோற்ற தனைத்தையும் மீட்டலாம் 241

என்றந்த மாமன் உரைப்பவே வளர்
இன்பம் மனத்தி லுடையனாய்-மிக
நன்றுநன்றென்று சுயோதனன்-சிறு
நாயொன்று தேன்கல சத்தினை -எண்ணித்
துன்று முவகையில் வெற்றுநா-வினைத்
தோய்த்துச் சுவைத்து மகிழ்தல்போல்-அவன்
ஒன்றுரை யாம லிருந்திட்டான்-அழி
வுற்ற துலகத் தறமெலாம்.  242

அடிமைச் சருக்கம் முற்றும்.

திரௌபதியை சபைக்கு அழைத்த சருக்கம்

52. திரௌபதியை இழத்தல்

பாவியர் சபைதனி லே, -புகழ்ப்
பாஞ்சால நாட்டினர் தவப்பயனை,
ஆவியில் இனியவ ளை, -உயரித்து
அணிசுமந் துலவிடு செய்யமு தை,
ஓவியம் நிகர்த்தவ ளை, -அரு
ளொளியினைக் கற்பனைக் குயிரதனைத்
தேவியை, நிலத்திரு வை-எங்குந்
தேடினுங் கிடைப்பருந் திரவியத் தை,  243

படிமிசை இசையுற வே-நடை
பயின் றிடுந் தெய்விக மலர்க்கொடி யைக்
கடிகமழ் மின்னுரு வை, -ஒரு
கமனியக் கனவினைக் காதலினை,
வடிவுறு பேரழ கை-இன்ப
வளத்தினைச் சூதினில் பணயம் என்றே
கொடியவர் அவைக்களத் தில்-அறக்
கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான். 244

வேறு

வேள்விப் பொருளினை யே-புலை நாயின் முன்
மென்றிட வைப்பவர் போல்,
நீள்விட்டப் பொன் மாளி கை-கட்டிப் பேயினை
நேர்ந்து குடியேற்றல் போல்,
ஆள்விற்றுப் பொன்வாங்கி யே-செய்த பூண யோர்
ஆந்தைக்குப் பூட்டுத்ல் போல்,
கேள்விக் கொருவரில் லை-உயிர்த் தேவியைக்
கீழ்மக்கட் காளாக்கி னான்.  245

செருப்புக்குத் தோல்வேண்டி யே-இங்குக் கொல்வரோ
செல்வக் குழந்தையி னை?
விருப்புற்ற சூதினுக் கே-ஒத்த பந்தயம்
மெய்த் தவப் பாஞ்சாலியோ?
ஒருப்பட்டுப் போன வுடன் -கெட்ட மாமனும்
உன்னியத் தாயங்கொண் டே
இருப்பகடை போடென்றான்-பொம்மைக் காய்களும்
இருப்பகடை போட்டவே.  246

53. திரௌபதி சூதில் வசமானது பற்றிக் கௌரவர் கொண்ட மகிழ்ச்சி

திக்குக் குலுங்கிடவே-எழுந் தாடுமாம்
தீயவர் கூட்டமெல் லாம்.
தக்குத்தக் கென்றே அவர்-கதித் தாடுவார்
தம்மிரு தோள்கொட்டு வார்,
ஒக்குந் தருமனுக் கே-இஃதென்பர், ஓ!
ஓ! வென் றிரைந்திடு வார்;
கக்கக்கென் றேநகைப் பார்-துரியோ தனா
கட்டிக் கொள் எம்மைஎன் பார்.  247

மாமனைத் தூக்காயென் பார்-அந்த மாமன் மேல்
மாலை பலவீசு வார்,
சேமத் திரவியங் கள்-பல நாடுகள்
சேர்ந்ததி லொன்று மில்லை;
காமத் திரவிய மாம்-இந்தப் பெண்ணையும்
கைவச மாகச் செய் தான்;
மாமனொர் தெய்வமென்பார்; -துரியோதனன்
வாழ்கவென் றார்த்திடு வார்.  248

54. துரியோதனன் சொல்வது
 
நின்று துரியோத னன்-அந்த மாமனை
நெஞ்சொடு சேரக் கசட்டி,
என்துயர் தீர்த்தா யடா! -உயிர் மாமனே!
ஏளனந் தீர்த்துவிட் டாய்.
அன்று நகைத்தா ளடா! -உயிர் மாமனே!
அவளைஎன் ஆளாக்கி னாய்.
என்றும் மறவே னடா! -உயிர் மாமனே!
என்ன கைம்மாறுசெய் வேன்?   249

ஆசை தணித்தா யடா! -உயிர் மாமனே!
ஆவியைக் காத்தா யடா!
பூசை புரிவோ மடா! -உயிர் மாமனே!
பொங்க லுனக்கிடு வோம்!
நாச மடைந்த தடா! -நெடு நாட் பகை,
நாமினி வாழ்ந்தோ மடா!
பேசவுந் தோன்று தில்லை; -உயிர் மாமனே!
பேரின்பங் கூட்டிவிட டாய்  250

என்று பலசொல்லு வான், -துரியோ தனன்
எண்ணி எண்ணிக்குதிப் பான்;
குன்று குதிப்பது போல்-துரியோ தனன்
கொட்டிக் குதித்தாடு வான்.
மன்று குழப்பமுற் றே, -அவர் யாவரும்
வகைதொகை யொன்று மின்றி
அன்று புரிந்ததெல் லாம்-என்தன் பாட்டிலே
ஆக்கல் எளிதாகு மோ?   251

55. திரௌபதியைத் துரியோதனன் மன்றுக்கு அழைத்து வரச்சொல்லியது
பற்றி ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம்

வேறு

தருமம் அழிவெய்தச் சத்தியமும் பொய்யாக,
பெருமைத் தவங்கள் பெயர்கெட்டு மண்ணாக,
வானத்துத் தேவர் வயிற்றிலே துப்பாய்,
மோன முனிவர் முறைகெட்டுத் தாமயங்க,
வேதம் பொருளின்றி வேற்றுரையே யாகிவிட,  5

நாதங் குலைந்து நடுமையின்றிப் பாழாக,
கந்தருவ ரெல்லாங் களையிழக்கச் சித்தர்முதல்
அந்தரத்து வாழ்வோ ரனைவோரும் பித்துறவே,
நான்முகனார் நாவடைக்க, நாமகட்குப் புத்திகெட,
வான்முகிலைப் போன்றதொரு வண்ணத்திருமாலும் 10

அறிதுயில்போய் மற்றாங்கே ஆழ்ந்ததுயி லெய்திவிட
செறிதருநற் சீரழகு செல்வமெலாந் தானாகுஞ்
சீதேவி தன்வதன்ம செம்மைபோய்க் காரடைய,
மாதேவன் யோகம் மதிமயக்க மாகிவிட-
வாலை, உமா தேவி மாகாளி, வீறுடையாள். 15

மூலமமா சக்தி, ஒரு மூவிலைவேல் கையறேறாள்,
மாயை தொலைக்கும் மஹாமாய தானாவாள்,
பேயைக் கொலையைப் பிணக்குவையைக் கண்டுவப்பாள்.
சிங்கத்தி லேறிச் சிரிப்பாள் <உலகழிப்பாள்
சிங்கத்தி லேறிச் சிரித்தெவையுங் காத்திடுவாள்,
 20

நோவுங் கொலையும் நுவலொணாப் பீடைகளும் 
சாவுஞ் சலிப்புமெனத் தான்பல் கணமுடையாள்,
கடாவெருமை ஏறுங் கருநிறத்துக் காலனார்
இடாது பணிசெய்ய இலங்குமஹா ராணி,
மங்களம் செல்வம் வளர்வாழ்நாள் நற்கீர்த்தி 25

துங்கமுறு கல்வியெனச் சூழும் பலகணத்தாள். 
ஆக்கந் தானாவாள், அழிவுநிலை யாவாள்
போக்கு வரவெய்தும் புதுமையெலாந் தானாவாள்,
மாறிமாறிப் பின்னும் மாறிமாறிப் பின்னும்
மாறிமா றிப்போம் வழக்கமே தானாவாள் 30

ஆதி பராசக்தி-அவள்நெஞ்சம் வன்மையுறச்
சோதி கதிர்விடுக்கும் சூரியனாந் தெய்வத்தின்
முகத்தே இருள் படர-

56. துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது
 
அகத்தே இருளுடையான், ஆரியரின் வேறானோன்,
துரியோதனனும் சுறுக்கெனவே தான்திரும்பி 35

அரியோன் விதுர னவனுக் குரைசெய்வான்:-
செல்வாய், விதுரா! நீ சக்தித் திருப்பதேன்?
வில்வா ணுதலினாள், மிக்க எழி லுடையாள்,
முன்னே பாஞ்சாலர் முடி வேந்தன் ஆவிமகள்,
இன்னேநாம் சூதில் எடுத்த விலைமகள்பால் 40

சென்றுவிளை வெல்லாஞ் செவ்வனே தானுணர்த்தி,
மன்றினிடை யுள்ளான்நின் மைத்துனன்நின் ஓர் தலைவன்
நின்னை அழைக்கிறான் நீள்மனையில் ஏவலுக்கே
என்ன உரைத்தவளை இங்கு கொணர் வாய் என்றான்.

57. விதுரன் சொல்வது
 
துரியோ தனன் இச் சுடுசொற்கள் கூறிடவும் 45

பெரியோன் விதுரன் பெரிதுஞ் சினங்கொண்டு,
மூட மகனே!  மொழியொணா வார்த்தையினைக்
கேடுவரல் அறியாய், கீழ்மையினாற் சொல்லிவிட்டாய்,
புள்ளிச் சிறுமான் புலியைப்போய்ப் பாய்வதுபோல்
பிள்ளைத் தவளை பெரம்பாம்பை மோதுதல்போல்,  50

ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய்,
தெய்வத் தவத்தியைச் சீர்குலையப் பேசுகிறாய்;
நின்னுடைய நன்மைக்கிந் நீதியெலாஞ் சொல்லுகிறேன்;
என்னுடைய சொல், வேறு எவர்பொருட்டும் இல்லையடா?
பாண்டவர்தாம் நாளைப் பழியிதனைத் தீர்த்திடுவார்,  55

மாண்டு தலைமேல், மகனே! கிடப்பாய் நீ,
தன்னழிவு நாடுந் தறுகண்மை என்னேடா?
முன்னமொரு வேனன் முடிந்தகதை கேட்டிலையோ?
நல்லோர் தமதுள்ளம் நையச் செயல்செய்தான்
பொல்லாத வேனன், புழுவைப்போல் மாய்ந்திட்டான். 60

நெஞ்சஞ் சுடவுரைத்தல் நேர்மைஎனக் கொண்டாயோ?
மஞ்சனே, அச்சொல் மருமத்தே பாய்வதன்றோ?
கெட்டார்தம் வாயில் எளிதே கிளைத்து விடும்;
பட்டார்தம் நெஞ்சில் பலநாள் அகலாது
வெந்நரகு சேர்த்துவிடும், வித்தை தடுத்துவிடும்,  65

மன்னவனே, நொந்தார் மனஞ்சுடவே சொல்லுஞ்சொல்.
சொல்லிவிட்டேன்;  பின்னொருகால் சொல்லேன், கவுரவர்காள்!
புல்லியர்கட் கின்பம் புவித்தலத்தில் வாராது.
பேராசை கொண்டு பிழைச்செயல்கள் செய்கின்றீர்!
வாராத வன்கொடுமை மாவிபத்து வந்துவிடும். 70

பாண்டவர்தம் பாதம் பணிந்தவர்பாற் கொண்டதெலாம்.
மீண்டவர்க்கே ஈந்து விட்டு, விநயமுடன்
ஆண்டவரே! யாங்கள் அறியாமை யால்செய்த
நீண்ட பழிஇதனை நீர்பொறுப்பீர் என்றுரைத்து,
மற்றவரைத் தங்கள் வளநகர்க்கே செல்லவிடீர் 75

குற்றந் தவிர்க்கும் நெறிஇதனைக் கொள்ளீரேல்,
மாபா ரதப்போர் வரும்; நீர் அழிந்திடுவீர்,
பூபால ரேஎன்றப் புண்ணியனும் கூறினான்.
சொல்லிதனைக் கேட்டுந் துரியோதன மூடன்,
வல்லிடிபோல் சீச்சீ!  மடையா, கெடுக நீ 80

எப்போதும் எம்மைச் சபித்தல் இயல்புனக்கே,
இப்போதுன் சொல்லை எவருஞ் செவிக்கொள்ளார்,
யாரடா, தேர்ப்பாகன்! நீபோய்க் கணமிரண்டில்
பாரதர்க்கு வேந்தன் பணித்தான் எனக்கூறிப்
பாண்டவர்தந் தேவிதனைப் பார்வேந்தர் மன்றினிலே 85

ஈண்டழைத்து வாஎன் றியம்பினான்.ஆங்கே தேர்ப்
பாகன் விரைந்துபோய்ப் பாஞ்சாலி வாழ்மனையில்
சோகம் ததும்பித் துடித்தகுரலுடனே,
அம்மனே போற்றி!  அறங்காப்பாய், தாள் போற்றி!
வெம்மை யுடைய விதியால் யுதிட்டிரனார் 90

மாமன் சகுனியொடு மாயச்சூ தாடியதில்,
பூமி யிழந்து பொருளிழந்து தம்பியரைத்
தோற்றுத் தமது சுதந்திரமும் வைத்திழந்தார்.
சாற்றிப் பணயமெனத் தாயேஉனை வைத்தார்.
சொல்லவுமே நாவு துணியவில்லை; தோற்றிட்டார் 95

எல்லாருங் கூடி யிருக்கும் சபைதனிலே,
நின்னை அழைத்துவர நேமித்தான் எம்மரசன்
என்ன உரைத்திடலும், யார்சொன்ன வார்த்தையடா!
சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து
மாதர் வருதல் மரபோடா?  யார் பணியால் 100

என்னை அழைக்கின்றாய்? என்றாள் அதற்கவனும்.
மன்னன் சுயோதனன்றன் வார்த்தையினால்.என்றிட்டான்.
நல்லது; நீ சென்று நடந்தகதை கேட்டுவா
வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர்தாம்
என்னை முன்னே கூறி இழந்தாரா?  தம்மையே 105

முன்ன மிழந்து முடித்தென்னைத் தோற்றாரா?
சென்று சபையில்இச் செய்தி தெரிந்து வா
என்றவளுங் கூறி இவன்போ யியபின்னர்,
தன்னந் தனியே தவிக்கு மனத்தாளாய்
வன்னங் குலைந்து மலர்விழிகள் நீர்சொரிய. 110

உள்ளத்தை அச்சம் உலைவுறுத்தப் பேய்கண்ட
பிள்ளையென வீற்றிருந்தாள் பின்னந்தத் தேர்ப்பாகன்
மன்னன் சபைசென்று, வாள் வேந்தே!  ஆங்கந்தப்
பொன்னரசி தாள்பணிந்து போதருவீர்என்றிட்டேன்.
என்னை முதல்வைத் திழந்தபின்பு தன்னைஎன் 115

மன்னர் இழந்தாரா?  மாறித் தமைத்தோற்ற
பின்னரெனைத் தோற்றாரா? என்றேநும் பேரவையை
மின்னற் கொடியார் வினவிரத் தாம் பணித்தார்
வந்துவிட்டேன்என்றுரைத்தான் மாண்புயர்ந்த பாண்டவர்தாம்
நொந்துபோ யொன்றும் நுவலா திருந்துவிட்டார். 120

மற்றும் சபைதனிலே வந்திருந்த மன்ன ரெலாம்
முற்றும் உரையிழந்து மூங்கையர்போல் வீற்றிருந்தார். 252

58. துரியோதனன் சொல்வது

வேறு

உள்ளந் துடித்துச் சுயோ தனன்-சினம்
ஓங்கி வெறிகொண்டு சொல்லு வான்; -அட!
பிள்ளைக் கதைகள் விரிக்கி றாய்.-என்றன்
பெற்றி யறிந்திலை போலும், நீ! -அந்தக்
கள்ளக் கரிய விழியி னாள்-அவள்
கல்லிகள் கொண்டிங்கு வந்த னை! -அவள்
கிள்ளை மொழியின் நலத்தை யே-இங்குக் கேட்க
விரும்புமென் னுள்ள மே  253

வேண்டிய கேள்விகள் கேட்க லாம்.-சொல்ல
வேண்டிய வார்த்தைகள் சொல்ல லாம்-மன்னர்
நீண்ட பெருஞ்சபை தன்னி லே-அவள்
நேரிடவே வந்த பின்பு தான், -சிறு
கூண்டிற் பறவையு மல்ல ளே! -ஐவர்
கூட்டு மனைவிக்கு நாண மே-சினம்
மூண்டு கடுஞ்செயல் செய்யு முன்-அந்த
மொய்குழ லாளைஇங் கிட்டு வா. 254

மன்னன் அழைத்தனன் என்று நீ- சொல்ல
மாறி யவளொன்று சொல்வ தோ? -உன்னைச்
சின்னமுறச் செய்குவே னடா! -கணஞ்
சென்றவளைக் கொணர்வாய் என்றான்-அவன்
சொன்ன மொழியினைப் பாகன் போய்-அந்தத்
தோகைமுன் கூறி வணங்கி னன்-அவள்
இன்னல் விளைந்திவை கூறு வாள்-தம்பி,
என்றனை வீணில் அழைப்ப தேன்?  255

59. திரௌபதி சொல்லுதல்

நாயகர் தாந்தம்மைத் தோற்ற பின்-என்னை
நல்கும் உரிமை அவர்க்கில்லை-புலைத்
தாயத்தி லேவிலைப் பட்டபின்-என்ன
சாத்திரத் தாலெனைத் தோற்றிட் டார்? -அவர்
தாயத்தி லேவிலைப் பட்டவர்; -புவி
தாங்குந் துருபதன் கன்னி நான்-நிலை
சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால், -பின்பு
தார முடைமை அவர்க்குண் டோ?  256

கௌரவ வேந்தர் சபைதன் னில்-அறங்
கண்டவர் யாவரும் இல்லை யோ? -மன்னர்
சௌரியம் வீழ்ந்திடும் முன்ன ரே-அங்கு
சாத்திரஞ் செத்துக் கிடக்கு மோ? -புகழ்
ஒவ்வுற வாய்ந்த குருக்க ளும்-கல்வி
ஒங்கிய மன்னருஞ் சூதி லே-செல்வம்
வவ்வுறத் தாங்கண் டிருந்த னர்! -என்றன்
மான மழிவதும் காண்ப ரோ?   257

இன்பமுந் துன்பமும் பூமியின்-மிசை
யார்க்கும் வருவது கண்ட னம்; -எனில்
மன்பதை காக்கும் அரசர் தாம்-அற
மாட்சியைக் கொன்று களிப்ப ரோ?-அதை
அன்புந் தவமுஞ் சிறந்துளார்-தலை
யந்தணர் கண்டு களிப்பரோ? -அவர்
முன்பென் வினாவினை மீட்டும் போய்ச்-சொல்லி
முற்றுந் தெளிவுறக் கேட்டு வா  258

என் றந்தப் பாண்டவர் தேவி யும்-சொல்ல,
என்செய்வன் ஏழையப் பாகனே? -என்னைக்
கொன்றுவிட் டாலும் பெரிதில்லை-இவள்
கூறும் வினாவிற் கவர் விடை-தரி
னன்றி இவளை மறுமுறை -வந்து
அழைத்திட நானங் கிசைந்திடேன்-(என)
நன்று மனத்திடைக் கொண்டவன் சபை
நண்ணி நிகழ்ந்தது கூறி னான்.  259

மாத விடாயி லிருக்கி றாள்-அந்த
மாதர சென்பதும் கூறினான்-கெட்ட
பாதகன் நெஞ்சம் இளகி டான்-நின்ற
பாண்டவர் தம்முகம் நோக்கி னான்-அவர்
பேதுற்று நிற்பது கண்ட னன்-மற்றும்
பேரவை தன்னில் ஒருவரம-இவன்
தீதுற்ற சிந்தை தடுக்க வே-உள்ளத்
திண்மையி லாதங் கிருந்த னர்.  260

பாகனை மீட்டுஞ் சினத்துடன்-அவன்
பார்த்திடி போலுரை செய்கின் றான்; -பின்னும்
ஏகி நமதுளங் கூற டா-அவள்
ஏழு கணத்தில் வரச் செய் வாய்? -உன்னைச்
சாக மிதித்துடு வேன ! -என்று
தார்மன்னன் சொல்லிடப் பாக னும்-மன்னன்
வேகந் தனைப்பொருள் செய்திடான்-அங்கு
வீற்றிருந் தோர்தமை நோக்கியே. 261

சீறும் அரசனுக் கேழை யேன்-பிழை
செய்த துண்டோ? அங்குத் தேவி யார்-தமை
நூறு தரஞ்சென் றழைப்பி னும், -அவர்
நுங்களைக் கேட்கத் திருப்பு வார்; -அவர்
ஆறுதல் கொள்ள ஒருமொழி-சொல்லில்
அக்கண மேசென் றழைக்கி றேன்; -மன்னன்
கூறும் பணிசெய வல்லன் யான்; -அந்தக்
கோதை வராவிடில் என்செய் வேன்?  262

60. துரியோதனன் சொல்வது

பாகன் உரைத்தது கேட்ட னன்- பெரும்
பாம்புக் கொடியவன் சொல்கி றான்; -அவள்
பாகன் அழைக்க வருகிலள்; -இந்தப்
பையலும் வீமனை அஞ்சி யே-பல
வாகத் திகைப் புற்று நின்றனன்; -இவன்
அச்சத்தைப் பின்பு குறைக்கி றேன்-தம்பீ!
போகக் கடவை இப்போ தங்கே; -இங்கப்
பொற்றொடி யோடும் வருக நீ!   263

திரௌபதியை சபைக்கு அழைத்த சருக்கம் முற்றும்

ஐந்தாவது சபதச் சருக்கம்

61. துச்சாதனன் திரௌபதியைச் சபைக்கு கொணர்தல்

இவ்வுரை கேட்டதுச் சாதனன்-அண்ணன்
இச்சையை மெச்சி எழுந்தனன்-இவன்
செவ்வி சிறிது புகலு வோம்; -இவன்
தீமையில் அண்ணனை வென்றவன்; -கல்வி
எவ்வள னேனுமி லாதவன்; -கள்ளும்
ஈரக் கறியும் விரும்பு வோன்; -பிற
தெவ்வர் இவன்றனை அங்சுவார்; -தன்னைச்
சேர்ந்தவர் பேயென் றொதுங்கு வார்;  264

புத்தி விவேக மில்லாத வன்; -புலி
போல உடல்வலி கொண்டவன்; -கரை
தத்தி வழியுஞ் செருக்கி னால-கள்ளின்
சார்பின் றியேவெறி சான்ற வன்; -அவ
சக்தி வழிபற்றி நின்ற வன்; -சிவ
சக்தி நெறிஉண ராத வன்; -இன்பம்
நத்தி மறங்கள் இழைப்ப வன்; -என்றும்
நல்லவர் கேண்மை விலக்கி னோன்;  265

அண்ண னொருவனை யன்றி யே-புவி
அத்தனைக் குந்தலை யாயி னோம்-என்னும்
எண்ணந் தனதிடைக் கொண்டவன்; -அண்ணன்
ஏது சொன்னாலும் மறுத்தி டான்; -அருட்
கண்ணழி வெய்திய பாத கன்; .அந்தக்
காரிகை தன்னை அழைத்து வா-என் றவ்
அண்ண னுரைத்திடல் கேட்ட னன்; -நல்ல
தாமென் றுறுமி எழுந்த னன்.  266

பாண்டவர் தேவி யிருந்த தோர்-மணிப்
பைங்கதிர் மாளிகை சார்நத் னன்; -அங்கு
நீண்ட துயரில் குலைந்துபோய்-நின்ற
நேரிழை மாதினைக் கண்ட னன்; -அவள்
தீண்டலை யெண்ணி ஒதுங்கி னாள்; -அடி!
செல்வ தெங்கேயென் றிரைந்திட்டான்; -இவன்
ஆண்டகை யற்ற புலையனென்று -அவள்
அச்ச மிலா தெதிர் நோக்கி யே  267

62. திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும் சம்வாதம்

தேவர் புவிமிசைப் பாண்ட வர்; -அவர்
தேவி, துருபதன் கன்னி நான்; -இதை
யாவரும் இற்றை வரையி னும், -தம்பி,
என்முன் மறந்தவ ரில்லை காண்; -தம்பி,
காவ லிழந்த மதிகொண் டாய்; -இங்குக்
கட்டுத் தவறி மொழி கிறாய்; -தம்பி
நீ வந்த செய்தி விரைவி லே-சொல்லி
நீங்குகஎன்றனள் பெண்கொடி.  268

பாண்டவர் தேவியு மல்லைநீ; -புகழ்ப்
பாஞ்சாலத் தான்மக ளல்லை நீ; -புவி
யாண்டருள் வேந்தர் தலைவ னாம்-எங்கள்
அண்ணனுக் கேயடி மைச்சிநீ; -மன்னர்
நீண்ட சபைதனிற் சூதிலே-எங்கள்
நேசச் சகுனியோ டாடியங்கு-உன்னைத்
தூண்டும் பணய மெனவைத் தான்-இன்று
தோற்று விட்டான் தருமேந்திரன். 269

ஆடி விலைப்பட்ட தாதி நீ; -உன்னை
ஆள்பவன் அண்ணன் சுயோத னன்; -மன்னர்
கூடி யிருக்குஞ் சபையிலே-உன்னைக்
கூட்டி வருகென்று மன்ன வன் சொல்ல
ஓடி வந்தேனிது செய்திகாண்; -இனி
ஒன்றுஞ் சொலா தென்னோ டேகுவாய்-அந்தப்
பேடி மகனொரு பாகன் பாற்-சொன்ன
பேச்சுக்கள் வேண்டிலன் கேட்க வே 270

வேறு

துச்சா தனனிதனைச் சொல்லினான், பாஞ்சாலி; -
அச்சா, கேள் மாதவிலக் காதலா லோராடை
தன்னி லிருக்கின்றேன்.தார்வேந்தர் பொற்சபைமுன்
என்னை யழைத்தல் இயல்பில்லை, அன்றியுமே,
சோதரர்தந் தேவிதனைச் சூதில் வசமாக்கி,  5

ஆதரவு நீக்கி, அருமை குலைத்திடுதல்,
மன்னர் குலத்து மரபோகாண்? அண்ணன்பால்
என்னிலைமை கூறிடுவாய், ஏகுக நீஎன்றிட்டாள்.
கக்கக் கவென்று கனைத்தே பெருமூடன்
பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினைக் 10

கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான்,
ஐயகோவென்றே யலறி யுணர்வற்றுப்
பாண்டவர்தந் தேவியவள் பாதியுயிர் கொண்டுவர
நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி
முன்னிழுத்துச் சென்றான்.வழிநெடுக.மொய்த்தவராய். 15

என்ன கொடுமை யிதுவென்று பார்த்திருந்தார்,
ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ?
வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன்
தன்னை மிதத்துத் தராதலத்திற் போக்கியே,
பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல்,  20

நெட்டை மரங்களென நின்று புலம்பினார்,
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச்
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க்
கேடுற்ற மன்னரறங் கெட்ட சபைதனிலே 25
கூடுதலும் அங்கேபோய்க் கோவென்றலறினாள்.

63. சபையில் திரௌபதி நீதி கேட்டழுதல்
 
விம்மி யழுதாள்; -விதியோ கணவரே!
அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டியெனை
வேதச் சுடர்த்தீமுன் வேண்டி மணஞ்செய்து
பாதகர்முன் இந்நாள் பரிசழிதல் காண்பீரோ?  30

என்றாள், விஜயனுடன் ஏறுதிறல் வீமனுமே
குன்றா மணித்தோள் குறிப்புடனே நோக்கினார்,
தருமனும்மற் றாங்கே தலைகுனிந்து நின்றிட்டான்
பொருமி யவள்பின்னும் புலம்புவாள்:-வான் சபையில்
கேள்விபல வுடையர் கேடிலா நல்லிசையோர். 35

வேள்வி தவங்கள் மிகப் புரிந்த வேதியர்கள்
மேலோ ரிருக்கின்றார், வெஞ்சினமேன் கொள்கிலரோ?
வேலோ ரெனையுடைய வேந்தர் பிணிப்புண்டார்,
இங்கிவர்மேற் குற்றம் இயம்ப வழியில்லை,
மங்கியதோர் புன்மதியாய்! மன்னர் சபைதனிலே 40

என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்லுகிறாய்,
நின்னை யெவரும்நிறுத் தடாஎன்பதிலர்,
என்சேய்கேன்? என்றே இரைந்தழுதாள், பாண்டவரை
மின்செய் கதிர் விழியால் வெந்நோக்கு நோக்கினாள்.
மற்றவர்தாம் முன்போ வாயிழந்து சீர்குன்றிப் 45

பற்றைகள்போல் நிற்பதனைப் பார்த்து, வெறிகொண்டு
தாதியடி தாதி; யெனத் துச்சாதனன் அவளைத்
தீதுரைகள் கூறினான் கர்ணன் சிரித்திட்டான்;
சகுனி புகழ்ந்தான்.சபையினோர் வீற்றிருந்தார்!
தகுதியுயர் வீட்டுமனுஞ் சொல்லுகிறான்; தையலே 50

64. வீட்டுமாசார்யன் சொல்வது

சூதாடிநின்னையுதிட்டிரனே தோற்று விட்டான்
வாதாடி நீயவன்றன் செய்கை மறுக்கின்றாய்,
சூதிலே வல்லான் சகுனி தொழில்வலியால்,
மாதரசே, நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான்,
மற்றிதனி லுன்னையொரு பந்தயமா வைத்ததே 55

குற்றமென்று சொல்லுகிறாய், கோமகளே, பண்டையுக
வேத முனிவர் விதிப்படி, நி சொல்லுவது
நீதமெனக் கூடும்; நெடுஞ்காலச் செய்தியது;
ஆணொடுபெண் முற்றும் நிகரெனவே அந்நாளில்
பேணிவந்தார்; பின்னாளில் இஃது பெயர்ந்துபோய் 60

இப்பொழுதை நூல்களினை யெண்ணுங்கால், ஆடவருக்
கொப்பில்லை மாதர்.ஒருவன்தன் தாரத்தை
விற்றிடலாம்; தானமென வேற்றுவர்க்குத் தந்திடலாம்
முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை
தன்னை யடிமையென விற்றபின் னுந்தருமன் 65

நின்னை யடிமையெனக் கொள்வதற்கு நீதியுண்டு.
செல்லு நெறியோர் செய்கையிங்கு பார்த்திடிலோ
கல்லும் நடுங்கும் விலங்குகளும் கண்புதைக்கும்.
செய்கை அநீதியென்று தேர்ந்தாலும், சாத்திரந்தான்
வைகும் நெறியும் வழக்கமும் நீ கேட்பதனால். 70

ஆங்கவையும் நின்சார்பி லாகா வகையுரைத்தேன்.
தீங்கு தடுக்குந் திறமிலேன்என்றந்த
மேலோன் தலைகவிழ்ந்தான்.மெல்லியளுஞ் சொல்லுகிறாள்:-

65. திரௌபதி சொல்வது

சாலநன்கு கூறினீர்!  ஐயா!  தருமநெறி
பண்டோர் இராவணனும் சீதைதன்னைப் பாதகத்தால் 75

கொண்டோர் வனத்திடையே வைத்துப்பின், கூட்டமுற
மந்திரிகள் சாத்திரிமார் தம்மை வரவழைத்தே,
செந்திருவைப் பற்றிவந்த செய்தி யுரைத்திடுங்கால்
தக்கது நீர் செய்தீர்; தருமத்துக் கிச்செய்கை
ஒக்கும்என்று, கூறி உகந்தனராம் சாத்திரிமார்!  80

பேயரசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்!
மாய முணராத மன்னவனைச் சூதாட
வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ?  நேர்மையோ?
முற்படவே சூழ்ந்து முடீத்ததொரு செய்கையன்றோ?
மண்டபம்நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ?  85

பெண்டிர் தமையுடையீர் பெண்க ளுடன்பிறந்தீர்!
பெண்பாவ மன்றோ?  பெரியவசை கொள்வீரோ?
கண்பார்க்க வேண்டும்! என்று கையெடுத்துக் கும்பிட்டாள்
அம்புபட்ட மான்போல் அழுது துடி துடித்தாள்.
வம்புமலர்க் கூந்தல் மண்மேற் புரண்டுவிழத் 90

தேவி கரைந்திடுதல் கண்டே, சில மொழிகள்
பாவிதுச் சாதனனும் பாங்கிழந்து கூறினான்,  271

வேறு

ஆடை குலைவுற்று நிற்கிறாள்; -அவள்
ஆவென் றழுது துடிக்கிறாள்-வெறும்
மாயட நகர்த்த துச்சாதனன்-அவள்
மைக்குழல் பற்றி யிழுக்கிறான்-இந்தப்
பீடையை நோக்கினன் வீமனும்-கரை
மீறி எழுந்தது வெஞ்சினம்; -துய்
கூடித் ததருமனை நோக்கியே, -அவன்
கூறிய வார்த்தைகள் கேட்டிரோ?  272

66. வீமன் சொல்வது

வேறு

சூதர் மனைகளி லே-அண்ணே!
தொண்டு மகளி ருண்டு,
சூதிற் பணயமென் றே-அங்கோர்
தொண்டச்சி போவ தில்லை. 273

ஏது கருதி வைத்தாய்? -அண்ணே
யாரைப் பணயம் வைத்தாய்?
மாதர் குல விளக்கை-அன்பே
வாய்ந்த வடி வழகை. 274

பூமி யரச ரெல்லாங்-கண்டே
போற்ற விளங்குகிறான்,
சாமி, புகழினுக்கே-வெம்போர்ச்
சண்டனப் பாஞ்சாலன்,  275

அவன் சுடர் மகளை-அண்ணே!
ஆடி யிழந்து விட்டாய்.
தவறு செய்து விட்டாய்-அண்ணே!
தருமங் கொன்று விட்டாய். 276

சோரத்திற் கொண்ட தில்லை; -அண்ணே!
சூதிற் படைத்த தில்லை.
வீரத்தினாற் படைத்தோம்; -வெம் பார்
வெற்றியினாற் படைத்தோம்;  277

சக்கரவர்த்தி யென்றே-மேலாந்
தன்மை படை திருந்தோம்;
பொக்கென ஓர்கணத்தே-எல்லாம்
போகத் தொலைத்து விட்டாய். 278

நாட்டை யெல்லாந் தொலைத்தாய்; -அண்ணே!
நாங்கள் பொறுத் திருந்தோம்.
மீட்டும் எமை யடிமை-செய்தாய்,
மேலும் பொறுத் திருந்தோம் 279

துருபதன் மகளைத் -திட்டத்
துய்ம னுடற் பிறப்பை,
இரு பகடை யென்றாய், -ஐயோ!
இவர்க் கடிமை யென்றாய்!  280

இது பொறுப்ப தில்லை, -தம்பி!
எரி தழல் கொண்டு வா.
கதிரை வைத் திழந்தான்-அண்ணன்
கையை எரித்திடுவோம். 281
 
67. அர்ஜூனன் சொல்வது

வேறு

எனவீமன் கசதேவ னிடத்தே சொன்னான்
இதைக் கேட்டு வில்விஜயன் எதிர்த்துச் சொல்வான்;
மனமாரச் சொன்னாயோ? வீமா! என்ன
வார்த்தை சொன்னாய்? எங்கு சொன்னாய்?  யாவர் முன்னே?
கனமாருந் துருபதனார் மகளைச் சூதுக்
களியிலே இழந்திடுதல் குற்ற மென்றாய்;
சினமான தீ அறிவைப் புகைத்த லாலே
திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய். 282

தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும் எனு மியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான்.
கருமத்தை மேன்மேலுங காண்போம்; இன்று
கட்டுண்டோம், பொறுத்திருப்போம்;  காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.
தனுஉண்டு காண்டீவம் அதன் பேர்என்றான். 283

68. விகர்ணன் சொல்வது

அண்ணனுக்குத் திறல்வீமன் வணங்கி நின்றான்.
அப்போது விகர்ணனெழுந்த தவைமுன் சொல்வான்;
பெண்ணரசி கேள்விக்குப் பாட்டன் சொன்ன
பேச்சதனை நான்கொள்ளேன்.பெண்டிர் தம்மை
எண்ணமதில் விலங்கெனவே கணவ ரெண்ணி
ஏதெனிலுஞ் செய்திடலாம் என்றான் பாட்டன்,
வண்ணமுயர் வேதநெறி மாறிப் பின்னாள்
வழங்குவதிந் நெறி என்றான்; வழுவே சொன்னான்.  284

எந்தையர்தம் மனைவியரை விற்ப துண்டோ?
இதுகாறும் அரசியரைச் சூதிற் தோற்ற
விந்தையைநீர் கேட்ட துண்டோவிலைமாதர்க்கு
விதித்ததையே பிற்கால நீதிக் காரர்
சொந்தமெனச் சாத்திரத்தில் புகுத்தி விட்டார்!
சொல்லளவே தானாலும் வழக்கந் தன்னில்
இந்தவிதஞ் செய்வதில்லை, சூதர் வீட்டில்
ஏவற்பெண பணயமில்லை என்றுங் கேட்டோம். 285

தன்னையிவன் இழந்தடிமை யான பின்னர்த்
தாரமெது? வீடேது? தாத னான
பின்னையுமோர் உடைமை உண்டோ?  என்று நம்மைப்
பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால்.
மன்னர்களே! களிப்பதுதான் சூதென் றாலும்
மனுநீதி துறந்திங்கே வலிய பாவந்
தன்னைஇரு விழிபார்க்க வாய்பே சீரோ?
தாத்தனே நீதிஇது தகுமோ? என்றான். 286

இவ்வாறு விகர்ணனும் உரைத்தல் கேட்டார்;
எழுந்திட்டார் சிலவேந்தர்; இரைச்ச லிட்டார்,
ஓவ்வாது சகுனிசெயுங் கொடுமைஎன்பார்;
ஒருநாளும் உலகிதனை மறக்காதென்பார்;
எவ்வாறு புகைந்தாலும் புகைந்து போவீர்;
ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டா,
செவ்வானம் படர்ந்தாற்போல் இரத்தம் பாயச்
செருக்களத்தே தீருமடா பழியிஃதென்பார். 287

69. கர்ணன் பதில்

வேறு

விகருணன் சொல்லைக் கேட்டு
வில்லிசைக் கர்ணன் சொல்வான்:-
தகுமடா சிறியாய் நின்சொல்
தாரணி வேந்தர் யாரும்
புகுவது நன்றென் றெண்ணி
வாய்புதைத் திருந்தார் நீ தான்
மிகு முறை சொல்லி விட்டாய்.
விரகிலாய்!  புலனு மில்லாய்!  288

பெண்ணிவள் தூண்ட லெண்ணிப்
பசுமையால் பிதற்று கின்றாய்;
எண்ணிலா துரைக்க லுற்றாய்;
இவளைநாம் வென்ற தாலே
நண்ணிடும் பாவ மென்றாய்.
நாணிலாய்! பொறையு மில்லாய்!
கண்ணிய நிலைமை யோராய்;
நீதிநீ காண்ப துண்டோ?  289

மார்பிலே துணியைத் தாங்கும்
வழக்கங்கீ ழடியார்க் கில்லை
சீரிய மகளு மல்லள்;
ஐவரைக் கலந்த தேவி
யாரடா பணியாள்! வாராய்;
பாண்டவர் மார்பி லேந்தும்
சீரையுங் களைவாய்; தையல்
சேலையுங் களைவாய்என்றான். 290

இவ்வுரை கேட்டா ரைவர்;
பணிமக்க ளேவா முன்னர்
தெவ்வர்கண் டஞ்சு மார்பைத்
திறந்தவர், துணியைப் போட்டார்.
நவ்வியைப் போன்ற கண்ணாள்,
ஞான சுந்தரி, பாஞ்சாலி
எவ்வழி உய்வோமென்றே
தியங்கினாள், இணைக்கை கோத்தாள். 291

70. திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை
 
துச்சா தனன்எழுந்தே-அன்னை
துகிலினை மன்றிடை யுரித லுற்றான்.
அச்சோ, தேவர்க ளே! -என்று
அலறி அவ் விதுரனுந் தரைசாய்ந் தான்.
பிச்சே றியவனைப் போல்-அந்தப்
பேயனுந் துகிலினை உரிகையி லே,
உட்சோ தியிற் கலந்தாள்-அன்னை
உலகத்தை மறந்தாள் ஒருமை யுற்றாள். 292

ஹரி, ஹரி, ஹரி என்றாள்; -கண்ணா!
அபய மபயமுனக் கபய மென் றான்.
கரியினுக் கருள்புரிந் தே-அன்று
கயத்திடை முதலையின் உயிர்மடித் தாய்!
கரிய நன்னிற முடையாய்! -அன்று
காளிங்கன் தலைமிசை நடம்புரிந் தாய்!
பெரியதொர் பொருளா வாய்! -கண்ணா!
பேசரும் பழமறைப் பொருளா வாய்!  293

சக்கர மேந்தி நின்றாய்! -கண்ணா!
சாரங்கமென் றொருவில்லைக் கரத்துடையாய்!
அட்சரப் பொருளா வாய்! -கண்ணா!
அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்!
துக்கங்கள் அழித்திடுவாய்!-கண்ணா!
தொண்டர்கண் ணீர்களைத் துடைத்திடு வாய்!
தக்கவர் தமைக்காப் பாய், -அந்தச்
சதுர்முக வேதனைப் படைத்துவிட் டாய். 294

வானத்துள் வானா வாய, -தீ
மண், நீர், காற்றினில் அவையா வாய்;
மோனத்துள் வீழ்ந்திருப் பார்-தவ
முனிவர்தம் அகத்தினி லொளிர்தரு வாய்;
கானத்துப் பொய்கையி லே-தனிக்
கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்,
தானத்து ஸ்ரீ தேவி, -அவள்
தாளிணை கைக்கொண்டு மகிழ்ந்திருப் பாய்!  295

ஆதியி லாதி யப்பா! -கண்ணா!
அறிவினைக் கடந்தவிண் ணகப்பொரு ளே!
சோதிக்குஞ் சோதி யப்பா! -என்றன்
சொல்லினைக் கேட்டருள் செய்திடு வாய்!
மாதிக்கு வெளியினி லே-நடு
வானத்திற் பறந்திடும் கருடன் மிசை
சோதிக்குள் ஊர்ந்திடு வாய், -கண்ணா!
சுடர்ப் பொருளே பே ரடற்பொரு ளே!  296

கம்பத்தி லுள்ளா னோ-அடா!
காட்டுன் றன் கடவுளைத் தூணிடத் தே!
வம்புரை செயு மூடா-என்று
மகன்மிசை யுறுமியத் தூணுதைத் தான்
செம்பவிர் குழலுடை யான்; -அந்தத்
தீயவல் லிரணிய னுடல்பிளந்தாய்!
நம்பிநின் னடிதொழு தேன்; -என்னை
நாணழி யாதிங்கு காத்தருள் வாய். 297

வாக்கினுக் சுசனை யும்-நின்றன்
வாக்கினிலசைத்திடும் வலிமையி னாய்,
ஆக்கினை கரத்துடை யான்-என்றன்
அன்புடை எந்தை!  என் னருட்கடலே!
நோக்கினிற் கதிருடை யாய்! -இங்கு
நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள் வாய்!
தேக்குநல் வானமு தே! -இங்குச்
சிற்றிடை யாய்ச்சி யில் வெண்ணெ யுண்டாய்!  298

வையகம் காத்திடு வாய்! ; -கண்ணா!
மணிவண் ணா, என்றன் மனச் சுடரே!
ஐய, நின் பதமல ரே-சரண்.
ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி! என்றாள்.
பொய்யர்தந் துயரினைப் போல், -நல்ல
புண்ணிய வாணர்தம் புகழினைப் போல்,
தையலர் கருணையைப் போல், -கடல்
சலசலத் தெறிந்திடும் அலைகளைப் போல். 299

பெண்ணொளி வாழ்த்திடு வார்-அந்தப்
பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல் போல்,
கண்ண பிரானரு ளால், -தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணிபுதி தாய்
வண்ணப்பொற் சேலைக ளாம்-அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தன வே!
எண்ணத்தி லடங்கா வே; -அவை
எத்தனை எத்தனை நிறத்தன வோ!  300

பொன்னிழை பட்டிழை யும்-பல
புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைக ளாய்
சென்னியிற் கைகுவித் தாள்-அவள்
செவ்விய மேனியைச் சார்ந்துநின் றே
முன்னிய ஹரிநா மம்-தன்னில்
மூளுநற் பயனுல கறிந்திட வே,
துன்னிய துகிற்கூட் டம்-கண்டு
தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட் டான். 301

தேவர்கள் பூச்சொரிந் தார்-ஓம்
ஜெயஜெய பாரத சக்திஎன்றே.
ஆவலோ டெழுந்து நின்று-மன்னை
ஆரிய வீட்டுமன் கைதொழு தான்.
சாவடி மறவரெல் லாம்-ஓம்
சக்திசக்தி சக்திஎன்று கரங்குவித் தார்.
காவலின் நெறிபிழைத் தான்-கொடி
கடியர வுடையவன் தலைகவிழ்ந் தான். 302

71. வீமன் செய்த சபதம்

வேறு

வீமனெழுந் துரைசெய் வான்:-இங்கு
விண்ணவ ராணை, பரா சக்தி யாணை;
தாமரைப் பூபினில் வந்தான்-மறை
சாற்றிய தேவன் திருக்கழ லாணை;
மாமகளைக் கொண்ட தேவன் எங்கள்
மரபுக்குத் தேவன் கண்ணன் பதத்தாணை
காமனைக் கண்ணழ லாலே-சுட்டுக்
காலனை வென்றவன் பொன்னடிமீதில் 303

ஆணையிட் டிஃதுரை செய்வேன்:-இந்த
ஆண்மை யிலாத்துரி யோதனன் றன்னை,
பேணும் பெருங்கன லொத்தாள்-எங்கள்
பெண்டு திரௌபதியைத் தொடைமீதில்
நாணின்றி வந்திருஎன்றான்-இந்த
நாய்மக னாந்துரி யோதனன் றன்னை,
மாணற்ற மன்னர்கண் முன்னே, -என்றன்
வன்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே,  304

தொடையைப் பிளந் துயிர் மாய்ப்பேன்-தம்பி
சூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன்; -அங்கு
கள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்,
நடைபெறுங் காண்பி ருலகீர்! -இது
நான்சொல்லும் வார்த்தைஎன் றெண்ணிடல் வேண்டா
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை-இது
சாதனை செய்க, பராசக்தி! என்றான். 305

72. அர்ஜுனன் சபதம்
 
பார்த்தனெழுந்துரை செய்வான்:-இந்தப்
பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன்.
தீர்த்தன் பெரும்புகழ் விஷ்ணு-எங்கள்
சீரிய நண்பன் கண்ணன் கழ லாணை;
கார்த்தடங் கண்ணி எந்தேவி -அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை;
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய், -ஹே!
பூதலமே! அந்தப் போதினில்என்றான். 306

73. பாஞ்சாலி சபதம்
 
தேவி திரௌபதி சொல்வாள்-ஓம்,
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவி துச்சாதனன் செந்நீர், -அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து-குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன் யான்; -இது
செய்யு முன்னே முடியேனென் றுரைத்தாள். 307

ஓமென் றுரைத்தனர் தேவர்; -ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்.
பூமி யதிர்ச்சி உண்டாச்சு-விண்ணைப்
பூழிப் படுத்திய தாஞ்சுழற் காற்று.
சாமி தருமன் புவிக்கே -என்று
சாட்சி யுரைத்தன பூதங்க ளைந்தும்!
நாமுங் கதையை முடித்தோம்-இந்த
நானில முற்றும் நல் லின்பத்தில் வாழ்க!  308

சபதச் சருக்கம் முற்றும்
பாஞ்சாலி சபதம் முற்றிற்று.

 
மேலும் முப்பெரும் பாடல்கள் »
temple news
1. கண்ணன் - என் தோழன் (புன்னாகவராளி - திஸ்ரஜாதி ஏகதாளம்)வத்ஸல ரசம் 1. பொன்னவிர் மேனிச் சுபத்திரை ... மேலும்
 
temple news
துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம் 1. பிரம்ம ஸ்துதி நொண்டிச் சிந்து ஓ மெனப் பெரியோர் கள்-என்றும்ஓதுவ தாய் ... மேலும்
 
temple news
1. குயில் காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலேநீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்மோகனமாஞ் சோதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar