பதிவு செய்த நாள்
27
ஆக
2018
12:08
திருத்தணி : திரவுபதியம்மன் கோவிலில், நேற்று நடந்த தீமிதி விழாவில், 1,000 பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், 73வது ஆண்டு தீமிதி திருவிழா, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும், காலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகமும், மாலை, 3:00 - 6:00 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், இரவு, 10:00 மணிக்கு, நாடகமும் நடந்தது.நேற்று காலை, 9:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மதியம், 12:00 மணிக்கு, அக்னி குண்டத்தில் தீ முட்டல் நிகழ்ச்சியை தொடர்ந்து, மாலை, 6:30 மணிக்கு, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீமிதித்தனர். இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை, 11:00 மணிக்கு, தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது.