பதிவு செய்த நாள்
21
ஜூலை
2018
10:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர பிரமோற்சவம் ஆக., 4ல், கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை, 6:00 மணி முதல் 7:00 மணி வரை, உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடிமரத்தில், ஆடிப்பூரம் பிரமோற்சவ கொடியேற்றம் நடக்கிறது. அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். ஆக., 12 வரை தினமும் காலை மற்றும் இரவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன், அலங்கார ரூபத்தில் மாடவீதி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். நிறைவாக ஆக., 13 காலை கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில், பராசக்தி அம்மன் தீர்த்தவாரியும், பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் நடக்கும். அன்று மாலை அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், இரவு காமதேனு வாகனத்தில் வீதி உலா, நள்ளிரவு, 12:00 மணிக்கு அம்மன் சன்னதி எதிரில் தீமிதி விழா நடக்கும்.