பதிவு செய்த நாள்
16
ஜூலை
2018
04:07
திருவாரூர்:திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவில். இக்கோவிலில், நவகிரகங்கள், ருணவிமோசகர், துர்க்கை அம்மன் சன்னதிகளில், தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபடுவர். இந்து சமய அறநிலையத்துறை , கோவில்களில், நெய், எண்ணெய் விற்க தடைவிதித்துள்ளது. ஆதலால்,கோவில் உட்பிரகாரத்தில் எண்ணெய் விற்பது நிறுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள், வெளியில் இருந்து எண்ணெய் வாங்கி வந்து, தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். கோவில்களில் தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டதை அறியாத பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். பக்தர்கள் கூறுகையில்,‘திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்’ என்றனர். இதேபோல், நவக்கிரக ஸ்தலமான, திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், குருபகவானுக்கு தனிசன்னதி உள்ளது. இக்கோவிலில், 24 நெய்தீபங்கள் ஏற்றி, 24 முறை வலம் வந்து, ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான் உள்ளிட்ட சன்னதிகளில் தரிசனம் செய்தால், வேண்டுவோருக்கு வேண்டும் அருள் கிட்டும் என்பது ஐதீகம். குருபகவானுக்கு உகந்த நாளான, வியாழக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் என, திரளானோர், இக்கோவிலுக்கு வருகை தந்து, 24 நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவது வழக்கம். ஆனால், கோவில்களில், நெய் தீபங்கள் ஏற்ற தடை செய்யப்பட்டதை ஒட்டி, கடந்த, 1ம்தேதி முதல், இக்கோவிலில், நெய்தீபம் ஏற்ற அனுமதி இல்லை. இதனால், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பக்தர்களின் நலன் கருதி, ஆலங்குடிகோவிலில், நெய்தீபம் ஏற்ற விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என,பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.