“தாயே! நீங்கள் மனம் வைத்தால் இந்த உலகில் தீமையை முற்றிலும் நீங்கும் அல்லவா? அழுகையையும் சோகத்தையும் அழித்து விடலாம் அல்லவா? அந்த வல்லமை இருந்தும் எங்களை ஏன் அழ வைக்கிறீர்கள்? எங்களை ஏன் வலியால் துடிக்க வைக்கிறீர்கள்?” “எல்லாம் கர்மக் கணக்கு” “நன்மை செய்தால் நன்மை விளையும் தீமை செய்தால் தீமை விளையும். அது சரி. ஆனால் தீமை செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏன் உண்டாகிறது? எல்லோரும் ஒருகாலத்தில் நல்லவர்களாகத் தானே இருந்திருப்பார்கள்? அந்தச் சமயத்தில் யாருக்கோ தீமை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரக் காரணம்.?” “அந்தக் கேள்விக்கு முக்தி நிலையில் தான் விடைதெரியும்.” மீனாட்சியம்மன் கோயில் ஆடிவீதியில் அவ்வளவாகக் கூட்டமில்லாத இடத்தில் ஒரு சிறிய மேடையில் பச்சைப் புடவைக்காரி அமர்ந்திருக்க, தரையில் அவள் காலடியில் நான்.. என் முகவாட்டத்தைப் பார்த்து இளகினாள் அன்னை.
“உனக்குப் புரியும் வகையில் செய்முறை விளக்கம் தருகிறேன். கண்ணை மூடிக்கொள்” ஒரு புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் தன் குழுவோடு என் வீட்டிற்கு வந்திருந்தார். “வரலொட்டி நீங்க எழுதின ஒரு நல்ல நாவலைத் திரைப்படமா எடுக்கலாம்னு நெனைக்கறேன். கதை ரொம்ப அழுத்தமா இருக்கணும். கதையில முக்கியமான பாத்திரம் ஒரு பொண்ணு. அவ சந்திக்கற அவமானங்களை, தோல்விகளை, துரோகங்களைப் பத்திச் சொல்லணும். முடிவு சுபமா இருக்கணும்” கதையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று நாற்பது பக்க ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவர்கள் சொன்னமாதிரி நான் ஏற்கனவே எழுதியிருந்த நாவல் ஒன்றைக் கொடுத்தேன். கதை பற்றிய விவாதங்களில் பங்கு கொண்டேன். ஒரு கட்டத்தில் கதாநாயகி தன் தந்தையை இழந்து, காதலனால் வஞ்சிக்கப்பட்டு. நம்பிய நண்பனால் கற்பழிக்கப்பட்டு .. என்று கதை எப்படியெல்லாமோ செல்கிறது.“இவ்வளவு சோகம் வேணுமா சார்?” என்று இயக்குனர் பலமுறை கேட்டுவிட்டார். “இந்த சோகம் தான் கதைக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது.. தயவு செய்து இந்த இடத்த மாத்தாதீங்க. நான் என்ன எழுதியிருக்கேனோ அப்படியே கதைய எடுங்க.”
எவ்வளவோ மன்றாடிப் பார்த்தார்கள். மூர்க்கத்தனமாக மறுத்தேன். அந்த சோகமான காட்சியைப் படம் பிடிக்கும்போது நான் அங்கு இருந்தேன்ஒரு முன்னணி நடிகை தான் கதாநாயகி. படப்பிடிப்பு தொடங்கும் முன் என்னைப் பார்க்க வந்தாள்.. “அடி, உதை, நம்பிக்கைத் துரோகம், கற்பழிப்பு, வன்முறை. என்னால தாங்கமுடியல. சார்.. உங்க கால்ல விழுந்து கேக்கறேன். கதையில இருக்கற சோகத்தைக் கொஞ்சம் குறைச்சிருங்களேன். இடையில ரெண்டு, மூணு டூயட் பாட்டுக்கு ஏற்பாடு செய்யுங்களேன்”அடுத்த நொடி என் காலில் விழுந்துவிட்டாள். எனக்கு என்னவோ போலாகி விட்டது. கதையில் சோகம் இருப்பது உண்மைதான். ஆனால் அந்த சோகத்தின் பின்னணியில் தான் நான் சில வாழ்வியல் உண்மைகளை அழுத்தமாகச் சொல்லமுடியும். எல்லோராலும் வஞ்சிக்கப்படும் கதாநாயகி கடைசியில் ஒரு நல்ல மனிதரோடு சேர்ந்து வாழ்கிறாள். அந்த நல்ல மனிதரைத் தேர்ந்தெடுக்கும் அறிவு, அடுத்தவருக்கு உதவி செய்யும் எளிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் ஞானம் எல்லாமே இந்த சோகத்தால் தான் வருகிறது. “பாக்கறேன்...”என்று பொதுப்படையாகச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றேன். இயக்குனரை போனில் அழைத்துக் கதையில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டேன்.
அடுத்த முறை நான் படப்பிடிப்பு பார்க்கச் சென்றபோது கதாநாயகி என்னைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.. யாரோ ஒரு துணை நடிகையைத் திட்டுவதுபோல் என்னை மறைமுகமாகத் திட்டித் தீர்த்தாள். எனக்குச் சிரிப்புதான் வந்தது. ஒருவழியாகப் படம் வெளியானது. பிரமாதமான வரவேற்பு. ஏ, பி, சி என்று எல்லா சென்டர்களிலும் நல்ல வசூல். வலுவான கதை, நல்ல நடிப்பு, அழுத்தமான வசனங்கள். அழகான ஒளிப்பதிவு... என்று பத்திரிகைகள் புகழாரம் பாடின. அந்த நடிகைக்குத் தேசிய அளவில் விருது கிடைக்கும் என்று பேசிக்கொண்டார்கள். அந்த நடிகையின் பேட்டியைப் படித்தேன். “நடிக்கக் கஷ்டமாத்தான் இருந்துச்சி. கதைய எழுதினவர்கிட்டக் கதையக் கொஞ்சம் மாத்துங்கன்னு கால்ல விழுந்து கெஞ்சினேன். முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாரு. அதனாலதான் என் நடிப்புத் திறமையக் காட்ட நல்ல வாய்ப்புக் கெடச்சிது, எனக்குத் தேசிய விருது கெடைச்சா அதைக் கதாசிரியர் கால்ல வச்சி வணங்குவேன். இது சத்தியம்.”
சில்லென்று என் முகத்தில் பட்ட நீர் என்னை நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்தது. ஆடிவீதி. முன்னால் பச்சைப்புடவைப் பேரழகி. அவள் முகத்தில் குறும்புச் சிரிப்பு. அட ராமா! எல்லாமே கனவா! எதுவுமே உண்மையில்லையா? “கனவுதான் ஆனால் உண்மை. அந்த நடிகை உன் காலில் விழுந்து கதறினாளே அப்படியும் அவள் சோகத்தை நீ ஏன் குறைக்க வில்லை? நீ நினைத்தால் கதையை மாற்றியமைத் திருக்கலாமே!” “அப்படிச் செய்திருந்தால் இந்த அளவிற்குப் படம் வெற்றியடைந் திருக்காது. நடிகைக்குத் தன் பாத்திரத்தின் சோகம் மட்டும்தான் தெரியும். கதையை எழுதிய எனக்குத்தான் எல்லாப் பாத்திரங் களையும் தெரியும். கதையின் முதலும் முடிவும் தெரியும். அந்தக் கதையில் அவள் பங்கு என்னவென்பதும் தெரியும்.” “நீ நான்கைந்து பாத்திரங்களை வைத்துக்கொண்டு கதை எழுதுகிறாய். நான் நான்காயிரம் கோடிப் பாத்திரங்களை வைத்துக்கொண்டு இந்தப் பிரபஞ்சம் என்னும் மாபெரும் கதையை எழுதிக் கொண்டிருப்பவள். என் பாத்திரங்களுக்கு அவர்கள் அனுபவிக்கும் சோகம் மட்டும்தான் தெரியும். அதனால் அவர்கள் பெறப்போகும் ஞானமும் இன்பமும் எனக்குத்தான் தெரியும். எனக்கு மட்டும்தான் கதையின் முடிவு தெரியும். உன்னிடம் கதையை மாற்று என்று கெஞ்சியதுபோல் என்னிடமும் கெஞ்சுகிறார்கள். நான் என்ன செய்யட்டும்? அந்த நடிகை உன்னை ஏசியதுபோல் என்னையும் ஏசுகிறார்கள்.
முழு உண்மை தெரிந்தவுடன் அந்த நடிகை நெகிழ்கிறாள். அதுபோல்தான் கடைசிக்காலத்தில் நீங்களும் செய்யத்தான் போகிறீர்கள்...” “தாயே, என் கதை கடைசியில் சுபமாக முடிகிறது. உங்கள் கதையில் பலர் வாழ்க்கை சோகமாகவே முடிந்துவிடுகிறதே.” “என் கதையில் எல்லா முடிவும் சுபம்தான். முடிவு சுபமில்லை என்றால் அது முடிவேயில்லை என்று புரிந்து கொள்” அந்தப் பேரழகியின் கால்களில் வேரறுந்த மரம்போல் வீழ்ந்தேன். - வரலொட்டி ரெங்கசாமி