பதிவு செய்த நாள்
14
ஜூலை
2018
02:07
ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில் தேருக்கு, 7.50 லட்சம் ரூபாய் செலவில், டிஸ்க் பிரேக்குடன் இரும்பு சக்கரங்கள் தயார் செய்யும் பணிகள் நடைபெறு கின்றன.
ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், ஆண்டுக்கு இரண்டு முறை தேர் பவனி நடைபெறுவதால், தேரின் சக்கரங்கள் பழுதடைந்துள்ளன. இதனால், தேரை இயக்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது.இதையடுத்து, ஆதிகேசவப் பெருமாள் கோவில் தேரின் நான்கு மரச் சக்கரங்களையும் மாற்றி, இரும்பு சக்கரம் அமைக்க திட்ட மிடப்பட்டது. ராணிபேட்டை, பெல் நிறுவனத்தில், தேருக்கான இரும்பு சக்கரம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.
இதுகுறித்து, கோவில் அதிகாரிகள் கூறுகையில், தேரின் நான்கு சக்கரங்களும், 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கும் பணி நடைபெறுகிறது. நான்கு இரும்பு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட உள்ளது. இதனால், தேரை சிரமமின்றி, எளிமையாக கட்டுப்படுத்தலாம். இரும்பு சக்கரங்கள், ஒரு சில மாதங்களில் பொருத்தப்படும் என்றார்.
தேர் கூண்டு பணிக்கு, டெண்டர் அறிவிப்பு:
ஆதிகேசவப் பெருமாள் கோவில் தேர் கூண்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சாலை விரிவாக்கம் பணியின் போது அகற்றப்பட்டது. அதன் பின், மீண்டும் தேர் கூண்டு அமைக்கப்படவில்லை. இதனால், தேர் மழையிலும், வெயிலிலும் காய்ந்து வீணாகி வந்தது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்திகளும் வெளியிடப்பட்டன. இந்நிலையில், 23 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் கூண்டு அமைக்க, இந்து அறநிலைய துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான டெண்டர், 19ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து, விரைவில் தேர் கூண்டு அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது.