Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்ணன் பாட்டு பாஞ்சாலி சபதம்- இரண்டாம் பாகம்
முதல் பக்கம் » முப்பெரும் பாடல்கள்
பாஞ்சாலி சபதம் - முதற்பாகம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜன
2012
03:01

துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம்

1. பிரம்ம ஸ்துதி நொண்டிச் சிந்து

ஓ மெனப் பெரியோர் கள்-என்றும்
ஓதுவ தாய் வினை மோதுவ தாய்,
தீமைகள் மாய்ப்பது வாய்,-துயர்
தேய்ப்பது வாய்,நலம் வாய்ப்பது வாய்,
நாமமும் உருவும் அற்றே-மனம்
நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய்,
ஆமெனும் பொருளனைத் தாய்,-வெறும்
அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய்; 1

நின்றிடும பிரமம்என் பார்;-அந்த
நிர்மலப் பொருளினை நினைத்திடு வேன்;
நன்றுசெய் தவம் யோகம்-சிவ
ஞானமும் பக்தியும் நணுகிட வே
வென்றி கொள்சிவ சக்தி-எனை
மேவுற வே,இருள் சாவுறவே,
இன்தமிழ் நூலிது தான்-புகழ்
ஏய்ந்தினி தாயென்றும் இலகிட வே. 2

2. சரஸ்வதி வணக்கம்

வெள்ளைக் கமலத் திலே-அவள்
வீற்றிருப் பாள் புக ழேற்றிருப் பாள்,
கொள்ளைக் கனியிசை தான்-நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள், 
கள்ளைக் கடலமு தை-நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொல வே
பிள்ளைப் பருவத் திலே-எனைப்
பேணவந் தாளருள் பூணவந் தாள். 3

வேதத் திருவிழி யாள்-அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,
சீதக் கதிர்மதி யே-நுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்,
வாதத் தருக்க மெனுஞ்-செவி
வாய்ந்தநற் றுணிவெனுந் தோடணிந் தாள்,
போதமென் நாசியி னாள்,-நலம்
பொங்குபல் சாத்திர வாயுடை யாள். 4

கற்பனைத் தேனித ழாள்,-சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையி னாள்,
சிற்ப முதற்கலை கள்-பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள்,
சொற்படு நயமறி வார்-அசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார்
விற்பனத் தமிழ்ப்புல வோர்-அந்த
மேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள். 5

வாணியைச் சரண்புகுந் தேன்;-அருள்
வாக்களிப் பாளெனத் திடமிகுந் தேன்;
பேணிய பெருந்தவத் தாள்,-நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்,
பூணியல் மார்பகத் தாள்-ஐவர்
பூவை;திரௌபதி புகழ்க் கதையை
மாணியல் தமிழ்ப்பாட் டால்-நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே! 6

3. ஹஸ்தினாபுரம்
 
அத்தின புரமுண் டாம்;-இவ்
அவனியி லேயதற் கிணையிலை யாம்;
பத்தியில் வீதிக ளாம்;வெள்ளைப்
பனிவரை போற்பல மாளிகை யாம்;
முத்தொளிர் மாடங்க ளாம்;-எங்கும்
மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைக ளாம்;
நத்தியல் வாவிக ளாம்;-அங்கு;
நாடு மிரதிநிகர் தேவிக ளாம்.  7

அந்தணர் வீதிக ளாம்;-மறை
யாதிக ளாம்கலைச் சோதிக ளாம்;
செந்தழல் வேள்விக ளாம்;-மிகச்
சீர்பெருங் சாத்திரக் கேள்விக ளாம்;
மந்திர கீதங்க ளாம்;-தர்க்க
வாதங்க ளாம்;தவ நீதங்க ளாம்;
சிந்தையி லறமுண் டாம்;-எனிற்
சேர்ந்திடுங் கலிசெயும் மறமுமுண் டாம். 8

மெய்த்தவர் பலருண் டாம்;-வெறும்
வேடங்கள் பூண்டவர் பலருமுண் டாம்;
உய்த்திடு சிவஞா னம்-கனிந்
தோர்ந்திடும் மேலவர் பலருண் டாம்;
பொய்த்த விந்திரசா லம்-நிகர்
பூசையும் கிரியையும் புலைநடை யம்
கைத்திடு பொய்ம்மொழி யும்-கொண்டு
கண்மயக் காற்பிழைப் போர்பல ராம். 9

மாலைகள் புரண்டசை யும்-பெரு
வரையெனத் திரண்டவன் தோளுடை யார்,
வேலையும் வாளினை யும்-நெடு
வில்லையுந் தண்டையும் விரும்பிடு வார்,
காலையும் மாலையி லும்-பகை
காய்ந்திடு தொழில்பல பழகிவெம் போர்
நூலையும் தேர்ச்சிகொள்வோர்,-கரி
நூறினைத் தனிநின்று நொறுக்கவல் லார். 10

ஆரிய வேல்மற வர்,-புவி
யாளுமொர் கடுந்தொழில் இனிதுணர்ந் தோர்,
சீரியல் மதிமுகத் தார்-மணித்
தேனித ழமுதென நுகர்ந்திடு வார்,
வேரியங் கள்ளருந் தி-எங்கும்
வெம்மத யானைகள் எனத்திரி வார்
பாரினில் இந்திரர் போல்-வளர்
பார்த்திவர் வீதிகள் பாடுவ மே  11

நல்லிசை முழுக்கங்க ளாம்;-பல
நாட்டிய மாதர்தம் பழக்கங்க ளாம்;
தொல்லிசைக் காவியங் கள்-அருந்
தொழிலுணர் சிற்பர்செய் ஓவியங் கள்
கொல்லிசை வாரணங் கள்-கடுங்
குதிரைக ளொடுபெருந் தேர்களுண் டாம்;
மல்லிசை போர்களுண் டாம்;-திரள்
வாய்ந்திவை பார்த்திடு வோர்களுண் டாம். 12

எண்ணரு கனிவகை யும்-இவை
இலகிநல் லொளிதரும் பணிவகை யும்,
தண்ணுறுஞ் சாந்தங்க ளும்-மலர்த்
தார்களும் மலர்விழிக் காந்தங்க ளும்
சுண்ணமும் நறும்புகையும்-சுரர்
துய்ப்பதற் குரியபல் பண்டங்க ளும்
உண்ணநற் கனிவகை யும்-களி
வுகையும் கேளியும் ஓங்கின வே, 13

சிவனுடை நண்பன்என் பார்,-வட
திசைக்கதி பதியள கேசன் என் பார்;
அவனுடைப் பெருஞ்செல் வம்-இவர்
ஆவணந் தொறும்புகுந் திருப்பது வாம்;
தவனுடை வணிகர்க ளும்-பல
தரனுடைத் தொழில்செயும் மாசன மும்
எவனுடைப் பயமு மிலா-தினிது
இருந்திடு தன்மையது எழில்நக ரே. 14

4. துரியோதனன் சபை
 
கன்னங் கரியது வாய்-அகல்
காட்சிய தாய்மிகு மாட்சிய தாய்,
துன்னற் கினியது வாய்-நல்ல
சுவைதரும் நீருடை யமுனை யெனும்
வன்னத் திருநதி யின்-பொன்
மருங்கிடைத் திகழ்ந்த அம் மணிநக ரில்,
மன்னவர் தங்கோ மான்-புகழ
வாளர வக்கொடி யுயர்த்துநின் றான். 15

துரியோ தனப்பெய ரான்,-நெஞ்சத்
துணிவுடை யான்,முடி பணிவறி யான்.
கரியோ ராயிரத் தின்-வலி
காட்டிடு வோன்என்றக் கவிஞர் பிரான்
பெரியோன் வேத முனி-அன்று
பேசிடும் படிதிகழ் தோள்வலி யோன்,
உரியோர் தாமெனி னும்-பகைக்
குரியோர் தமக்குவெந் தீயனை யான். 16

தந்தைசொல் நெறிப்படி யே-இந்தத்
தடந்தோள் மன்னவன் அரசிருந் தான்,
மந்திர முணர்பெரி யோர்-பலர்
வாய்த்திருந் தார்அவன் சபைதனி லே,
அந்தமில் புகழுடை யான்.-அந்த
ஆரிய வீட்டுமன்,அறம்அறிந் தோன்,
வந்தனை பெருங்குர வோர்-பழ
மறைக்குல மறவர்கள் இருவரொடே. 17

மெய்ந்நெறி யுணர்விது ரன்-இனி
வேறுபல் அமைச்சரும விளங்கிநின் றார்;
பொய்ந்நெறித் தம்பிய ரும்-அந்தப்
புலைநடைச் சகுனியும் புறமிருந் தார்?
மைந்நெறி வான்கொடை யான்-உய்
மானமும் வீரமும் மதியுமு ளோன்,
உய்ந்நெறி யறியா தான்.இறைக்கு
உயிர்நிகர் கன்னனும் உடனிருந் தான். 18

5. துரியோதனன் பொறாமை
வேறு

எண்ணிலாத பொருளின் குவையும்
யாங்க ணுஞ்செலுஞ் சக்கர மாண்பும்
மண்ணி லார்க்கும் பெறலரி தாமோர்
வார்க டற்பெருஞ் சேனையு மாங்கே
விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று
வேண்டு மின்பமும் பெற்றவ னேனும்
கண்ணி லாத்திரி தாட்டிரன் மைந்தன்
காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர். 19

வேறு

பாண்டவர் முடியுயர்த்தே-இந்தப்
பார்மிசை யுலவிடு நாள்வரை தான்
ஆண்டதொர் அரசா மோ?-எனது
ஆண்மையும் புகழுமொர் பொருளா மோ? 
காண்டகு வில்லுடை யோன்-அந்தக்
காளை யருச்சுனன் கண்களி லும
மாண்டகு திறல்வீ மன்-தட
மார்பிலும் எனதிகழ் வரைந்துள தே! 20

பாரத நாட்டி லுள்ள-முடிப்
பார்த்திவர் யார்க்குமொர் பதியென்றே
நாரதன் முதன்முனி வோர்-வந்து
நாட்டிடத் தருமன் அவ் வேள்விசெய் தான்;
சோரனவ் வெதுகலத் தான்-சொலும்
சூழ்ச்சியும் தம்பியர் தோள்வலியும்
வீரமி லாத்தரு மன்-தனை
வேந்தர் தம் மதலென விதித்தன வே. 21

ஆயிரம் முடிவேந் தர்-பதி
னாயிர மாயிரங் குறுநிலத் தார்
மாயிருந் திறைகொணர்ந் தே-அங்கு
வைத்ததொர் வரிசையை மறந்திட வோ?
தூயிழை யாடைக ளும்-மணித்
தொடையலும் பொன்னுமொர் தொகைப்படு மோ?
சேயிழை மடவா ரும்-பரித்
தேர்களுங் கொடுத்தவா சிறுதொகை யோ, 22

ஆணிப் பொற் கலசங்க ளும்-ரவி
யன்னநல் வத்தின் மகுடங்களும்
மாணிக்கக் குயிவல்க ளும்-பச்சை
மரகதத் திரளும்நன் முத்துக்க ளும்
பூணிட்ட திருமணி தாம்-பல
புதுப்புது வகைகளிற் பொலிவன வும்
காணிக்கை யாக்கொணர்ந் தார்;-அந்தக்
காட்சியை மறப்பதும் எளிதா மோ? 23

நால்வகைப் பசும்பொன் னும்-ஒரு
நாலா யிரவகைப் பணக்குவை யும்
வேல்வகை வில்வகை யும்-அம்பு
விதங்களும் தூணியும் வாள்வகை யும்
சூல்வகை தடிவகை யும்-பல
தொனிசெய்யும் பறைகளும் கொணர்ந்துவைத் தே
பால்வளர் மன்னவர் தாம்--அங்குப்
பணிந்ததை என்னுளம் மறந்திடு மோ? 24

கிழவியர் தபசியர் போல்-பழங்
கிளிக்கதை படிப்பவன்,பொறுமையென்றும்
பழவினை முடிவென்றும்-சொலிப்
பதுங்கிநிற் போன் மறத் தன்மையி லான்,
வழவழத் தருமனுக்கோ-இந்த
மாநில மன்னவர் தலைமைதந் தார்!
முழவினைக் கொடிகொண் டான்-புவி
முழுதையுந் தனியே குடிகொண் டான். 25

தம்பியர் தோள்வலி யால்-இவன்
சக்கர வர்த்தியென் றுயர்ந்தது வும்,
வெம்பிடு மதகலி யான்-புகழ்
வேள்விசெய் தந்நிலை முழக்கிய தும்,
அம்புவி மன்னரெ லாம்-இவன்
ஆணைதம் சிரத்தினில் அணிந்தவ ராய்
நம்பரும் பெருஞ்செல் வம்-இவன்
நலங்கிளர் சபையினில் மொழிந்தது வும். 26

எப்படிப் பொறுத்திடு வேன்?-இவன்
இளமையின் வளமைகள் அறியே னோ?
குப்பை கொ லோமுத்தும்-அந்தக்
குரைகடல் நிலத்தவர் கொணர்ந்து பெய்தார்;
சிப்பியும் பவளங்க ளும்-ஒளி
திரண்டவெண் சங்கத்தின் குவியல்க ளும்
ஒப்பில்வை டூரிய மும்-கொடுத்து
ஒதுஞ்கி நின்றார் இவன் ஒருவனுக் கே. 27

மலைநா டுடையமன் னர்-பல
மான்கொணர்ந் தார் புதுத் தேன்கொணர்ந் தார்,
கொலைநால் வாய்கொணர்ந் தார்-மலைக்
குதிரையும் பன்றியும் கொணர்ந்துதந் தார்;
கலைமான் கொம்புக ளும்-பெருங்
களிறுடைத் தந்தமும் கவரிக ளும்
விலையார் தோல்வகை யும்-கொண்டு
மேலும்பொன் வைத்தங்கு வணங்கிநின் றார், 28

செந்நிறத் தோல்,கருந் தோல்,-அந்தத்
திருவளர் கதலியின் தோலுட னே
வெந்நிறப் புலித்தோல் கள்,-பல
வேழங்கள் ஆடுகள் இவற்றுடைத் தோல்,
பன்னிற மயிருடை கள்,-விலை
பகரரும் பறவைகள் விலங்கினங் கள்,
பொன்னிறப் பாஞ்சாலி-மகிழ்
பூத்திடும் சந்தனம் அகில்வகை கள். 29

ஏலம் கருப்பூ ரம்-நறும்
இலவங்கம் பாக்குநற் சாதி வகை,
கோலம் பெறக்கொணர்ந்தே-அவர்
கொட்டி நின்றார் கரம் கட்டிநின்றார்;
மேலுந் தலத்திலு ளார்-பல
வேந்தர் அப்பாண்டவர் விழைந்திட வே
ஓலந் தரக்கொணர்ந் தே-வைத்த
தொவ்வொன்றும் என்மனத் துறைந்தது வே. 30

மாலைகள் பொன்னும்முத் தும்-மணி
வகைகளிற் புனைந்தவும் கொணர்ந்துபெய் தார்;
சேலைகள் நூறுவன் னம்-பல
சித்திரத் தொழில்வகை சேர்ந்தன வாய்,
சாலவும் பொன்னிழைத் தே-தெய்வத்
தையலர் விழைவன பலர்கொணர்ந் தார்,
கோலநற் பட்டுக்க ளின்-வகை
கூறுவதோ?எண்ணில் ஏறுவ தோ 31

சுழல்களும் கடகங்க ளும்-மணிக்
கவசமும் மகுடமும் கணக்கில வாம்
நிழற்நிறப் பரிபல வும்-செந்
நிறத்தன பலவும்வெண் ணிறம்பல வும்
தழல்நிறம் மேக நிறம்-விண்ணில்
சாரும் இந்திர வில்லை நேரும் நிறம்
அழகிய கிளிவயிற் றின்-வண்ணம்
ஆர்ந்தன வாய்ப்பணி சேர்ந்தன வாய். 32

காற்றெனச் செல்வன வாய்-இவை
கடிதுகைத் திடுந்திறம்மறவ ரொடே,
போற்றிய கையின ராய்ப்-பல
புரவலர் கொணர்ந்து,அவன் சபைபுகுந் தார்.
சீற்ற வன்போர் யானை-மன்னர்
சேர்த்தவை பலபல மந்தையுண் டாம்;
ஆற்றல் மிலேச்சமன் னர்-தொலை
அரபியா ஓட்டைகள் கொணர்ந்துதந் தார். 33

தென்றிசைச் சாவக மரம்-பெருந்
தீவு தொட்டேவட திசையத னில்
நின்றிடும் புகழ்சீ னம்-வரை
நேர்ந்திடும் பலபல நாட்டின ரும்,
வெற்றிகொள் தருமனுக் கே,-அவன்
வேள்வியில் பெரும்புகழ் விளையும்வண் ணம்,
நன்றுபல் பொருள் கொணர்ந் தார்-புவி
நாயகன் யுதிட்டிரன் எனவுணர்ந் தார். 34

ஆடுகள் சிலர்கொணர்ந் தார்;-பலர்
ஆயிர மாயிரம் பசுக்கொணர்ந் தார்;
மாடுகள் பூட்டின வாய்ப்-பல
வகைப்படு தானியம் சுமந்தன வாய்
ஈடுறு வண்டி கொண்டே-பலர்
எய்தினர்;கரும்புகள் பல கொணர்ந் தார்;
நாடுறு தயில வகை-நறு
நானத்தின் பொருள்பலர் கொணர்ந் தார்; 35

நெய்க்குடம் கொண்டுவந் தார்-மறை
நியமங்கொள் பார்ப்பனர் மகத்தினுக்கே;
மொய்க்குமின் கள்வகை கள்-கொண்டு
மோதினர் அரசினம் மகிழ்வுற வே;
தைக்குநற் குப்பா யம்.-செம்பொற்
சால்வைகள்,போர்வைகள்,கம்பளங் கள்,
கைக்குமட் டினுந்தா னோ-அவை
காண்பவர் விழிகட்கும் அடங்குப வோ? 36

தந்தத்தில் கட்டில்க ளும்,-நல்ல
தந்தத்தின் பல்லக்கும்,வாகன மும்,
தந்தத்தின் பிடி வாளும்-அந்தத்
தந்தத்திலே சிற்பத் தொழில்வகை யும்,
தந்தத்தி லாதன மும்-பின்னும்
தமனிய மணிகளில் இவையனைத் தும்
தந்தத்தை கணக்கிட வோ?-முழுத்
தரணியின் திருவும் இத் தருமனுக் கோ? 37

வேறு

என்றிவ் வாறு பலபல எண்ணி
ஏழை யாகி இரங்குத லுற்றான்.
வன்றி றத்தொரு கல்லெனும் நெஞ்சன்,
வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான்,
குன்ற மொன்று குழைவுற் றிளகிக்
குழம்பு பட்டழி வெய்திடும் வண்ம்
கன்று தலத் துள்ளுறை வெம்மை
காய்ந்தெழுந்து வெளிப்படல் போல. 38

நெஞ்சத் துள்ளோர் பொறாமை யெனுந்தீ
நீள்வதால் உள்ளம் நெக்குரு கிப்போய்,
மஞ்சன் ஆண்மை மறந்திண்மை மானம்
வண்மை யாவும் மறந்தன னாகிப்
பஞ்சை யாமொரு பெண்மகள் போலும்
பாலர் போலும் பரிதவிப் பானாய்க்
கொஞ்ச நேரத்திற் பாதகத் தோடு
கூடி யேஉற வெய்திநின் றானால். 39

யாது நேரினும் எவ்வகை யானும்
யாது போயினும் பாண்டவர் வாழ்வைத்
தீது செய்து மடித்திட எண்ணிச்
செய்கை யொன்றறி யான்திகைப் பெய்திச்
சூதும் பொய்யும் உருவெனக் கொண்ட
துட்ட மாமனத் தான்சர ணெய்தி,
ஏது செய்வம் எனச்சொல்லி நைந்தான்,
எண்ணத் துள்ளன யாவும் உரைத்தே. 40

மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த
மாம கத்தினில் வந்து பொழிந்த
சொன்னம் பூண்மணி முத்திவை கண்டும்,
தோற்றங் கண்டும் மதிப்பினைக் கண்டும்,
என்ன பட்டது தன்னுளம் என்றே
ஈன மாமன் அறிந்திடும் வண்ணம்
முன்னம் தான் நெஞ்சிற் கூறிய வெல்லாம்
மூடன் பின்னும் எடுத்து மொழிந்தான். 41

6. துரியோதனன் சகுனியிடம் சொல்வது

வேறு

உலகு தொடங்கிய நாள்முத லாகநம் சாதியில்-புகழ்
ஓங்கி நின்றாரித் தருமனைப்போலெவர்?மாமனே!
இலகு புகழ்மனு வாதி முதுவர்க்கும்,மாம னே!-பொருள்
ஏற்றமும் மாட்சியும் இப்படி யுண்டுகொல்?மாமனே?
கலைக ளுணர்ந்தநல் வேதியப் பாவலர் செய்தவாம்-பழங்
கற்பனைக் காவியம் பற்பல கற்றனைமாம னே!
பலகடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும்-சொல்லப் 42
பார்த்ததுண்டோ?கதை கேட்டதுண்டோ?புகல் மாமனே!

எதனை யுலகில் மறப்பினும்,யானினி,மாம னே!-இவர்
யாகத்தை என்றும் மறந்திட லென்பதொன் றேது காண்?
விதமுறச் சொன்ன கொருட்குவை யும்பெரி திலைகாண்;அந்த
வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பலவுண் டே;
இதனை யெலாமவ் விழியற்ற தந்தையின் பாற்சென்றே சொல்லி,
இங்கிவர் மீதவ னும்பகை எய்திடச் செய்குவாய்
மிதமிகு மன்பவர் மீதுகொண்டானவன் கேட்கவே-அந்த
வேள்விகண் டென்னுயிர் புண்படுஞ் செய்தி விளம்பு வாய். 43

கண்ணைப் பறிக்கும் அழகுடை யாரிள மங்கையர்-பல
காமரு பொன்மணிப் பூண்க ளணிந்தவர் தம்மை யே
மண்ணைப் புரக்கும் புரவலர் தாமந்த வேள்வியில்-கொண்டு
வாழ்த்தி யளித்தனர் பாண்டவர்க் கே,எங்கள் மாமனே!
எண்ணைப் பழிக்குந் தொகையுடை யாரிள மஞ்சரைப் பலர்
ஈந்தன் மன்ன ரிவர்தமக் குத்தொண் டியற்ற வே!
விண்ணைப் பிளக்குந் தொனியுடைச் சங்குகள் ஊதினார்;-தெய்வ 44

வேதியர் மந்திரத் தோடுபல் வாழ்த்துக்கள் ஓதினர்.
நாரதன் தானும் அவ்வேத வியாசனும் ஆங்ஙனே-பலர்
நானிங் குரைத்தற் கரிய பெருமை முனிவரும்,
மாரத வீரர்,அப் பாண்டவ வேள்விக்கு வந்ததும்,-வந்து
மாமறை யாசிகள் கூறிப் பெரும்புகழ் தந்த தும்,
வீரர்தம் போரின் அரியநற் சாத்திர வாதங்கள்-பல
விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீசவே,
சார மறிந்த யுதிட்டிரன் கேட்டு யிந்ததும்,-நல்ல
தங்க மழைபொழிந் தாங்கவ்க் கேமகிழ் தந்த தும்.  45

விப்பர ராதிய நால்வரு ணத்தவர் துய்ப்பவே-நல்
விருந்து செயலில் அளவற்ற பொன்செல விட்டதும்
இப்பிற விக்குள் இவையொத்த வேள்வி விருந்துகள்-புவி
எங்கணும் நான்கண்ட தில்லைஎனத்தொனி பட்டதும்,
தப்பின்றி யநேல் விருந்தினர் யாருக்குந் தகுதிகள்-கண்டு
தக்கசன் மானம் அளித்து வரிசைகள் இட்டதும்,
செப்புக நீயவ் விழியற்ற தந்தைக்கு;நின்மகன்-இந்தச்
செல்வம் பெறாவிடில் செத்திடு வான்என்றும் செப்புவாய். 46

அண்ணனை மைந்தன் அவனிக் குரியவன் யானன்றோ? அவர்
அடியவ ராகி யெமைப்பற்றி நிற்றல் விதியன் றோ?
பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர்தந்தார்? அந்தப்
பாண்ட வர்நமைப் புல்லென எண்ணுதல் பார்த்தை யோ?
கண்ண னுக்கு முதல்உப சாரங்கள் காட்டினார்;-சென்று
கண்ணி லாத்தந்தைக் கிச்செய லின்பொருள் காட்டுவாய்;
மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான்? என்றன்
மாமனே! அவன் நம்மில் உயர்ந்த வகைசொல் வாய்! 47

சந்தி ரன்குலத் தேபிறந் தோர்தந் தலைவன்யான்-என்று
சகமெ லாஞ்சொலும் வார்த்தைமெய் யோவெறுங் சாலமோ?
தந்திரத்தொழில் ஒன்றுண ரும்சிறு வேந்தனை-இவர்
தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ?
மூந்தி ரத்திலச் சேதியர் மன்னனை மாய்த்திட்டார்;-ஐய!
மாம கத்தில் அதிதியைக் கொல்ல மரபுண்டோ?
இந்திரத்துவம் பெற்றிவர் வாழும் நெறிநன்றே!-இதை
எண்ணி எண்ணி என் நெஞ்சு கொதிக்குது மாமனே! 48

சதிசெய் தார்க்குச் சதிசெயல் வேண்டும்என் மாமனே!-இவர்
தாமென் அன்பன் சராசந் தனுக்குமுன் எவ்வ கை
விதிசெய் தார்?அதை என்றும் உள்ளம் மறக்குமோ?-இந்த
மேதினி யோர்கள் மறந்து விட்டார்.இஃதோர்விந்தை யே?
திதிசெய் தாரைப் பணிகுவர் மானிடர்,மாமனே!-எந்த
நெறியி னாலது செய்யினும்,நாயென நீள்பு வி
துதிசெய் தேயடி நக்குதல் கண்டனை மாமனே!-வெறுஞ்
சொல்லுக் கேயற நூல்கள் உரைக்கும் துணிவெலாம். 49

வேறு

பொற்றடந் தேரொன்று வாலிகன்
கொண்டு விடுத்ததும்-அதில்
பொற்கொடி தியர் கேமன்
வந்து தொடுத்ததும்,
உற்றதோர் தம்பிக்குத் தென்னவன்
மாப்ணி தந்ததும்;-ஒளி
யோங்கிய மாலையும் மாகதன்
தான்கொண்டு வந்ததும்,
பற்றல ரஞ்சும் பெரும்புக
ழேக லவியனே -செம்பொற்
பாதுகை கொண்டு யுதிட்டிரன்
தாளினில் ஆர்த்தும்,
முற்றிடு மஞ்சனத் திற்கப் பல
பலதீர்த்தங்கள்-மிகு
மொய்ம்புடை யான் அவ் அவந்தியர்
மன்னவன் சேர்த்ததும்.  50

மஞ்சன நீர்தவ வேத
வியாசன் பொழிந்ததும்,-பல
வைதிகர் கூடிநன் மந்திர
வாழ்த்து மொழிந்ததும்,
குஞ்சரச் சாத்தகி வெண்குடை
தாங்கிட,வீமனும்-இளங்
கொற்றவ னும்பொற் சிவிறிகள்
வீச,இரட்டையர்
அஞ்சுவர் போலங்கு நின்று
கவரி இரட்டவே-கடல்
ஆளு மொருவன் கொடுத்ததொர்
தெய்விகச் சங்கினில்
வஞ்சகன் கண்ணன் புனிதமுறுங்
கங்கை நீர்க்கொண்டு-திரு
மஞ்சன மாட்டும்அப் போதில்
எவரும் மகிழ்ந்ததும்  51

மூச்சை யடைத்த தடா!சபை
தன்னில் விழுந்ததுநான்-அங்கு
மூர்ச்சை யடைந்தது கண்டனையே!
என்றன் மாமனே!
ஏச்சையும் அங்கவர் கொண்ட
நகைப்பையும் எண்ணுவாய்;-அந்த
ஏந்திழை யாளும் எனைச்சிரித்
தாளிதை எண்ணுவாய்;
பேச்சை வளர்த்துப் பயனொன்று
மில்லை,என் மாமனே!-அவர்
பேற்றை அழிக்க உபாயஞ்சொல்வாய்,
என்றன் மாமனே!
தீச்செயல் நற்செயல் ஏதெனினும்
ஒன்று செய்து,நாம்-அவர்
செல்வங் கவர்ந்த வரைவிட
வேண்டும் தெருவிலே.  52

7. சகுனியின் சதி

வேறு

என்று சுயோதனன் கூறியே-நெஞ்சம்
ஈர்ந்திடக் கண்ட சகுனி தான்-அட!
இன்று தருகுவன் வெற்றியே;-இதற்கு
இத்தனை வீண்சொல் வளர்ப்ப தேன்?-இனி
ஒன்றுரைப் பேன்நல் உபாயந்தான்;.அதை
ஊன்றிக் கருத்தொடு கேட்பையால்;-ஒரு
மன்று புனைந்திடச் செய்தி நீ,-தெய்வ
மண்டப மொத்த நலங்கொண்டே  53

மண்டபங் காண வருவி ரென்-றந்த
மன்னவர் தம்மை வரவழைத்-தங்கு
கொண்ட கருத்தை முடிப்ப வே-மெல்லக்
கூட்டிவன் சூது பொரச் செய்வோம்-அந்த
வண்டரை நாழிகை யொன்றிலே-தங்கள்
வான்பொருள் யாவையும் தோற்றுனைப்-பணி
தொண்ட ரெனச்செய் திடுவன் யான்,-என்றன்
சூதின் வலிமை அறிவை நீ.  54

வெஞ்சமர் செய்திடு வோமெனில்-அதில்
வெற்றியும் தோல்வியும் யார்கண்டார்?-அந்தப்
பஞ்சவ் வீரம் பெரிது காண்-ஒரு
பார்த்தன்கை வில்லுக் கெதிருண்டோ?-உன்றன்
நெஞ்சத்திற் சூதை யிகழ்ச்சியாக் -கொள்ள
நீத மில்லை முன்னைப் பார்த்திவர்-தொகை
கொஞ்ச மிலைப்பெருஞ் சூதினால்-வெற்றி
கொண்டு பகையை அழித்துளோர். 55

நாடும் குடிகளும் செல்வமும்-எண்ணி,
நானிலத் தோர்கொடும் போர் செய்வார்;-அன்றி
ஓடுங் குருதியைத் தேக்கவோ?-தமர்
ஊன்குவை கண்டு களிக்கவோ?அந்த
நாடும் குடிகளும் செல்வமும்-ஒரு
நாழிகைப் போதினில் சூதினால்-வெல்லக்
கூடு மினிற்பிறி தெண்ணலேன்?-என்றன்
கொள்கை இதுவெனக் கூறினான். 56

இங்கிது க்டட சுயோதனன்-மிக
இங்கிதம் சொல்லினை,மாமனே!என்று
சங்கிலிப் பொன்னின் மணியிட்ட,-ஒளித்
தாமம் சகுனிக்குச் சூட்டினான்;-பின்னர்
எங்கும் புவிமிசை உன்னைப் போல்-எனக்
கில்லை இனியது சொல்லுவோர்-என்று
பொங்கும் உவகையின் மார்புறக் -கட்டிப்
பூரித்து விம்மித் தழுவினான்.  57
 
8. சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல்
 
மற்றதன் பின்னர் இருவரும்-அரு
மந்திக் கேள்வி உடையவன்-பெருங்
கொற்றவர் கோன்திரி தராட்டிரன்-சபை
கூடி வணங்கி இருந்தனர்;-அருள்
அற்ற சகுனியும் சொல்லுவான்;-ஐய!,
ஆண்டகை நின்மகன் செய்திகேள்!-உடல்
வற்றித் துரும்பொத் திருக்கின்றான்;-உயிர்
வாழ்வை முழுதும வெறுக்கின்றான். 58

உண்ப சுவையின்றி உண்கின்றான்;-பின்
உடுப்ப திகழ உடுக்கின்றான்;-பழ
நண்பர்க ளோடுற வெய்திடான்;.எள
நாரியரைச் சிந்தை செய்திடான்;-பிள்ளை
கண்பசலை கொண்டு போயினான்-இதன்
காரணம் யாதென்று கேட்பையால்;-உயர்
திண்ப ருமத்தடந் தோளினாய்!-என்று
தீய சகுனியும் செப்பினான்.  59

தந்தையும் இவ்வுரை கேட்டதால்-உளம்
சாலவும் குன்றி வருந்தியே,-என்றன்
மைந்த!நினக்கு வருத்தமேன்?-இவன்
வார்த்தையி லேதும் பொருளுண்டோ? நினக்கு
எந்த விதத்துங் குறையுடோ?நினை
யாரும் எதிர்த்திடு வாருண்டோ?-நின்றன்
சிந்தையில் எண்ணும் பொருளெலாம்-கணந்
தேடிக் கொடுப்பவர் இல்லையோ? 60

இன்னமு தொத்த உணவுகள்-அந்த
இந்திரன் வெஃகுறும் ஆடைகள்,-பலர்
சொன்ன பணிசெயும் மன்னவர்,-வருந்
துன்பந் தவிர்க்கும் அமைச்சர்கள்,-மிக
நன்னலங் கொண்ட குடி படை-இந்த
நானில மெங்கும் பெரும்புகழ்-மிஞ்சி
மன்னும்அப் பாண்டவச் சோதரர்-இவை
வாய்ந்தும் உனக்குத் துயருண்டோ? 61

தந்தை வசனஞ் செயிவுற்றே-கொடி
சர்ப்பத்தைக் கொண்டதொர் கோமன்
வெந்தழல் போலச் சினங்கொடே-தன்னை
முறிப் பலசொல விளம்பினான்;.இவன்
மந்த மதிகொண்டு சொல்வதை-அந்த
மாமன் மதித்துரை செய்குவான்;-ஐய;
சிந்தை வெதுப்பத்தி னாலிவன்-சொலும்
சீற்ற மொழிகள் பொறுப்பையால்.  62

தன்னுளத் துள்ள குறையெலாம்-நின்றன்
சந்நிதி யிற்சென்று சொல்லிட-முதல்
என்னைப் பணித்தனன்;யானிவன்-றனை
இங்கு வலியக் கொணர்ந்திட்டேன்;
நன்னய மேசிந்தை செய்கின்றான்;-எனில்
நன்கு மொழிவ றிந்திலன்;-நெஞ்சைத்
தின்னுங் கொடுந்தழல் கொண்டவர்-சொல்லுஞ்
செய்தி தெளிய உரைப்பரோ?  63

நீ பெற்ற புத்திர னேயன்றோ?-மன்னர்
நீதி யியல்பின் அறிகின்றான்-ஒரு
தீபத்தில் சென்று கொளுத்திய-பந்தம்
தேசு குறைய எரியுமோ?-செல்வத்
தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல்-மன்னர்
சாத்திரத் தேமுதற் சூத்திரம்;-பின்னும்
ஆபத் தரசர்க்கு வேறுண்டோ-தம்மில்
அன்னியர் செல்வம் மிகுதல்போல்? 64

வேள்வியில் அன்றந்தப் பாண்டவர்-நமை
வேண்டுமட் டுங்குறை செய்தனர்;-ஒரு
வேள்வி யிலாதுன் மகன்றனைப்-பலர்
கேலிசெய் தேநகைத் தார்,கண்டாய்!-புவி
ஆள்வினை முன்னவர்க் கின்றியே-புகழ்
ஆர்ந்திளை யோரது கொள்வதைப்-பற்றி
வாள்விழி மாதரும் நம்மையே-கய
மக்களென் றெண்ணி நகைத்திட்டார். 65

ஆயிரம் யானை வலிகொண்டான்-உன்றன்
ஆண்டகை மைந்த னிவன் கண்டாய்!-இந்த
மாயரு ஞாலத் துயர்ந்ததாம்-மதி
வான்குலத் திற்குமுதல்வனாம்;
ஞாயிறு நிற்பவும் மின்மினி-தன்னை
நாடித் தொழுதிடுந் தன்மைபோல்,-அவர்
வேயிருந் தூதுமொர் கண்ணனை -அந்த
வேள்வியில் சால உயர்த்தினார்.  66

ஐய!நின் மைந்தனுக் கில்லைகாண்-அவர்
அர்க்கியம் முற்படத் தந்ததே;-இந்த
வையகத் தார்வியப் பெய்தவே,-புவி
மன்னவர் சேர்ந்த சபைதனில்-மிக
நொய்யதோர் கண்ணனுக் காற்றினார்;-மன்னர்
நொந்து மனங்குன்றிப் போயினர்;-பணி
செய்யவும் கேலிகள் கேட்கவும்-உன்றன்
சேயினை வைத்தனர் பாண்டவர். 67

பாண்டவர் செல்வம் விழைகின்றான்;-புவிப்
பாரத்தை வேண்டிக் குழைகின்றான்;-மிக
நீண்டமகிதலம் முற்றிலும்-உங்கள்
நேமி செலும்புகழ் கேட்கின்றான்;-குலம்
பூண்ட பெருமை கெடாதவா-றெண்ணிப்
பொங்குகின் றான்நலம் வேட்கின்றான்;-மைந்தன்
ஆண்டகைக் கிஃது தகுமன்றோ?-இல்லை
யாமெனில வையம் நகுமன்றோ? 68

நித்தங் கடலினிற் கொண்டுபோய்-நல்ல
நீரை அளவின்றிக் கொட்டுமாம்-உயர்
வித்தகர் போற்றிடுங் கங்கையா-றது
வீணிற் பொருளை யழிப்பதோ?-ஒரு
சத்த மிலாநெடுங் காட்டினில்-புனல்
தங்கிநிற் குங்குளம் ஒன்றுண்டாம்,-அது
வைத்ததன் நீரைப் பிறர்கொளா-வகை
வாரடைப் பாசியில் மூடியே.  69

சூரிய வெப்பம் படாமலே-மரம்
சூழ்ந்த மலையடிக் கீழ்ப்பட்டே-முடை
நீரின் நித்தலும் காக்குமாம்;-இந்த
நீள்சுனை போல்வர் பலருண்டே?-எனில்
ஆரியர் செல்வம் வளர்தற்கே-நெறி
ஆயிரம் நித்தம் புதியன-கண்டு
வாரிப் பழம்பொருள் எற்றுவார்;-இந்த
வண்மையும் நீயறி யாததோ?  70

9. திரிதராட்டிரன் பதில் கூறுதல்

கள்ளச் சகுனியும் இங்ஙனே பல
கற்பனை சொல்லித்தன் உள்ளத்தின்-பொருள்
கொள்ளப் பகட்டுதல் கேட்டபின்-பெருங்
கோபத் தொடேதிரி தாட்டிரன்,-அட!
பிள்ளையை நாசம் புரியவே-ஒரு
பேயென நீ வந்து தோன்றினாய்;-பெரு
வெள்ளத்தைப் புல்லொன் றெதிர்க்குமோ:-இள
வேந்தரை நாம்வெல்ல லாகுமோ? 71

சோதரர் தம்முட் பகையுண்டோ?-ஒரு
சுற்றத்தி லேபெருஞ் செற்றமோ?-நம்மில்
ஆதரங் கொட்வ ரல்லரோ?-முன்னர்
ஆயிரஞ் சூழ்ச்சி இவன்செய்தும்-அந்தச்
சீதரன் தண்ணரு ளாலுமோர்-பெருஞ்
சீலத்தி னாலும் புயவலி-கொண்டும்
யாதொரு தீங்கும் இலாமலே-பிழைத்
தெண்ணருங கீர்த்திபெற் றாரன்றோ? 72

பிள்ளைப் பருவந் தொடங்சிகயே-இந்தப்
பிச்சன் அவர்க்குப் பெரும்பகை -செய்து
கொள்ளப் படாத பெரும்பழி-யன்றிக்
கொண்டதொர் நன்மை சிறிதுண்டோ?-நெஞ்சில்
எள்ளத் தகுந்த பகைமையோ?-அவர்
யார்க்கும் இளைத்த வகையுண்டோ?-வெறும்
நொள்ளைக் கதைகள் கதைக்கிறாய்,-பழ
நூலின் பொருளைச் சிதைக்கிறாய், 73

மன்னவர் நீதி சொலவந்தாய்-பகை
மாமலை யைச்சிறு மட்குடம்-கொள்ளச்
சொன்னதொர் நூல்சற்றுக் காட்டுவாய்!-விண்ணில்
சூரியன் போல்நிக ரின்றியே-புகழ்
துன்னப் புவிச்சக்க ராதிபம்-உடற்
சோதரர் தாங்கொண் டிருப்பவும்-தந்தை
என்னக் கருதி அவரெனைப் -பணிந்து
என்சொற் கடங்கி நடப்பவும்,  74

முன்னை இவன்செய்த தீதெலாம்-அவர்
முற்றும் மறந்தவ ராகியே-தன்னைத்
தின்ன வருமொர் தவளையைக்-கண்டு
சிங்கஞ் சிரித்தருள் செய்தல்போல-துணை
யென்ன இவனை மதிப்பவும்-அவர்
ஏற்றத்தைக் கண்டும் அஞ்சாமலே-நின்றன்
சின்ன மதியினை என்சொல்வேன் -பகை
செய்திட எண்ணிப் பிதற்றினாய்,  75
 
ஒப்பில் வலிமை யுடையதாந் -துணை
யோடு பகைத்தல் உறுதியோ-நம்மைத்
தப்பிழைத் தாரந்த வேள்வியில்-என்று
சாலம் எவரிடஞ் செய்கிறாய்?-மயல்
அப்பி விழிதடு மாறியே-இவன்
அங்கு மிங்கும் விழுந் தாடல் கண்டு-அந்தத்
துப்பிதழ் மைத்துனி தான்சிரித் -திடில்
தோஷ மிதில்மிக வந்ததோ?  76

தவறி விழுபவர் தம்மையே-பெற்ற
தாயுஞ் சிரித்தல் மரபன்றோ?-எனில்
இவனைத் துணைவர் சிரித்ததோர்-செயல்
எண்ணரும் பாதக மாகுமோ?-மனக்
கவலை வளர்த்திடல் வேண்டுவோர்-ஒரு
காரணங் காணுதல் கஷ்டமோ?-வெறும்
அவல மொழிகள் அளப்பதேன்?-தொழில்
ஆயிர முண்டவை செய்குவீர்.  77

சின்னஞ் சிறிய வயதிலே-இவன்
தீமை அவர்க்குத் தொடங்கினான்-அவர்
என்னரும் புத்திரன் என்றெண்ணித் -தங்கள்
யாகத் திவனைத் தலைக்கொண்டு-பசும்
பொன்னை நிறைத்ததொர் பையினை-மனம்
போலச் செலவிடு வாய்என்றே-தந்து
மன்னவர் காண இவனுக்கே-தம்முள்
மாண்பு கொடுத்தன ரல்லரோ?  78

கண்ணனுக் கேமுதல் அர்க்கியம்-அவர்
காட்டினர் என்று பழித்தனை!-எனில்,
நண்ணும் விருந்தினர்க் கன்றியே-நம்முள்
நாமுப சாரங்கள் செய்வதோ?-உறவு
அண்ணனும் தம்பியும் ஆதலால்-அவர்
அன்னிய மாநமைக் கொண்டிலர்;-முகில்
வண்ணன் அதிதியர் தம்முளே-முதல்
மாண்புடை யானெனக் கொண்டனர். 79

கண்ணனுக் கேயது சாலுமென்று-உயர்
கங்கை மகன்சொலச் செய்தனர்-இதைப்
பண்ணரும் பாவமென் றெண்ணினால்-அதன்
பார மவர்தமைச் சாருமோ?-பின்னும்,
கண்ணனை ஏதெனக் கொண்டனை-அவன்
காலிற் சிறிதுக ளொப்பவர்-நிலத்
தெண்ணரும் மன்னவர் தம்முளே-பிறர்
யாரு மிலையெனல் காணுவாய்.  80

ஆதிப் பரம்பொருள் நாரணன்-தெளி
வாகிய பொற்கடல் மீதிலே-நல்ல
சோதிப் பணாமுடி யாயிரம்-கொண்ட
தொல்லறி வென்னுமோர் பாம்பின்மேல்-ஒரு
போதத் துயில்கொளும் நாயகன்,-கலை
போந்து புவிமிசைத் தோன்றினான்-இந்தச்
சீதக் குவளை விழியினான்-என்று
செப்புவர் உண்மை தெளிந்தவர்.  81

நானெனும் ஆணவந் தள்ளலும்-இந்த
ஞாலத்தைத் தானெனக் கொள்ளலும்-பர
மோன நிலையின் நடத்தலும்-ஒரு
மூவகைக் காலங் கடத்தலும் நடு
வான கருமங்கள் செய்தலும்-உயிர்
யாவிற்கும் நல்லருள் பெய்தலும்-பிறர்
ஊனைச் சிதைத்திடும் போதினும்-தனது
உள்ளம் அருளின் நெகுதலும்,  82

ஆயிரங் கால முயற்சியால்-பெற
லாவர் இப்பேறுகள் ஞானியர்;-இவை
தாயின் வயிற்றில் பிறந்தன்றே-தம்மைச்
சார்ந்து விளங்கப் பெறுவரேல்,-இந்த
மாயிரு ஞாலம் அவர்தமைத்-தெய்வ
மாண்புடை யாரென்று போற்றுங்காண்!-ஒரு
பேயினை வேதம் உணர்த்தல்போல்,-கண்ணன்
பெற்றி உனக்கெவர் பேசுவார்?  83

10. துரியோதனன் சினங் கொள்ளுதல்

வேறு

வெற்றி வேற்கைப் பரதர்தங் கோமான்,
மேன்மை கொண்ட விழியகத் துள்ளோன்,
பெற்றி மிக்க விதுர னறிவைப்
பன்னும் ம்ற்றொரு கண்ணெனக் கொண்டோன்,
முற்று ணர்திரி தாட்டிரன் என்போன்
மூடப் பிள்ளைக்கு மாமன் சொல் வார்த்தை
எற்றி நல்ல வழக்குரை செய்தே
ஏற்ற வாறு நயங்கள் புகட்ட,  84

கொல்லும் நோய்க்கு மருந்துசெய் போழ்தில்
கூடும வெம்மைய தாய்ப்பிணக் குற்றே
தொல்லு ணர்வின் மருத்துவன் தன்னைச்
சோர்வு றுத்துதல் போல்,ஒரு தந்தை
சொல்லும் வார்த்தையி லோதெரு ளாதரன்
தோமி ழைப்பதி லோர்மதி யுள்ளான்,
கல்லும் ஒப்பிடத் தந்தை விளக்கும்
கட்டு ரைக்குக் கடுஞ்சின முற்றான் 85

11. துரியோதனன் தீ மொழி

வேறு

பாம்பைக் கொடியேன் றுயர்த்தவன்-அந்தப்
பாம்பெனச் சீறி மொழிகுவான்;-அட!
தாம்பெற்ற மைந்தர்குத் தீதுசெய்-திடும்
தந்தையர் பார்மிசை உண்டுகொல்?-கெட்ட
வேம்பு நிகரிவ னுக்குநான்;சுவை
மிக்க சருக்கரை பாண்டவர்;-அவர்
தீம்பு செய்தாலும் புகழ்கின்றான்,-திருத்
தேடினும் என்னை இகழ்கின்றான். 86

மன்னர்க்கு நீதி யொருவகை;-பிற
மாந்தர்க்கு நீதிமற் றோர்வகை-என்று
சொன்ன வியாழ முனிவனை-இவன்
சுத்த மடையனென் றெண்ணியே,-மற்றும்
என்னென்ன வோகதை சொல்கிறான்,-உற
வென்றும் நட்பென்றும் கதைக்கிறான்,-அவர்
சின்ன முறச்செய வேதிறங்-கெட்ட
செத்தையென் றென்னை நினைக்கிறான்; 87

இந்திர போகங்கள் என்கிறான்,-உண
வின்பமும் மாதரின் இன்பமும்-இவன்
மந்திர மும்படை மாட்சியும்-கொண்டு
வாழ்வதை விட்டிங்கு வீணிலே-பிறர்
செந்திருவைக் கண்டு வெம்பியே-உளம்
தேம்புதல் பேதைமை என்கிறான்;-மன்னர்
தந்திரந் தேர்ந்தவர் தம்மிலே-எங்கள்
தந்தையை ஒப்பவர் இல்லைகாண்! 88

மாதர் தம் இன்பம் எனக்கென்றான்,-புவி
மண்டலத் தாட்சி அவர்க்கென்றான்-நல்ல
சாதமும் நெய்யும் எனக் கென்றான்,-எங்கும்
சர்ற்றிடுங் கீர்த்தி அவர்க்கென்றான்;-அட!
ஆதர விங்ஙனம் பிள்ளைமேல்-வைக்கும்
அப்பன் உலகினில் வேறுண்டோ?உயிர்ச்
சோதரர் பாண்டவர் தந்தை நீ-குறை
சொல்ல இனியிட மேதையா!  89

சொல்லின் நயங்கள் அறிந்திலேன்,-உனைச்
சொல்லினில் வெல்ல விரும்பிலேன்;-கருங்
கல்லிடை நாருரிப் பாருண்டோ?-நினைக்
காரணங் காட்டுத லாகுமோ?-என்னைக்
கொல்லினும் வேறெது செய்யினும்,-நெஞ்சில்
கொண்ட கருத்தை விடுகிறேன்;-அந்தப்
புல்லிய பாண்டவர் மேம்படக்-கண்டு
போற்றி உயிர்கொண்டு வாழ்கிலேன்; 90

வாது நின்னொடு தொடுக்கிலேன்;-ஒரு
வார்த்தை மட்டுஞ்சொலக் கேட்பையால்;ஒரு
தீது நமக்கு வராமலே-வெற்றி
சோர்வதற் கோர்வழி யுண்டு,காண்!-களிச்
சூதுக் கவரை-வெற்றி
தோற்றிடு மாறு புரியலாம்;-இதற்
கேதுந் தடைகள் சொல்லாமலே-என
தெண்ணத்தை நீகொளல் வேண்டுமால் 91

12. திரிதராட்டிரன் பதில்

வேறு

திரிதாட் டிரன் செவியில்-இந்தத்
தீமொழி புகுதலுந் திகைத்து விட்டான்!
பெரிதாத் துயர் கொணர்ந்தாய்;-கொடும்
பேயெனப் பிள்ளைகள் பெற்று விட்டேன்;
அரிதாக் குதல்போலாம்-அமர்
ஆங்கவ ரொடுபொரல் அவலம் என்றேன்;
நரிதாக் குதல்போலாம்-இந்த
நாணமில் செயலினை நாடுவ னோ? 92

ஆரியர் செய்வாரோ?-இந்த
ஆண்மையி லாச்செயல் எண்ணுவரோ?
பாரினில் பிறருடைமை-வெஃகும்
பதரினைப் போலொரு பதருண்டோ?
பேரியற் செல்வங்களும்-இசைப்
பெருமையும் எய்திட விரும்புதியேல்,
காரியம் இதுவாமோ?-என்றன்
காளை யன்றோ இது கருத லடா! 93

வீரனுக் கேயிசை வார்-திரு,
மேதினி எனுமிரு மனைவியர் தாம்,
ஆரமர் தமரல் லார்-மிசை
ஆற்றிநல் வெற்றியில் ஓங்குதி யேல்,
பாரத நாட்டினிலே-அந்தப்
பாண்டவ ரெனப்புகழ் படைத்திடு வாய்;
சோரர்தம் மகனோ நீ?-உயர்
சோமன்ற னோருகுலத் தோன்ற லன்றோ? 94

தம்மொரு கருமத்திலே-நித்தம்
தளர்வறு முயற்சி மற்றோர்பொருளை
இம்மியுங் கருதாமை,-சார்ந்
திருப்பவர் தமைநன்கு காத்திடுதல்:
இம்மையில் இவற்றினையே-செல்வத்
திலக்கணம் என் றனர் மூதறிஞர்.
அம்ம,இங் கிதனை யெலாம் நீ
அறிந்திலையோ? பிழையாற்றல் நன்றோ? 95

நின்னுடைத் தோளனை யார்-இள
நிருபரைச் சிதைத்திட நினைப்பாயோ?
என்னுடை யுயிரன்றோ?-எனை
எண்ணிஇக் கொள்கையை நீக்குதியால்!
பொன்னுடை மார்பகத் தார்-இளம்
பொற்கொடி மாதரைக் களிப்பதினும்
இன்னும்பல் இன்பத்தினும்-உளம்
இசையவிட் டேஇதை மறந்தி டடா! 96

13. துரியோதனன் பதில்

வேறு

தந்தை இஃது மொழிந்திடல் கேட்டே,
தாரி சைந்த நெடுவரைக் தோளான்;
எந்தை,நின்னொடு வாதிடல் வேண்டேன்
என்று பன்முறை கூறியும் கேளாய்;
வந்த காரியங் கேட்டி மற் றங்குன்
வார்த்தை யன்றிஅப் பாண்டவர் வாரார்;
இந்த வார்த்தை உரைத்து விடாயேல்
இங்கு நின்முன் என் ஆவி இறுப்பேன். 97

மதித மக்கென் றிலாதவர் கோடி
வண்மைச் சாத்திரக் கேள்விகள் கேட்டும்
பதியுஞ் சாத்திரத் துள்ளுறை காணார்,
பானைத் தேனில் அகப்பையைப் போல்வார்
துதிகள் சொல்லும் விதுரன் மொழியைச்
சுருதி யாமெனக் கொண்டனை நீ தான்;
அதிக மோகம் அவனுளங் கொண்டான்
ஐவர் மீதில்,இங் கெம்மை வெறுப்பான். 98

தலைவன் ஆங்குப் பிறர்கையில் பொம்மை;
சார்ந்து நிற்பவர்க் குய்ந்நெறி உண்டோ?
உலைவ லால் திரி தாட்டிர வர்க்கத்
துள்ள வர்க்கு நலமென்ப தில்லை;
நிலையி லாதன செல்வமும் மாண்பும்
நித்தம் தேடி வருந்த லிலாமே
விலையி லாநிதி கொண்டனம்என்றே
மெய்கு ழைந்து துயில்பவர் மூடர். 99

பழைய வானிதி போதுமென் றெண்ணிப்
பாங்கு காத்திடு மன்னவர் வாழ்வை
விழையும் அன்னியர் ஓர்கணத் துற்றே
வென்ற ழிக்கும் விதி அறி யாயோ?
குழைத லென்பது மன்னவர்க் கில்லை;
கூடக் கூடப்பின் கூட்டுதல் வேண்டும்;
பிழைஒன் றேஅர சர்க்குண்டு, கண்டாய்;
பிறரைத் தாழ்ந்து வதிற்சலிப் பெய்தல். 100

வேறு

வெல்வதெங் குலத்தொழி லாம்;-அந்த
விதத்தினில் இசையினும் தவறிலை காண்!
நல்வழி தீய வழி-என
நாமதிற் சோதனை செயத்தகு மோ?
செல்வழி யாவினு மே-பகை
தீர்த்திடல் சாலுமென் றனர்பெரி யோர்;
கொல்வது தான் படையோ?-பகை
குமைப்பன யாவும்நற் படையல வோ? 101

வேறு

கற்றத் தாரிவர் என்றனை ஐயா!
தோற்றத் தாலும் பிறவியி னாலும்,
பற்றல ரென்றும் நண்பர்க ளென்றும்
பார்ப்ப தில்லை உலகினில் யாரும்;
மற்றெத் தாலும் பகையுறல் இல்லை;
வடிவினில் இல்லை அளவினில் இல்லை;
உற்ற துன்பத்தி னாற்பகை உண்டாம்,
ஓர்தொ ழில்பயில் வார்தமக் குள்ளே 102

பூமித் தெய்வம் விழுங்கிடும கண்டாய்
புரவ லர்பகை காய்கிலர் தம்மை;
நாமிப் பூதலத் தேகுறை வெய்த
நாளும் பாண்டவர் ஏறுகின் றாரால்;
நேமி மன்னர் பகைசிறி தென்றே
நினைவ யர்ந்திருப் பாரெனில்,நோய்போல்,
சாமி,அந்தப் பகைமிக லுற்றே
சடிதி மாய்த்திடும் என்பதும் காணாய். 103

போர்செய் வோமெனில் நீதடுக் கின்றாய்;
புவியி னோரும் பழிபல சொல்வார்,
தார்செய் தோளிளம் பாண்டவர் தம்மைச்
சமரில் வெல்வதும் ஆங்கெளி தன்றாம்;
யார்செய் புண்ணியத் தோநமக் குற்றான்
எங்க ளாருயிர் போன்றஇம் மாமன்;
நேர்செய் சூதினில் வென்று தருவான்;
நீதித் தர்மனும் சூதில்அன் புள்ளோன். 104

பகைவர் வாழ்வினில இன்புறு வாயோ?
பார தர்க்கு முடிமணி யன்னாய்!
புகையும் என்றன் உளத்தினை வீறில்
புன்சொற் கூறி அவிதிதிட லாமோ?
நகைசெய் தார்தமை நாளை நகைப்போம்;
நமரிப் பாண்டவர் என்னில் இஃதாலே
மிகையு றுந்தன்ப மேது? நம் மோடு
வேறு றாதெமைச் சார்ந்துநன் குய்வார். 105

ஐய சூதிற் கவரை அழைத்தால்,
ஆடி உய்குதும்,அஃதியற் றாயேல்,
பொய்யன் றென்னுரை;என்னியல் போர்வாய்;
பொய்மை வீறென்றுஞ் சொல்லிய துண்டோ?
நைய நின்முனர் என்சிரங் கொய்தே
நானிங் காவி இறுத்திடு வேனால்;
செய்ய லாவது செய்குதி என்றான்;
திரித ராட்டிரன் நெஞ்ச முடைந்தான். 106

14. திரிதராட்டிரன் சம்மதித்தல்
 
வேறுவிதிசெயும் விளைவி னுக்கே-இங்கு
வேறு செய்வோர் புவிமீ துளரோ?
மதிசெறி விதுரன் அன்றே-இது
வருந்திறன் அறிந்துமுன் எனக்குரைத்தான்.
அதிசயக் கொடுங் கோலம்-விளைந்
தரசர்தங் குலத்தினை அழிக்கும் என்றான்;
சதிசெயத் தொடங்கி விட்டாய்-நின்றன்
சதியினிற்றானது விளையும்என்றான். 107

விதி!விதி! விதி!மகனே!-இனி
வேறெது சொல்லுவன் அட மகனே!
கதியுறுங் கால னன்றோ-இந்தக்
கயமக னெனநினைச் சார்ந்து விட்டான்?
கொதியுறு முளம் வேண்டா;-நின்றன்
கொள்கையின் படிஅவர் தமை அழைப்பேன்;
வதியுறு மனை செல்வாய்.-என்று
வழியுங்கண் ணீரொடு விடை கொடுத்தான். 108

15. சபா நிர்மாணம்

வேறு

மஞ்சனும் மாமனும் போயின பின்னர்,
மன்னன் வினைஞர் பலரை அழைத்தே,
பஞ்சவர் வேள்வியிற் கண்டது போலப்
பாங்கி னுயர்ந்ததொர் மண்டபஞ் செய்வீர்!
மிஞ்சு பொருளதற் காற்றுவன் என்றான்;
மிக்க உவகையொ டாங்கர் சென்றே
கஞ்ச மலரிற் கடவுள் வியப்பக்
கட்டி நிறுத்தினர் பொற்சபை ஒன்றை. 109

வேறு

வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும்,
வண்மைக் கவிஞர் கனவினைப் போலும்,
நல்ல தொழிலுணர்ந் தார்செய லேன்றே
நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறக்
கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு
காமர் மணிகள் சிலசில சேர்த்துச்
சொல்லை யிசைத்துப் பிறர்செயு மாறே
சுந்தர மாமொரு காப்பியஞ் செய்தார். 110

16. விதுரனைத் தூதுவிடல்

தம்பி விதுரனை மன்னன் அழைத்தான்;
தக்க பரிசுகள் கொண்டினி தேகி,
எம்பியின் மக்கள் இருந்தர சாளும்
இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால்,
கொம்பினை யொத்த மடப்பிடி யோடும்
கூடிஇங் கெய்தி விருந்து களிக்க
நம்பி அழைத்தனன் கௌரவர் கோமான்
நல்லதொர் நுந்தைஎனஉரை செய்வாய். 111

நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறும்
நன்மணி மண்டபம் செய்ததும் சொல்வாய்;
நீடு புகழ்பெரு வேள்வியில் அந்நாள்
நேயமொ டேகித் திரும்பிய பின்னர்
பீடுறு மக்களை ஓர்முறை இங்கே
பேணி அழைத்து விருந்துக ளாற்றக்
கூடும் வயதிற் கிழவன் விரும்பிக்
கூறினன் இஃதெ னச் சொல்லுவை கண்டாய்! 112

பேச்சி னிடையிற்சகுனிசொற் கேட்டே
பேயெனும் பிள்ளை கருத்தினிற் கொண்ட
தீச்செயல் இஃதென் றதையுங் குறிப்பாற்
செப்பிடு வாய்என மன்னவன் கூறப்
போச்சுது! போச்சுது பாரத நாடு!
போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்!
ஆச்சரி யக்கொடுங் கோலங்கள் காண்போம்;
ஐய இதனைத் தடுத்தல் அரிதோ? 113

என்று விதுரன் பெருந்துயர் கொண்டே
ஏங்கிப் பலசொல் இயம்பிய பின்னர்
சென்று வருகுதி,தம்பி,இனிமேல்
சிந்தனை ஏதும் இதிற்செய மாட்டேன்
வென்று படுத்தனன் வெவ்விதி என்னை;
மேலை விளைவுகள் நீஅறி யாயோ?
அன்று விதித்ததை இன்று தடுத்தல்
யார்க்கெளிதென்றுமெய் சோர்ந்து விழுந்தான். 114

17. விதுரன் தூது செல்லுதல்

வேறு

அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான்;
அடவிமலை ஆறெல்லாம் கடந்து போகித்
திண்ணமுறு தடந்தோளும் உளமுங்கொண்டு
திருமலியப் பாண்டவர் தாம் அரசு செய்யும்
வண்ணமுயர் மணிநகரின் மருங்கு செல்வான்
வழியிடையே நாட்டினுறு வளங்கள் நோக்கி
வண்ணமற லாகித்தன் இதயத் துள்ளே
இனையபல மொழிகூறி இரங்கு வானால், 115

நீலமுடி தரித்தபல மலைசேர் நாடு,
நீரமுதம் எனப்பாய்நது நரம்பும் நாடு,
கோலமுறு பயன்மரங்கள் செறிந்து வாழுங்
குளிர்காவுஞ் சோலைகளுங் குலவு நாடு,
ஞாலமெலாம் பசியின்றிக் காத்தல் வல்ல
நன்செய்யும் புன்செய்யும் நலமிக் கோங்கப்
பாலடையும் நறுநெய்யும் தேனு முண்டு
பண்ணவர்போல் மக்களெலாம் பயிலும் நாடு, 116

அன்னங்கள் பொற்கமலத் தடத்தின் ஊர
அளிமுரலக் கிளிமழலை அரற்றக் கேட்போர்
கன்னங்கள் அமுதூறக் குயில்கள் பாடும்
காவினத்து நறுமலரின் கமழைக் தென்றல்
பொன்னங்க மணிமடவார் மாட மீது
புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச,
வன்னங்கொள் வரைத்தோளார் மகிழ,மாதர்
மையல்விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு. 117

பேரறமும் பெருந்தொழிலிலும் பிறங்கு நாடு,
பெண்க ளெல்லாம் அரம்பையர்போல் ஒளிரும்நாடு,
வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி
வேள்விஎனும் இவையெல்லாம் விளங்கும் நாடு,
சோரமுதற் புன்மையெதுந் தோன்றா நாடு,
தொல்லுலகின் முடிமணிபோல் தோன்றும் நாடு,
பாரதர்தந் நாட்டினிலே நாச மெய்தப்
பாவியென் துணைபுரியும் பான்மை என்னே! 118

18. விதுரனை வரவேற்றல்

வேறு

விதுரன் வருஞ்செய்தி தாஞ்செவி யுற்றே,
வீறுடை ஐவர் உளமகிழ் பூத்துச்
சதுரங்க சேனை யுடன்பல பரிசும்
தாளமும் மேளமும் தாங்கொண்டு சென்றே
எதிர்கொண் டழைத்து,மணிமுடி தாழ்த்தி,
ஏந்தல் விதுரன் பதமலர் போற்றி,
மதுரமொழியிற் குசலங்கள் பேசி,
மன்ன னொடுந்திரு மாளிகை சேர்ந்தார். 119

குந்தி எனும்பெயர்த் தெய்வதந் தன்னைக்
கோமகன் கண்டு வணங்கிய பின்னர்,
வெந்திறல் கொண்ட துருபதன் செல்வம்
வெள்கித் தலைகுனிந் தாங்குவந் தெய்தி.
அந்தி மயங்க விசும்பிடைத் தோன்றும்
ஆசைக் கதிர்மதி யன்ன முகத்தை
மந்திரந் தேர்ந்தொர் மாமன் அடிக்கண்
வைத்து வணங்கி வனப்புற நின்றான், 120

தங்கப் பதுமை எனவந்து நின்ற
தையலுக் கையன்,நல் லாசிகள் கூறி
அங்கங் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர்
ஆங்குவந் துற்ற உறவினர் நண்பர்
சிங்க மெனத்திகழ் வீரர் புலவர்
சேவகர் யொரொடுஞ் செய்திகள் பேசிப்
பொங்கு திருவின் நகர்வ லம்வந்து
போழ்து கழிந்திர வாகிய பின்னர்.  121

19. விதுரன் அழைத்தல்

ஐவர் தமையுந் தனிக்கொண்டு போகி,
ஆங்கொரு செம்பொன் னரங்கில் இருந்தே:-
மைவரைத் தோளன்,பெரும்புக ழாளன்,
மாமகள் பூமகட் கோர்மண வாளன்,
மெய்வரு கேள்வி மிகுந்த புலவன்,
வேந்தர் பிரான்,திரி தாட்டிரக் கோமான்
தெய்வ நலங்கள் சிறந்திட நும்மைச்
சீரொடு நித்தலும் வாழ்கென வாழ்த்தி, 122

உங்களுக் கென்னிடம் சொல்லி விடுத்தான்
ஓர்செய்தி;மற்றஃ துரைத்திடக் கேளீர
மங்களம் வாந்தநல் அத்தி புரத்தே
வையக மீதில் இணையற்ற தாகத்
தங்கும் எழிற்பெரு மண்டபம் ஒன்று
தம்பியர் சூழ்ந்து சமைத்தனர் கண்டீர்!
அங்கதன் விந்தை அழகினைக் காண
அப்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன். 123

வேள்விக்கு நாங்கள் அனைவரும் வந்து
மீண்டு பலதின மாயின வேனும்,
வாள்வைக்கும் நல்விழி மங்கைய டேநீர்
வந்தெங்க ளூரில் மறுவிருந் தாட
நாள்வைக்குஞ் சோதிட ராலிது மட்டும்
நாயகன் நும்மை அழைத்திட வில்லை;
கேக்விக் கொருமி திலாதிப னொத்தோன்
கேடற்ற மாதம் இதுவெனக் கண்டே, 124

வந்து விருந்து களித்திட நும்மை
வாழ்த்தி அழைத்தனன் என்னரு மக்காள்;
சந்துகண் டேஅச் சகுனிசொற் கேட்டுத்
தன்மை இழந்த சுயோதன மூடன்
விந்தை பொருந்திய மண்டபத் தும்மை
வெய்யபுன் சூது களித்திடச் செய்யும்
மந்திர மொன்றும் மனத்திடைக் கொண்டான்;
வன்ம மிதுவும் நுமக்கறி வித்தேன் 125

20. தருமபுத்திரன் பதில்
 
என்று விதுரன் இயம்பத் தருமன்
எண்ணங் கலங்கிச் சிலசொல் உரைப்பான்;
மன்று புனைந்தது கேட்டுமிச் சூதின்
வார்த்தையைக் கேட்டுமிங் கென்தன் மனத்தே
சென்று வருத்தம் உளைகின்ற தையா!
சிந்தையில் ஐயம் விளைகின்ற தையா!
நன்று நமக்கு நினைப்பவ னல்லன்;
நம்ப லரிது சுயதனன் றன்னை.  126

கொல்லக் கருதிச் சுயோதனன் முன்பு
குத்திர மான சதிபல செய்தான்;
சொலலப் படாதவ னாலெமக் கான
துன்ப மனைத்தையும் நீ அறி யாயோ?
வெல்லகக் கடவர் எவரென்ற போதும்
வேந்தர்கள் சூதை விரும்பிட லாமோ?
தொல்லைப் படுமென் மனந்தெளி வெய்தக்
சொல்லுதி நீஒரு சூழ்ச்சிஇங் கென்றான். 127

21. விதுரன் பதில்

வேறு

விதுரனும் சொல்லு கிறான்;-இதை
விடமென்ச சான்றவர் வெகுளுவர் காண்;
சதுரெனக் கொள்ளுவ ரோ?-இதன்
தாழ்மை யெலாமவர்க் குரைத்து விட்டேன்;
இதுமிகத் தீதென் றே-அண்ணன்
எத்தனை சொல்லியும் இள வரசன்
மதுமிகுத் துண்டவன் போல்-ஒரு
வார்த்தையை யேபற்றிப் பிதற்றுகிறான். 128

கல்லெனில் இணங்கி விடும்-அண்ணன்
காட்டிய நீதிகள் கணக்கில வாம்;
புல்லனிங் கவற்றை யெலாம்-உளம்
புகுதலொட் டாதுதன் மடமையினால்
சல்லியச் சூதினி லே-மனம்
தளர்வற நின்றிடுந் தகைமை சொன்னேன்;
சொல்லிய குறிப்பறிந் தே-நலந்
தோன்றிய வழியினைத் தொடர்கஎன்றான். 129

22. தருமபுத்திரன் தீர்மானம்

தருமனும் இவ்வ ளவில்-உளத்
தளர்ச்சியை நீக்கியொர் உறுதி கொண்டே
பருமங்கொள் குரலின னாய்-மொழி
பதைத்திட லின்றிஇங் கிவைஉரைப் பான்;
மருமங்கள் எவைசெயி னும்-மதி
மருண்டவர் விருந்தறஞ் சிதைத்திடி னும்,
கருமமொன் றேஉள தாம்-நங்கள்
கடன்;அதை நெறிப்பட புரிந்திடு வோம். 130

தந்தையும் வரப்பணித் தான்;-சிறு
தந்தையும் தூதுவந் ததைஉரைத் தான்;
சிந்தை யொன்றினி இல்லை,-எது
சேரினும் நலமெனத் தெளிந்துவிட் டேன்;
முந்தையச் சிலைரா மன்-செய்த
முடிவினை நம்மவர் மறப்பது வோ?
நொந்தது செயமாட் டோம்;-பழ
நூலினுக் கிணங்கிய நெறிசெல் வோம். 131

ஐம்பெருங் குரவோர் தாம்;-தரும்
ஆணையைக் கடப்பதும் அறநெறி யோ?
வெம்பொரு மத யானை -பரி
வியன்தேர் ஆளுடன் இருதினத் தில்
பைம்பொழில் அத்தி நகர்-செல்லும்
பயணத்திற் குரியன புரிந்திடு வாய்,
மொய்ம்புடை விறல் வீமா!-என
மொழிந்தனன் அறநெறி முழுதுணர்ந் தான். 132

23. வீமனுடைய வீரப்பேச்சு
 
வீமனும் திகைத்துவிட் டான்;-உள
விசயனை நோக்கிஇங் கிதுசொலு வான்;
மாமனும் மருகனு மா-நமை
மழிததிடக் கருதிஇவ் வழிதொடர்ந் தார்;
தாமதஞ் செய்வோ மோ?-செலத்
தகுந்தகு மெனஇடி யுறநகைத் தான்;
கோமகன் உரைப்படியே-படை
கொண்னடுசெல் வோமொரு தடையிலை காண்! 133

நெடுநாட் பகைகண் டாய்!-இந்த
நினைவினில் யான்கழித் தனபல நாள்;
கெடுநாள் வருமள வும்-ஒரு
கிருமியை அழிப்பவர் உலகிறுண்டோ,
படுநாட் குறி அன் றோ-இந்தப்
பாதகம் நினைப்பவர் நினைத்தது தான்
விடுநாண் கோத்திட டா!தம்பி!
வில்லினுக் கிரைமிக விளையு தடா! 134

போரிடச் செல்வ மடா!-மகன்
புலைமையும் தந்தையின் புலமைக ளும்
யாரிடம் அவிழ்க்கின் றார்?-இதை
எத்தனை நாள்வரை பொறுத்திருப் போம்?
பாரிடத் திவரொடு நாம்-எனப்
பகுதியிவ் விரண்டிற்கும் காலமொன் றில்
நேரிட வாழ்வுண் டோ?-இரு
நெருப்பினுக் கிடையினில் ஒருவிற கோ? 135

24. தருமபுத்திரன் முடிவுரை

வேறு

வீமன் உரைத்தது போலவே-உளம்
வெம்பி நெடுவில் விசயனும்-அங்கு
காமனும் சாமனும் ஒப்பவே-நின்ற
காளை இளைஞர் இருவரும்-செய்ய
தாமரைக் கண்ணன் யுதிட்டிரன்- சொல்லைத்
தட்டிப் பணிவொடு பேசினார்;தவ
நேமந் தவறலும் உண்டுகாண்,-நரர்
நெஙசம் கொதித்திடு போழ்திலே.  136

அன்பும் பணிவும் உருகொண்டார்-அணு
வாயினும் தன்சொல் வழாதவர்-அங்கு
வுன்பு மெமாழிசொல்லக் கேட்டனன்;-அற
மன்னவன் புன்னகை பூத்தனன்;-அட!
முன்பு சுயோதனன் செய்ததும்-இன்று
மண்டிருக் குங்கொடுங்கோல மும்-இதன்
பின்பு விளைவதும் தேர்ந்துளேன்;-எனைப்
பித்தனென் றெண்ணி உரைத்திடீர்! 137

கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்-தன்
கணக்கிற் சுழன் றிடும் சக்கரம்-அது
தப்பி மிகையுங் குறையுமாச்-சுற்றும்
தன்மை அதற்குள தாகுமோ?-இதை
ஒப்பிட லாகும் புவியின்மேல்-என்றும்
உள்ள உயிர்களின் வாழ்விற்கே,-ஒரு
செப்பிடு வித்தையைப் போலவே-புவிச்
செய்திகள் தோன்றிடு மாயினும்,  138

இங்கிவை யாவுந் தவறிலா-விதி
ஏற்று நடக்குஞ் செயல்களாம்;-முடி
வெங்கணு மின்றி எவற்றினும்-என்றும்
ஏறி இடையின்றிச் செல்வதாம்-ஒரு
சங்கிலி யோக்கும் விதி கண்டீர்;-வெறுஞ்
சாத்திர மன்றிது சத்தியம்;-நின்று
மங்கியொர் நாளில் அழிவதாம்-நங்கள்
வாழ்க்கை இதனைக் கடந்ததோ?  139

தோன்றி அழிவது வாழ்க்கைதான்;-இங்குத்
துன்பத்தொ டின்பம் வெறுமையாம்-இவை
மூன்றில் எதுவரு மாயினும்.-களி,
மூழ்கி நடத்தல் முறைகண்டீர்!-நெஞ்சில்
ஊன்றிய கொள்கை தழைப்பரோ,-துன்பம்
உற்றிடு மென்பதொர் அச்சத்தால்?-விதி
போன்று நடக்கும் உலகென்றே-கடன்
போற்றி ஒழுகுவர் சான்றவர்.  140

சேற்றில் உழலும் புழுவிற்கும்,-புவிச்
செல்வ முடைய அரசர்க்கும்.-பிச்சை
ஏற்றுடல் காத்திடும் ஏழைக்கும்,-உயிர்
எத்தனை உண்டவை யாவிற்கும்,-நித்தம்
ஆற்றுதற் குள்ள கடமைதான்-முன்வந்து
அவ்வக் கணந்தொறும் நிற்குமால்-அது
தோற்றும் பொழுதிற் புரிகுவார்-பல
சூழந்து கடமை அழிப்பரோ?  141

யாவருக் கும்பொது வாயினு-சிறப்
பென்பர் அரசர் குலத்திற்கே-உயர்
தேவரை யொப்ப முன்னோர் தமைத்-தங்கள்
சிந்தையிற் கொண்டு பணிகுதல்;-தந்தை
ஏவலை மைந்தர் புரிவதற்கே-வில்
இராமன் கதையையும் காட்டினேன்;-புவிக்
காவலர் தம்மிற் சிறந்தநீர்-இன்று
கர்மம் பிழைத்திடு வீர்கொலோ?  142

25. நால்வரும் சம்மதித்தல்

வேறு

என்றினைய நீதிபல தரும ராசன்
எடுத்துரைப்ப,இளைஞர்களுந் தங்கை கூப்பிக்
குன்றினிலே ஏற்றிவைத்த விளக்கைப் போலக்
குவலயத்திற் கறங்காட்டத் தோன்றி னாய் நீ!
வென் றிபெருந் திருவடியாய்!நினது சொல்லை
மீறிஒரு செயலுண்டோ? ஆண்டான் ஆணை
யன்றி அடி யார்தமக்குக் கடன்வே றுண்டோ?
ஐயனே! பாண்டவர்தம் ஆவி நீயே! 143

துன்பமுறும் எமக்கென்றே எண்ணி நின்வாய்ச்
சொல்லைமறுத் துரைத்தோமோ? நின்பா லுள்ள
அன்புமிகை யாலன்றே திருவு ளத்தின்
ஆக்கினையை எதிர்த்துரைத்தோம் அறிவில்லாமல்
மன்பதையின் உளச்செயல்கள் தெளியக் காணும்
மன்னவனே!மற்றதுநீ அறியா தொன்றோ?
வன்புமொழி பொறுத்தருள்வாய்,வாழி!நின்சொல்
வழிச்செல்வோம்,எனக்கூறிவணங்கிச் சென்றார் 144

26. பாண்டவர் பயணமாதல்

ஆங்கதன்பின் மூன்றாம்நாள் இளைஞ ரோடும்
அணியிழையப் பாஞ்சாலர் விளக்கி னோடும்
பாங்கினுறு பரிசனங்கள் பலவி னோடும்
படையினொடும் இசையினொடும் பயண மாகித்
தீங்கதனைக் கருதாத தருமக் கோமான்
திருநகர்விட் டகல்கின்றான் தீயோர் ஊர்க்கே!
நீங்கி அகன் றிடலாகுந் தன்மை உண்டோ.
நெடுங்கரத்து விதிகாட்டும் நெறியில் நின்றே? 145

நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்
நழுவிவிழும்;சிற்றெறும்பால் யானை சாகும்;
வரிவகுத்த உடற்புலியைப் புழுவுங் கொல்லும்;
வருங்கால முணர்வோரும் மயங்கி நிற்பார்;
கிரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மைப்
போற்றிடுவார் விதிவகுத்த போழ்தி னன்றே. 146

27. மாலை வருணனை

மாலைப்போ தாதலும்,மன்னன் சேனை
வழியிடைஓர் பூம்பொழிலின் அமர்ந்த காலை,
சேலைப்போல் விழியாளைக் பார்த்தன் கொண்டு
சென்றாங்கோர் தனியிடத்தே பசும்புல் மேட்டில்
மேலைப்போம் பரியினைத் தொழுது கண்ன்
மெல்லியலும் அவன்தொடைமேல் மெல்லச் சாய்ந்து
பாலைப்போல் மொழிபிதற்ற அவளை நோக்கிப்
பார்த்தனும்அப் பரிதிஎழில் விளக்கு கின்றான். 147

பாரடியோ!வானத்திற் புதுமை யெல்லாம்,
பண்மொழீ! கணந்தோறும் மாறி மாறி
ஓரடிமற் றோரடியோ டொத்த லின்றி
உவகையுற நவநவமாத் தோன் றுங் காட்சி;
யாரடிஇங் கிவைபோலப் புவியின் மீதே
எண்ணரிய பொருள்கொடுத்தும் இயற்ற வல்லார்!
சீரடியால் பழவேத முனிவர் போற்றுஞ்
செழுஞ்சோதி வனப்பையெலாம் சேரக் காண்பாய். 148
 
கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாய் களிப்புத் தோன்றும்;
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ? ஆங்கே,
கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக்
காளிபரா சக்திஅருள் களிக்குங் கோலம்
கணந்தோறும் அவள்பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய். 149

அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்;
இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து,
முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே,
மொய்குழலாய், சுற்றுவதன் மொய்ம்பு காணாய்!
வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய். 150

அமைதியோடு பார்த்திடுவாய் மின்னே!பின்னே
அசைவுமோர் மின்செய்த வட்டு;முன்னே,
சமையுமொரு பச்சைநிற வட்டங் காண்பாய்;
தரணியிலிங் கிதுபோலார் பசுமை உண்டோ?
இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள்
எண்ணில்லா திடையிடையே எழுதல் காண்பாய்;
உமை கவிதை செய்கின்றாள்,எழுந்து நின்றே
உரைத்திடுவோம்,பல்லாண்டு வாழ்க!என்றே. 151

வேறு

பார்;சுடர்ப்பரிதியைச் சூழவே படர்முகில்
எத்தனை தீப்பட் டெரிவன!ஓகோ!
என்னடீ!இந்த வன்னத் தியல்புகள்!
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்!-செழும்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்!-வெம்மை தோன்றாமே
எரிந்திடுந் தங்கத் தீவுகள்!-பாரடீ!
நீலப் பொய்கைகள்!-அடடா,நீல
வன்ன மொன்றில் எத்தனை வகையடீ!
எத்தனை செம்மை!பசுமையுங் கருமையும்
எத்தனை!-கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
கருஞ்சிக ரங்கள்!-காண்டி,ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
இருட் கடல்!-ஆஹா!எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்! 152

வேறு

செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினை தேர்கின்றோம்-அவன்
எங்க ளறிவினைத் தூண்டி நடத்துக என்பதோர்-நல்ல
மங்களம் வாய்ந்த சுருதி மொழிகொண்டு வாழ்த்தியே-இவர்
தங்க ளினங்க ளிருந்த பொழி லிடைச்சார்ந்தனர்-பின்னர்
அங்கவ் விரவு கழிந்திட,வைகறை யாதலும் -மன்னர்
பொங்கு கடலொத்த சேனைக ளோடு புறப்பட்டே,-வழி
எங்குந் திகழும் இயற்கையின் காட்சியில் இன்புற்றே,-கதிர்
மங்கிடு முன்னொளி மங்கு நகரிடை வந்துற்றார்.   153

(துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம் முற்றும்)

சூதாட்டச் சருக்கம்

28. வாணியை வேண்டுதல்

தெளிவுறவே அறிந்திடுதல்;தெளிவுதர
மொழிந்திடுதல்;சிந்திப் பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆநந்தக் கனவுபல
காட்டல்,கண்ணீர்த்
துளிவரஉள் ளுருக்குதல்,இங் கியெல்லாம்
நீ அருளும் தொழில்க ளன்றோ?
ஒளிவளருந் தமிழ்வாணீ! அடியனேற்
கிவையனைத்தையும் உதவு வாயே. 154

29. பாண்டவர் வரவேற்பு
 
அத்தின மாநக ரத்தினில் வந்தனர்
ஆரியப் பாண்டவர் என் றது கேட்டலும்,
தத்தி எழுந்தன எண்ணருங் கூட்டங்கள்;
சந்திகள்,வீதிகள்,சாலைகள்,சோலைகள்;
எத்திசை நோக்கினும் மாந்தர் நிறைந்தனர்;
இத்தனை மக்களும் எங்கண் இருந்தனர்
இத்தின மட்டும் எனவியப் பெய்துற
எள்ளும் விழற்கிட மின்றி யிருந்தார். 155

மந்திர கீதம் முழுங்கினர் பார்ப்பனர்;
வன்தடந் தோள்கொட்டி ஆர்த்தனர் மன்னவர்;
வெந்திறல் யானையும் தேரும் குதிரையும்
வீதிகள் தோறும் ஒலிமிகச் செய்தன;
வந்தியர் பாடினர்,வேசையர்.ஆடினர்;
வாத்தியங் கோடி வகையின் ஒலித்தன;
செந்திரு வாழும் நகரினில் அத்தினஞ்
சேர்ந்த ஒலியைச் சிறிதென லாமோ! 156

வாலிகன் தந்ததொர் தேர்மிசை ஏறி,அம்
மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள்
நாலிய லாம்படை யோடு நகரிடை
நல்ல பவனி எழுந் பொழுதினில்,
சேலியல் கண்ணியர் பொன்விளக் கேந்திடச்
சீரிய பார்ப்பணர் கும்பங்கள் ஏந்திடச்
கோலிய பூமழை பெய்திடத் தோரணம்
கொஞ்ச நகரெழில் கூடிய தன்றே. 157

வேறு

மன்னவன் கோயிலிலே-இவர்
வந்து புகுந்தனர் வரிசை-யொடே
பொன்ன ரங் கினிலிருந் தான்-தண்ணில்
புலவனைப் போய்நின்று போற்றியபின்
அன்னவன் ஆசிகொண் டே,-உயர்
ஆரிய வீட்டுமன் அடி வணங்கி,
வின்னய முணர் கிருபன்-புகழ்
வீரத் துரோணன் அங்கவன் தல்வன் 158

மற்றுள பெரியோர் கள்-தமை
வாழ்த்தி உள்ளன்பொடு வணங்கிநின் றார்;
கொற்றமிக் குயர்கன் னன்-பணிக்
கொடியோன் இளையவர் சகுனியோ டும்
பொற்றடந் தோள் சருவப்-பெரும்
புகழினர் தழுவினர்,மகிழ்ச்சிகொண் டார்;
நற்றவக் காந்தா ரி-முதல்
நாரியர் தமைமுறைப் படிதொழு தார். 159

குந்தியும் இளங்கொடி யும்-வந்து
கூடிய மாதர் தம்மொடு குலவி
முந்திய கதைகள் சொல்லி-அன்ஹப
மூண்டுரை யாடிப்பின் பிரிந்து விட்டார்;
அந்தியும் புகுந்தது வால்;-பின்னர்
ஐவரும் உடல்வலித் தொழில் முடித்தே
சந்தியுஞ் சபங்களுஞ் செய்-தங்கு
சாருமின் னுணவமு துண்டதன் பின். 160

சந்தன மலர்புனைந் தே,-இளந்
தையலர் வீணைகொண் டுயிருருக்கி
விந்தைகொள் பாட்டிசைப் ப,-அதை
விழைவொடு கேட்டனர் துயில்புரிந் தார்;
வந்ததொர் துன்பத் தினை-அங்கு
மடித்திட லன்றிப் பின்வருந் துயர்க்கே
சிந்தனை உழல்வா ரோ?-உளச்
சிதைவின்மை ஆரியர் சிறப்பன் றோ? 161

30. பாண்டவர் சபைக்கு வருதல்

பாணர்கள் துதிகூ ற-இளம்
பகலவன் எழுமுனர்த் துயிலெழுந் தார்;
தோணலத் திணையில் லார்-தெய்வந்
துதித்தனர்;செய்யபொற் பட்டணிந்து
பூணணிந் தாயுதங் கள்-பல
பூண்டுபொற் சபையிடைப் போந்தன ரால்;
நாண மில் கவுரவ ரும்-தங்கள்
நாயக னொடுமங்கு வீற்றிருந் தார். 162

வீட்டுமன் தானிருந் தான்;-அற
விதுரனும்,பார்ப்பனக் குரவர்களும்,
நாட்டுமந் திரிமா ரும்,பிற
நாட்டினர் பலபல மன்னர்க ளும்,
கேட்டினுக் கிரையா வான்-மதி
கெடுந்துரி யோதனன் கிளையின ரும்,
மாட்டுறு நண்பர்களும்-அந்த
வான்பெருஞ் சபையிடை வணங்கிநின் றார். 163

31. சூதுக்கு அழைத்தல்
 
புன்தொழிற் கவறத னில்-இந்தப்
புவிமிசை இணையிலை எனும்புக ழான்
நன்றறி யாச்சகு னி,-சபை
நடுவினில் ஏறெனக் களித்திருந் தான்;
வென்றிகொள் பெருஞ்சூ தர்-அந்த
விவிஞ்சதி சித்திர சேனனு டன்
குன்றுசத் தியவிர தன்-இதழ்
கூர்புரு மித்திரன் சய னென்பார்.  164

சாலவும் அஞ்சு தரும்-கெட்ட
சதிக்குணத் தார்பல மாயம் வல்லோர்
கோலநற் சபைதனி லே-வந்து
கொக்கரித் தார்ப்பரித் திருந்தனரால்,
மேலவர் தமை வணங்கி-அந்த
வெந்திறற் பாண்டவர் இளைஞர் தமை
ஆல முற்றிடத் தழுவிச்-செம்பொன்
ஆதனத் தமர்ந்தவப் பொழுதினி லே. 165

சொல்லுகின் றான்சகு னி:-அறத்
தோன்றல்!உன் வரவினைக் காத்துளர் காண்
மல்லுறு தடந் தோளார் இந்த
மன்னவ ரனைவரும் நெடும்பொழு தா;
வில்லுறு போர்த்தொழி லாற்-புவி
வென்றுதங் குலத்தினை மேம்படுத் தீர்!
வல்லுறு சூதெனும் போர்-தனில்
வலிமைகள் பார்க்குதும் வருதிஎன்றான் 166

32. தருமன் மறுத்தல்

தருமனங் கிவைசொல் வான்-ஐய!
சதியுறு சூதினுக் கெனை அழைத் தாய்;
பெருமைஇங் கிதிலுண்டோ?-அறப்
பெற்றிஉண் டோ?மறப் பீடுள தோ?
வருமம் நின் மனத்துடை யாய்!-எங்கள்
வாழ்வினை உகந்திலை என லறிவேன்;
இருமையுங் கெடுப்பது வாம்-இந்த
இழிதொழி லாலெமை அழித்த லுற் றாய். 167

33. சகுனியின் ஏச்சு
 
கலகல வெனச்சிரித் தான்-பிழக்
கவற்றையொர் சாத்திர மெனப்பயின் றோன்;
பலபல மொழிகுவ தேன்?-உனைப்
பார்த்திவன் என்றெணி அழைத்துவிட்டேன்,
நிலமுழு தாட்கொண் டாய்-தனி
நீ எனப் பலர்சொலக் கேட்டதனால்,
சிலபொருள் விளையாட் டிற்-செலுஞ்
செலவினுக் கழிகலை எனநினைத் தேன். 168

பாரத மண்டலத் தார்-தங்கள்
பதிஒரு பிசுனனென் றறிவே னோ?
சோரமிங் கிதிலுண் டோ?-தொழில்
சூதெனி லாடுநர் அரசரன் றோ?
மாரத வீரர்முன் னே?-நடு
மண்டபத் தே,பட்டப் பகலினி லே,
சூரசி காமணி யே,-நின்றன்
சொத்தினைத் திருடுவ மெனுங்கருத் தோ? 169

அச்சமிங் கிதில்வேண் டா,-விரைந்
தாடுவம் நெடும்பொழு தாயின தால்;
கச்சையொர் நாழிகை யா-நல்ல
காயுடன் விரித்திங்கு கிடந்திடல் காண்?
நிச்சயம் நீவெல் வாய்;-வெற்றி
நினக் கியல் பாயின தறியா யோ?
நிச்சயம் நீவெல் வாய்;-பல
நினைகுவ தேன்? களி தொடங்குகென்றான். 170

34. தருமனின் பதில்
 
வேறு

தோல் விலைக்குப் பசுவினைக் கொல்லும்
துட்டன் இவ்வுரை கூறுதல் கேட்டே,
நூல்வி லக்கிய செய்கைக ளஞ்சும்
நோன்பி னோனுளம் நொந்திவை கூறும்;
தேவ லப்பெயர் மாமுனி வோனும்
செய்ய கேள்வி அசிதனும் முன்னர்
காவ லர்க்கு விதித்த தந்நூலிற்
கவறும் நஞ்செனக் கூறினர்,கண்டாய்! 171

வஞ்ச கத்தினில் வெற்றியை வேண்டார்.
மாயச் சூதைப் பழியெனக் கொள்வார்,
அஞ்ச லின்றிச் சமர்க்களத் தேறி
ஆக்கும் வெற்றி அதனை மதிப்பார்.
துஞ்ச நேரினுந் தூயசொல் லன்றிச்
சொல்மி லேச்சரைப் போலென்றுஞ் சொல்லார்,
மிஞ்சு சீர்த்திகொள் பாரத நாட்டில்
மேவு மாரியர் என்றனர் மேலோர் 172

ஆத லாலிந்தச் சூதினை வேண்டேன்!
ஐய,செல்வம் பெருமை இவற்றின்
காத லாலர சாற்றுவ னல்லேன்;
காழ்த்த் நல்லறம் ஓங்கவும் ஆஙகே
ஓத லானும் உணர்த்துத லானும்
உண்மை சான்ற கலைத்தொகை யாவும்
சாத லின்றி வளர்ந்திடு மாறும்,
சகுனி யானர சாளுதல்,கண்டாய்! 173

என்னை வஞ்சித்தென் செல்வத்தைக் கொள்வோர்
என்ற னக் கிடர் செய்பவ ரல்லர்
முன்னை நின்றதொர் நான்மறை கொல்வார்
மூது ணர்விற் கலைத்தொகை மாய்ப்பார்,
பின்னை என்னுயிர்ப் பாரத நாட்டில்
பீடை செய்யுங் கலியை அழைப்பார்;
நின்னை மிக்க பணிவோடு கேட்பேன்;
நெஞ்சிற் கொள்கையை நீக்குதிஎன்றான். 174

35. சகுனி வல்லுக்கு அழைத்தல்

வேறு

சாத்திரம் பேசுகின் றாய்-எனத்
தழல்படு விழியொடு சகுனிசொல் வான்;
கோத்திரக் குலமன் னர்-பிறர்
குறைபடத் தம்புகழ் கூறுவ ரோ?
நாத்திறன் மிகஉடை யாய்!-எனில்
நம்மவர் காத்திடும் பழவழக் கை
மாத்திரம் மறந்துவிட் டாய்;-மன்னர்
வல்லினுக் கழைத்திடல் மறுப்பதுண்டோ 175

தேர்ந்தவன் வென்றிடு வான்;-தொழில்
தேர்ச்சி இல் லாதவன் தோற்றிடு வான்;
நேர்ந்திடும் வாட்போரில்-குத்து
நெறி அறிந் தவன்வெலப் பிறனழி வான்;
ஓர்ந்திடு சாத்திரப் போர் தனில்
உணர்ந்தவன் வென்றிட,உணரா தான்
சோர்ந்தழி வெய்திடு வான்;இவை
சூதென்றும் சதிஎன்றும் சொல்வா ரோ? 176

வல்லவன் வென்றிடு வான்:-தொழில்
வன்மை இலாதவன் தோற்றிடு வான்;
நல்லவ னல்லா தான்-என
நாண மிலார்சொலுங் கதைவேண் டா;
வல்லமர் செய்திட வே-இந்த
மன்னர் முன்னேநினை அழைத்துவிட்டேன்;
சொல்லுக வருவதுண் டேல்-மனத்
துணி விலை யேலதுஞ் சொல்லுகென் றான். 177

36. தருமன் இணங்குதல்

வேறு

வெய்ய தான விதியை நினைந்தான்
விலக்கொ ணாதறம் என்ப துணர்ந்தோன்;
பொய்ய தாகுஞ் சிறுவழக் கொன்றைப்
புலனி லாதவர் தம்முடம் பாட்டை
ஐயன் நெஞ்சில் அறமெனக் கொண்டான்
ஐயகோ!அந்த நாள்முத லாகத்
துய்ய சிந்தைய ரெத்தனை மக்கள்
துன்பம் இவ்வகை எய்தினர் அம்மா! 178

முன்பி ருந்ததொர் காரணத் தாலே,
மூடரே,பொய்யை மெய்என லாமோ?
முன்பெனச் சொலுங் கால மதற்கு,
மூடரே,ஓர் வரையறை உண்டோ,
முன்பெனச் சொலின் நேற்றுமுன் பேயாம்;
மூன்று கோடி வருடமும் முன்பே
முன்பிருந் தெண்ணி லாது புவிமேல்
மொய்த்த மக்க ளெலாம்முனி வோரோ? 179

நீர்பி றக்குமுன் பார்மிசை மூடர்
நேர்ந்த தில்லை எனநினைந் தீரோ?
பார்பி றந்தது தொட்டின்று மட்டும்,
பலப லப்பல பற்பல கோடி
கார்பி றக்கும் ம்ழைத்துளி போலே
கண்ட மக்க ளனைவருள் ளேயும்,
நீர்பி றப்பதன் முன்பு,மடமை
நீசத் தன்மை இருந்தன வன்றோ? 180

பொய்யொ ழுக்கை அறமென்று கொண்டும்,
பொய்யர் கேலியைச் சாத்திர மென்றும்,
ஐயகோ,நங்கள் பாரத நாட்டில்
அறிவி லாரறப் பற்றுமிக் குள்ளோர்
நொய்ய ராகி அழிந்தவர் கோடி,
நூல்வ கைபல தேர்ந்து தெளிந்தோன்,
மெய்ய றிந்தவர் தம்மு ளுயர்ந்தோன்
விதியி னாலத் தருமனும் வீழ்ந்தான். 181

மதியி னும்விதி தான்பெரி தன்றோ?
வைய மீதுள வாகு மவற்றுள்
விதியி னும்பெரி தோர்பொரு ளுண்டோ?
மேலை நாம்செய்யுங் கர்மமல் லாதே,
நதியி லுள்ள சிறுகுழி தன்னில்
நான்கு தக்கி லிருந்தும் பல்மாசு
பதியு மாறு,பிறர்செய்யுங் கர்மப்
பயனும் நம்மை அடைவ துண்டன்றோ? 182

37. சூதாடல்
 
வேறு

மாயச் சூதி னுக்கே-ஐயன்,மன மிணங்கி விட்டான்;
தாய முரட்ட லானர்;-அங்கே சகுனி ஆர்ப்ப ரித்தான்!
நேய முற்ற விதுரன்-போலே,நெறி ளோர்க ளெல்லாம்
வாயை மூடி விட்டார்;-தங்கள்,மதி மயங்கி விட்டார்.  183

அந்த வேளை யதனில்-ஐவர்க் கதிபன் இஃதுரைப்பான்;
பந்த யங்கள் சொல்வாய்;-சகுனி பரபரத் திடாதே!
விந்தை யான செல்வம்-கொண்ட,வேந்த ரோடு நீ தான்
வந்தெ திர்த்து விட்டாய்;-எதிரே,வைக்க நிதியமுண் டோ? 184

தருமன் வார்த்தை கேட்டே-துரியோதன னெழுந்து சொல்வான்
அருமையான செல்வம்-என்பால்,அளவிலாத துண்டு
ஒரு மடங்கு வைத்தால்-எதிரே,ஒன்ப தாக வைப்பேன்;
பெருமை சொல்ல வேண்டா,-ஐயா!பின் னடக்குகென்றான். 185

ஒருவ னாடப் பணயம்-வேறே,ஒருவன் வைப்ப துண்டோ?
தரும மாகு மோடா!-சொல்வாய்,தம்பி இந்த வார்த்தை?
வரும மில்லை ஐயா;-இங்கு,மாம னாடப் பணயம்
மருகன் வைக் கொணாதோ?-இதிலே வந்த குற்றமேதோ? 186

பொழுதுபோக்கு தற்கே-சூதுப் போர் தொடங்குகின்றோம்;
அழுத லேதிற்கே?-என்றே,அங்கர் கோன் நகைத்தான்.
பழு திருப்ப தெல்லாம்-இங்கே பார்த்திவர்க் குரைத்தேன்;
முழுது மிங் கிதற்கே-பின்னர்,முடிவு காண்பிர்என்றான். 187

ஒளி சிறந்த மணியின்-மாலை,ஒன்றை அங்கு வைத்தான்;
களி மிகுந்த பகைவன்-எதிரே,கன தனங்கள் சொன்னான்;
விழி இமைக்கு முன்னே-மாமன் வென்று தீர்த்து விட்டான்;
பழி இலாத தருமன்-பின்னும்,பந்தயங்கள் சொல்வான்; 188

ஆயிரங் குடம்பொன் -வைத்தே,ஆடுவோமிதென்றான்;
மாயம் வல்ல மாமன்-அதனை,வசம தாக்கி விட்டான்;
பாயுமா வொரெட்டில்-செல்லும்.பார மான பொற்றேர்;
தாய முருட்ட லானார்;-அங்கே,சகுனி வென்று விட்டான். 189

இளைய ரான மாதர்,-செம்பொன்,எழி லிணைந்த வடிவும்
வளை அணிந்த தோளும்-மாலை,மணி குலுங்கு மார்பும்
விளையு மின்ப நூல்கள்-தம்மில்,மிக்க தேர்ச்சி யோடு
களை இலங்கு முகமும்-சாயற்,கவினும் நன்கு கொண்டோர், 190

ஆயிரக் கணக்கா-ஐவர்க்,கடிமை செய்து வாழ்வோர்;
தாய முருட்டலானார்;-அந்தச்,சகுனி வென்று விட்டான்.
ஆயிரங்க ளாவார்-செம்பொன்,னணிகள் பூண்டிருப்பார்
தூயிழைப் பொனாடை-சுற்றுந்,தொண்டர் தம்மை வைத்தான்; 191

சோரனங் கவற்றை-வார்த்தை,சொல்லு முன்னர் வென்றான்.
தீர மிக்க தருமன்-உள்ளத்,திட னழிந் திடாதே,
நீரை யுண்ட மேகம்-போலே நிற்கு மாயிரங்கள்
வாரணங்கள் கண்டாய்-போரில்,மறலி யொத்து மோதும் 192

என்று வைத்த பணயந்-தன்னை,இழிஞன் வென்று விட்டான்;
வென்றி மிக்க படைகள்-பின்னர்,வேந்தன் வைத் திழந்தான்;
நன்றிழைத்த தேர்கள்-போரின்,நடை யுணர்ந்த பாகர்
என் றிவற்றை யெல்லாம்-தருமன்,ஈடு வைத் திழந்தான். 193

எண் ணிலாத,கண்டீர்,-புவியில்,இணை யிலாத வாகும்
வண்ண முள்ள பரிசுகள்-தம்மை,வைத் திழந்து விட்டான்;
நண்ணு பொற் கடாரந்-தம்மில்,நாலு கோடி வைத்தான்;
கண்ணி ழப்பவன் போல்-அவையோர்,கண மிழந்து விட்டான் 194

மாடி ழந்து விட்டான்,-தருமன்,மந்தை மந்தை யாக;
ஆடி ழந்து விட்டான்-தருமன்,ஆளிழந்து விட்டான்;
பீடிழந்த சகுனி-அங்கு,பின்னுஞ் சொல்லுகின்றான்;
நாடிழக்க வில்லை,-தருமா!நாட்டை வைத்திடென்றான். 195

38. நாட்டை வைத்தாடுதல்
 
வேறு

ஐய கோஇதை யாதெனச் சொல்வோம்?
அரச ரானவர் செய்குவ தொன்றோ?
மெய்ய தாகவோ மண்டலத் தாட்சி
வென்று சூதினி லாளுங் கருத்தோ?
வைய மிஃது பொறுத்திடு மோ,மேல்
வான் பொறுந் திடுமோபழி மக்காள்!
துய்ய சீர்த்தி மதிக்குல மோ நாம்?
தூ! வென் றெள்ளி விதரனும் சொல்வான்,. 196

பாண்ட வர்பொறை கொள்ளுவ ரேனும்,
பைந்து ழாயனும் பாஞ்சாலத் தானும்
மூண்ட வெஞ்சினத் தோடுநஞ் சூழல்
முற்றும் வேர றச் செய்குவ ரன்றோ?
ஈண்டி ருக்குங் குருகுல வேந்தர்
யார்க்கு மிஃதுரைப் பேன்,குறிக் கொண்மின்;
மாண்டு போரில் மடிந்து நரகில்
மாழ்கு தற்கு வகைசெயல் வேண்டா 197

குலமெ லாமழி வெய்திடற் கன்றோ
குத்தி ரத்துரி யோதனன் றன்னை
நலமி லாவிதி நம்மிடை வைத்தான்;
ஞால மீதி லவன் பிறந் தன்றே
அலறி யோர்நரி போற்குரைத் திட்டான்;
அஃது ணர்ந்த நிமித்திகர் வெய்ய
கலகந் தோன் றுமிப் பாலக னாலே
காணு வீரெனச் சொல்லிடக் கேட்டோம். 198

சூதிற் பிள்ளை கெலித்திடல் கொண்டு
சொர்க்க போகம் பெறுபவன் போலப்
பேதை நீயு முகமலர் வெய்திப்
பெட்பு மிக்குற வீற்றிருக் கின்றாய்;
மீது சென்று மலையிடைத் தேனில்
மிக்க மோகத்தி னாலொரு வேடன்
பாத மாங்கு நழுவிட மாயும்
படும லைச்சரி வுள்ளது காணான். 199

மற்று நீருமிச் சூதெனுங் கள்ளால்
மதிம யங்கி வருஞ்செயல் காணீர்!
முற்றுஞ் சாதி சுயோதன னாமோர்
மூடற் காக முழுகிட லாமோ?
பற்றுமிக்க இப்பாண்டவர் தம்மைப்
பாத கத்தி லழித்திடு கின்றாய்;
கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே!
கடலிற் காயங் கரைத்ததொப் பாமே? 200

வீட்டு ளேநரி யைவிடப் பாம்பை
வேண்டிப் பிள்ளை எனவளர்த் திட்டோம்;
நாட்டு ளேபுக ழோங்கிடு மாறிந்
நரியை விற்றுப் புலிகளைக் கொள்வாய்;
மோட்டுக் கூகையைக் காக்கையை விற்று
மொய்ம்பு சான்ற மயில்களைக் கொள்வாய்;
கேட்டி லேகளி யோடுசெல் வாயோ?
கேட்குங் காதும் இழந்துவிட் டாயோ? 201

தம்பி மக்கள் பொருள் வெஃகு வாயோ
சாதற் கான வயதினில் அண்ணே?
நம்பி நின்னை அடைந்தவ ரன்றோ?
நாத னென்றுனைக் கொண்டவ ரன்றோ?
எம்பி ரானுளங் கொள்ளுதி யாயின்
யாவுந் தான மெனக்கொடுப் பாரே;
கும்பி மாநரக கத்தினி லாழ்த்துங்
கொடிய செய்கை தொடர்வதும் என்னே? 202

குருகு லத்தலை வன்சபைக் கண்ணே,
கொற்ற மிக்க துரோணன் கிருபன்
பெருகு சீர்த்தி அக் கங்கையின் மைந்தன்
பேதை நானும் மதிப்பிழந் தேகத்
திருகு நெஞ்சச் சகுனி ஒருவன்
செப்பு மந்திரஞ் சொல்லுதல் நன்றே!
அருகு வைக்கத் தகுதியுள் ளானோ?
அவனை வெற்பிடைப் போக்குதி அண்ணே! 203

நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம்
நேரு மென்று நினைத்திடல் வேண்டா,
பொறி இழந்த சகுனியின் சூதால்
புண்ணி யர்தமை மாற்றல ராக்கிச்
சிறியர் பாதகர் என்றுல கெல்லாம்
சீஎன் றேச உகந்தர சாளும்
வறிய வாழ்வை விரும்பிட லாமோ?
வாழி,சூதை நிறுத்துதிஎன்றான்.  204

(சூதாட்டச் சருக்கம் முற்றும்)

முதற்பாகம் முற்றிற்று.

 
மேலும் முப்பெரும் பாடல்கள் »
temple news
1. கண்ணன் - என் தோழன் (புன்னாகவராளி - திஸ்ரஜாதி ஏகதாளம்)வத்ஸல ரசம் 1. பொன்னவிர் மேனிச் சுபத்திரை ... மேலும்
 
மூன்றாவது அடிமைச் சருக்கம் 39. பராசக்தி வணக்கம் ஆங்கொரு கல்லை வாயிலிற் படி என்றமைத்தனம் சிற்பி, மற் ... மேலும்
 
temple news
1. குயில் காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலேநீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்மோகனமாஞ் சோதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar