வீட்டில் தங்கும் விருந்தினர்களுக்கு தானே முன் நின்று தேவையான பணிவிடைகளை செய்ய நபிகள் நாயகம் விரும்புவார். ஒருமுறை யூத இனத்தை சேர்ந்த ஒருவன் விருந்தினராக வந்த போது, அவன் நிம்மதியாக தூங்க தலையணை, படுக்கையை வற்புறுத்தி கொடுத்து ஏற்கச் செய்தார். ஆனால் அவனோ படுக்கையை அசுத்தப்படுத்தி விட்டான். அதற்காக நாயகம் வருந்தவில்லை. தன் கைகளாலேயே அசுத்தம் அகற்றி தூய்மைப்படுத்தினார். வேறொரு சமயம், விருந்தாளியாக வந்த ஒருவனுக்கு ஆட்டுப்பால் கொடுத்தார். அவன் குடித்து விட்டு மேலும் எதிர்பார்த்தான். இன்னொரு முறையும் பால் கொடுத்தார். இப்படியாக அவன் திருப்தியுடன் போதும் என்று சொல்லும் வரை ஏழு ஆடுகளில் இருந்து பால் கறந்து கொடுத்தார். முகமலர்ச்சியுடன் அவனை வழியனுப்பியும் மகிழ்ந்தார். விருந்தினரை உபசரிப்பதில் நாயகத்திற்கு நிகரானவர் யாருமில்லை. அவர் வழியில் நாமும் மற்றவரை உபசரித்து மகிழ்வோம்.