அத்தப்பூக்கோலம், அறுசுவை விருந்து.. ஓணத்தை வரவேற்ற கேரள மாணவிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2018 11:08
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தின் பொங்கல் மற்றும் தீபாவளி திருநாட்களைப்போல் கேரள மக்களின் முக்கிய திருநாள் ஓணம் பண்டிகை. இறைவன் கேட்ட வரத்தை நிறைவேற்றுவதற்காக தன்னையே அர்ப்பணித்த மலையாள மன்னன் மகாபலி, ஆண்டிற்கு ஒருமுறை தன் மக்களை காண வீடுதேடி வரும் நன்னாளே திரு ஓணப்பண்டிகையாகும்.
10 நாட்கள் கொண்டாடபடும் இத்திருநாளில் தங்களை தேடி வரும் மன்னவனை, ஜாதி மத பேதமின்றி மிகுந்த மனநிறைவுடனும், அளவில்லா மகிழ்ச்சியுடனும் மக்கள் வரவேற்று மகிழ்கின்றனர். அன்றைய தினம் தங்களுடைய நண்பர்கள், உறவினர்களை அழைத்து அறுசுவை உணவு பரிமாறி அன்பை பரிமாறிக்கொள்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்க ஓணம் திருநாள், மழையால் கேரளா பாதிக்கப்பட்ட நிலையில் களை இழந்து காணப்படுகிறது. இந்நிலையில், கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்லுாரியில் படிக்கும் கேரளாவின் பல்வேறு நகரங்களை சேர்ந்த மாணவிகள், தமிழகத்தை சேர்ந்த தங்கள் கல்லுாரித்தோழிகளுடன் ஓணத்தை வரவேற்கும் விதமாக பாரம்பரிய உடையணிந்து, அத்தப்பூ கோலமிட்டு, விளக்கேற்றி, நடனமாடி வரவேற்று மகிழ்ந்தனர். ஓணம் பண்டிகையையொட்டி கோவை சித்தாபுதூர் ஐய்யப்பன் கோவில் அத்தி பூ கோலமிட்டு ஏராளமான பெண்கள் வழிபாடு செய்தனர்.